ரெட்ரோ – விமர்சனம்

நடிப்பு: சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், நாசர், பிரகாஷ் ராஜ், விது, கருணாகரன், ஸ்வாசிகா மற்றும் பலர்
எழுத்து & இயக்கம்: கார்த்திக் சுப்பராஜ்
ஒளிப்பதிவு: ஸ்ரேயாஸ் கிருஷ்ணா
படத்தொகுப்பு: ஷஃபிக் முகமது அலி
இசை: சந்தோஷ் நாராயணன்
தயாரிப்பு: 2டி எண்டர்டெயின்மெண்ட் & ஸ்டோன் பெஞ்ச்
தயாரிப்பாளர்கள்: ஜோதிகா – சூர்யா
தமிழக வெளியீடு: சக்தி ஃபிலிம் ஃபேக்டரி
பத்திரிகை தொடர்பு: யுவராஜ் – சதீஷ் (2)
’கங்குவா’ திரைப்படத்தின் அதிர்ச்சித் தோல்வியை அடுத்து, வெற்றி பெற்றே ஆக வேண்டிய அவசியத்தில் இருக்கும் நடிகர் சூர்யாவின் புதிய படம்; ‘ஜிகிர்தண்டா டபுள் எக்ஸ்’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் நம்பிக்கையுடன் இயக்கியுள்ள படம்; சமூக வலைத்தளங்கள் மற்றும் பட்டிதொட்டிகள் எங்கும் மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ள ‘கனிமா’ பாடல் இடம் பெற்றுள்ள படம் உள்ளிட்ட பல காரணங்களால் திரைத்துறையினர், ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படம் ‘ரெட்ரோ’. தற்போது உலகெங்கும் திரைக்கு வந்துள்ள இப்படம் அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்கிறதா? பார்ப்போம்…

தூத்துக்குடியில் மிகப் பெரிய தாதாவாகத் திகழ்கிறார் திலகன் (ஜோஜு ஜார்ஜ்). இவரது மனைவி சந்தியா (ஸ்வாசிகா). இவர்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லை. இவர்களிடம் வேலையாளாக இருந்தவர், திலகனின் எதிரிகளால் சுட்டுக் கொல்லப்பட, அவரது மகனான கைக்குழந்தை பாரிவேல் கண்ணன், பெற்றோரை இழந்து ஆதரவற்ற நிலைக்கு ஆளாகிறார். பிறக்கும்போதே நெஞ்சில் வேல் படம் தாங்கிப் பிறந்திருக்கும் அந்த குழந்தையை தத்தெடுத்து வளர்க்க விரும்புகிறார் சந்தியா. ஆனால் அவரது கணவர் திலகனோ, அது எளிய குடும்பத்துக் குழந்தை என்ற அருவருப்பில் தத்தெடுக்க விருப்பமின்றி இருக்கிறார். என்றாலும், தனது மனைவி விரும்புகிறார் என்பதற்காக அரை மனதுடன் சம்மதிக்கிறார். குழந்தை பாரிவேல் அவரை ”அப்பா” என்று அழைத்தால் “யாருடா உன் அப்பன்?” என்று கோபமாக எகிறுகிறார்.
சிரிக்கவே சிரிக்காத குழந்தையாக அது இருக்கிறது. “நீ சிரிச்சா அழகா இருப்பே” என்று வளர்ப்புத் தாய் வசந்தி எடுத்துச் சொல்லியும், பல்வேறு வழிகளில் முயன்றபோதிலும் அது சிரிக்க மறுக்கிறது.
சிறுவனாக பாரிவேல் வளர்ந்து வருகையில், உடல்நல பாதிப்பு காரணமாக மரணிக்கும் தறுவாயில் இருக்கும் வசந்தி அவனை அழைத்து, “எப்பவும் நீ அப்பாவை விட்டு போகக் கூடாது” என்று வேண்டிக்கொண்டு இறந்துபோகிறார். அவரது இறுதிச் சடங்குகளுக்காக காசிக்குப் போன இடத்தில் சிறுவன் பாரிவேலுக்கு ருக்மணி என்ற சிறுமியின் அறிமுகம் கிடைக்கிறது. “நீ சிரிச்சா அழகா இருப்பே” என்று – தனது வளர்ப்புத் தாயின் வார்த்தைகளை – அப்படியே சொல்லிவிட்டுப் போகும் அவளது முகம் சிறுவனின் மனதில் ஆழப்பதிந்துவிடுகிறது.
பின்னர் ஒரு கட்டத்தில் திலகனை அவரது எதிரிகள் கொல்ல முயலும்போது, சிறுவன் பாரிவேல் தனது இரும்புக்கை போன்ற பலம் வாய்ந்த கரங்களால் அவர்களை அடித்துத் துரத்தி அவரை காப்பாற்றுகிறான். இச்சம்பவத்தால் மனம் நெகிழ்ந்துபோகும் திலகன், பாரிவேலை தன் மகனாக ஏற்கிறார். என்றாலும், வெட்டு, குத்து, கடத்தல், உள்ளிட்ட சட்டவிரோத காரியங்களுக்கு தனது அடியாளாகவே அவரை பயன்படுத்திக்கொள்கிறார்.
சிறுவன் பாரிவேல் வளர்ந்து இளைஞன் (சூர்யா) ஆகிறார். அவர் சந்திக்கும் ஓர் இளம்பெண் (பூஜா ஹெக்டே) “நீ சிரிச்சா அழகா இருப்பே” என்கிறார். அவர் வேறு யாருமல்ல; சிறுவயதில் காசியில் தான் சந்தித்த ருக்மணி தான் அவர் என்பது பாரிவேலுக்குப் புரிகிறது. இருவரும் நட்பாகப் பழகