“இந்தியன் 2′  கதைக்கரு 3 ஆண்டுகளுக்கு முன்பே உருவானது!” – இயக்குனர் ஷங்கர்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதி நாளான சனிக்கிழமையன்று, நடிகர் கமல்ஹாசனுடன் இயக்குனர் ஷங்கர், தயாரிப்பாளர் தில் ராஜூ ஆகியோரும் கலந்துகொண்டு, ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கவுள்ள ‘இந்தியன் 2’  படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டனர்.

அப்போது பேசிய ஷங்கர், ‘இந்தியன்’ 2ஆம் பாகம் உருவாக்கப் போகிறோம். ஒவ்வொரு படம் முடிவடையும்போதும், அதன் 2ஆம் பாகம் எடுக்க வேண்டும் என யோசிப்பேன். ஆனால், கதை சரியாக அமையாது.

3 வருடங்களுக்கு முன்பாக இந்தியன் 2’ படத்தின் கதைக்கரு உருவானது. அப்போது மற்ற படத்தின் பணியில் இருந்தேன். 2 ஆண்டுகளுக்கு முன்பு அந்த கதைக்கருவை முழுமையாக சரிசெய்து, அதை இப்போது செய்தே ஆக வேண்டும் என்ற உந்துதல் வந்தது. ‘2.0’ ஆரம்பிக்கும்போது கூட எனது அடுத்த படம் ‘இந்தியன் 2’ என்று உள்மனது சொல்லிக்கொண்டே இருந்தது. அது தற்போது நடப்பது ரொம்ப சந்தோஷம்” என்றார்..