செகண்ட் கேஸ் ஆஃப் சீதாராம் – விமர்சனம்
நடிப்பு: விஜய ராகவேந்திரா, கோபாலகிருஷ்ண தேஷ்பாண்டே, உஷா பண்டாரி மற்றும் பலர்
எழுத்து & இயக்கம்: தேவிபிரசாத் ஷெட்டி
ஒளிப்பதிவு: ஹேமந்த்
படத்தொகுப்பு: ஷஷாங்க் நாராயணா
இசை: நவனீத் ஷாம்
கலை: பவானி ஷங்கர் அனேகல்
தயாரிப்பு: தேவிபிரசாத் ஷெட்டி & சாத்விக் ஹெப்பார்
இணை தயாரிப்பு: அரவிந்த் ஷெட்டி
வழங்கல்: பவன் வடேயர் & ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்
பத்திரிகை தொடர்பு: ஸ்ரீ வெங்கடேஷ்
கன்னட திரையுலகில் பிரசித்தி பெற்ற இயக்குநராகத் திகழ்பவர் தேவிபிரசாத் ஷெட்டி. ’புலனாய்வுத் திரில்லர்’ ஜானர் திரைப்படங்களை இயக்குவதில் வல்லவரான இவர், 2021-ல் வெளியான ‘சீதாராம் பினாய் கேஸ் நம்பர் 18’ என்ற வெற்றிப்படத்தை எழுதி, இயக்கி, அறிமுக இயக்குநர் ஆனார். 2024-ல் வெளியான ‘கேஸ் ஆஃப் கொண்டனா’ என்ற வெற்றிப்படத்தை எழுதி, இயக்கி, பெரும்புகழ் பெற்றார். தற்போது கன்னட திரையுலகின் முன்னணி நடிகர் விஜய ராகவேந்திரா நடிப்பில், தேவிபிரசாத் ஷெட்டி எழுதி இயக்கியிருக்கும் ‘செகண்ட் கேஸ் ஆஃப் சீதாராம்’ என்ற திரைப்படம் கன்னடத்தில் உருவாகி, தமிழிலும் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த திரைப்படம் எப்படி இருக்கிறது? பார்ப்போம்…
கர்நாடக மாநிலத்தில் மலையோரம் உள்ள நகரம் அனேகடா. இங்குள்ள போலீஸ் நிலையத்தில் நாயகன் சீதாராம் (விஜய ராகவேந்திரா) இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்.
இவருடைய அதிகார எல்லைக்கு உட்பட்ட பகுதியில், நடுத்தர வயது ஆண்கள் அடுத்தடுத்து கொலை செய்யப்படுகிறார்கள். கொல்லப்பட்டவர்கள் அனைவரும் ஒரே பாணியில், உடல் முழுவதும் இரும்பாலான முள்கம்பியை இறுக்கமாகச் சுற்றியும், மார்பில் ஆணி அடித்தும் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இந்த மாதிரி கொடூரமாகக் கொலைகளைச் செய்பவன் கண்டிப்பாக மனநலம் பாதிக்கப்பட்ட சைக்கோவாகத் தான் இருக்க வேண்டும் என போஸ்ட்மார்டம் செய்த மருத்துவர் கூறுகிறார்.
சீரியல் கில்லர் பற்றிய பயம் நகர் முழுக்கத் தொற்றிக் கொள்கிறது. “ஆண்கள் யாரும் துணையில்லாமல் வெளியே செல்ல வேண்டாம். பாதுகாப்பாக இருக்கும்படி பொதுமக்களைக் கேட்டுக் கொள்கிறோம்” என்று ஆட்டோவில் ஒலிபெருக்கியைக் கட்டி தெருத் தெருவாக போலீஸ் எச்சரிக்கிறது. சீரியல் கில்லரைப் பிடிக்க தீவிர விசாரணையில் இறங்குகிறார் இன்ஸ்பெக்டர் சீதாராம்.

இந்நிலையில், முன்னாள் ஆசிரியரான செபாஸ்டியன் (கோபாலகிருஷ்ண தேஷ்பாண்டே) இன்ஸ்பெக்டர் சீதாராமின் உதவியை நாடி போலீஸ் நிலையம் வருகிறார். தன் மகளை ஓர் இளைஞன் அடிக்கடி தொந்தரவு செய்வதாகவும், அவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறார். அவர் போனபிறகு, அங்கிருக்கும் போலீஸ்காரர் ஒருவர், “சார், இவர் மனநிலை சரியில்லாதவர். இவரது மகள் பல மாதங்களுக்கு முன்பே தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டாள். இருந்தும், அவள் உயிரோடு இருப்பதாக நினைத்துக் கொண்டு, இவர் இப்படி புகார் கொடுத்துக் கொண்டிருக்கிறார்” என்கிறார். அப்போது போலீஸ் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த இன்ஸ்பெக்டர் சீதாராமின் கைத்துப்பாக்கி மாயமாகியிருப்பது தெரிய வருகிறது. இது செபாஸ்டியனின் வேலை தான் என்று அவர் மீது சந்தேகம் ஏற்படுகிறது.
செபாஸ்டியனின் வீட்டுக்குச் சென்று பார்க்கையில், அவரிடம் தன் கைத்துப்பாக்கி இருப்பதைக் கண்டுபிடிக்கிறார் இன்ஸ்பெக்டர் சீதாராம். மேலும், அந்த வீட்டில் கொலை நிகழ்ந்திருக்கக் கூடும் என்று சந்தேகிக்கத் தக்க தடயங்கள் இருப்பதைப் பார்க்கிறார். செபாஸ்டியன் தான் சீரியல் கில்லர் என்ற முடிவுக்கு வரும்போது, செபாஸ்டியன் சீதாராமை நோக்கி கைத்துப்பாக்கியால் சுடுகிறார். சிறு காயத்துடன் தப்பிக்கும் சீதாராம், செபாஸ்டியனுடன் சண்டையிட்டு, அவரை கைது செய்கிறார்.
சீரியல் கில்லரை சிறைக்கு அனுப்பி விட்டோம் என்று இன்ஸ்பெக்டர் சீதாராம் நிம்மதிப் பெருமூச்சு விடுகையில், அவரது நிம்மதியைக் குலைக்கும் வகையில், படுகொலைச் சம்பவங்கள் தொடர்கின்றன. இப்போது கொல்லப்படுகிறவர்களும் முந்தைய பாணியில், உடல் முழுவதும் இரும்பாலான முள்கம்பியை இறுக்கமாகச் சுற்றியும், மார்பில் ஆணி அடித்தும் கொல்லப்பட்டிருக்கிறார்கள். சீரியல் கில்லர் இன்னும் வெளியில் தான் இருக்கிறான் என்ற பயங்கர உண்மையை இன்ஸ்பெக்டர் சீதாராமுக்கு இது உணர்த்துகிறது.
அவர் மேலும் தீவிர விசாரணையில் இறங்குகையில், கொல்லப்பட்டவர்கள் அனைவருக்கும் பெண் குழந்தை இருப்பதும், அந்த பெண் குழந்தைகள் அனைவரும் முறையாக சங்கீதம் கற்றுக்கொண்டிருப்பதும், சீரியல் கில்லர் ஒரு குறிப்பிட்ட நபரை கடத்துவதற்கு முன்பாக அவர் வீட்டின்முன் ஒரு சிறு வீணை பொம்மையை வைத்துவிட்டுச் செல்வதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறான் என்பதும் தெரிய வருகிறது.
இந்த துப்புகளை வைத்து சீரியல் கில்லரை தீவிரமாக தேடிக்கொண்டிருக்கையில், தனது சொந்த அக்காவின் (உஷா பண்டாரி) வீட்டு கேட் அருகே ஒரு சிறு வீணை பொம்மை வைக்கப்பட்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைகிறார் இன்ஸ்பெக்டர் சீதாராம். அக்காவிடம் சென்று, அவரது கணவரை பாதுகாப்பாகப் பார்த்துக்கொள்ளும்படி கூறுகிறார். ஆனால் அக்காவோ, தம்பி மீது இருக்கும் பழைய கோபத்தில் அவரை திட்டி அனுப்புகிறார். இருந்தாலும், சீதாராம் போலீசாரிடம் எச்சரிக்கையுடன் கண்காணிக்குமாறு கூறுகிறார். ஆனால், போலீஸ்காரர்கள் எச்சரிக்கையுடன் இருந்தும் அக்காவின் கணவர் அந்த சீரியல் கில்லரால் கடத்தப்படுகிறார்.
சீரியல் கில்லர் யார்? அவன் ஏன் கொடூரமான முறையில் கொலை செய்கிறான்? இறுதியில், இன்ஸ்பெக்டர் சீதாராம் அவனை கண்டுபிடித்து கைது செய்தாரா? தன் அக்காவின் கணவரை மீட்டாரா? என்பன போன்ற கேள்விகளுக்கு எதிர்பாராத திருப்பங்களுடன் விடை அளிக்கிறது ‘செகண்ட் கேஸ் ஆஃப் சீதாராம்’ திரைப்படத்தின் மீதிக்கதை.
கதையின் நாயகனாக, போலீஸ் இன்ஸ்பெக்டர் சீதாராமாக விஜய ராகவேந்திரா நடித்திருக்கிறார். நிதானமான மற்றும் நியாயமான விசாரணை அணுகுமுறை மூலமும், யதார்த்தமான நடிப்பு மூலமும் முழு படத்தையும் ஒற்றை நபராய் தன் தோளில் சுமந்து அசத்தியிருக்கிறார்.
மனநலம் குன்றிய முன்னாள் ஆசிரியர் செபாஸ்டியனாக கோபாலகிருஷ்ண தேஷ்பாண்டே சிறப்பாக நடித்திருக்கிறார். சீரியல் கில்லரோ என்று பார்வையாளர்களை சந்தேகப்பட வைத்து திசை திருப்புகிற கதாபாத்திரம் இது என்பதை நன்கு புரிந்துகொண்டு, அதற்கு ஏற்ற நடிப்பைப் பொருத்தமாக கொடுத்திருக்கிறார்.
நாயகனின் அக்காவாக வரும் உஷா பண்டாரி உள்ளிட்ட ஏனைய நடிப்புக் கலைஞர்களும் தத்தமது கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பை குறைவின்றி நிறைவாக வழங்கியிருக்கிறார்கள்.
இப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் தேவிபிரசாத் ஷெட்டி. தனது முந்தைய படங்களின் தொடர்ச்சி அறுபடாமல் பார்த்துக்கொண்ட அதேநேரத்தில், புதிதாக இந்தப் படத்தைப் பார்க்கிறவர்களும் ரசிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் திறம்பட செயல்பட்டிருக்கிறார். வசனங்கள், காட்சிகள், அவர் தேர்ந்தெடுத்த கதாபாத்திரங்கள் ஆகிய எல்லாமே அவருக்கு இணக்கமாக அமைந்திருப்பது அவருக்கு பலம். அடுத்து என்ன என்று பரபரப்புடன் எதிர்பார்க்க வைக்கும் வித்தை தெரிந்த இந்த இயக்குநருக்கு இது நிச்சயம் மற்றுமொரு வெற்றிப்படம்!
நவநீத் ஷாமின் இசையமைப்பு, ஹேமந்தின் ஒளிப்பதிவு, ஷஷாங்க் நாராயணாவின் படத்தொகுப்பு உள்ளிட்ட நேர்த்தியான தொழில்நுட்பங்கள் இயக்குநரின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்துள்ளன.
‘செகண்ட் கேஸ் ஆஃப் சீதாராம்’ – ’புலனாய்வு திரில்லர்’ விரும்பிகளுக்கு செம விருந்து!
ரேட்டிங்: 3.75/5.
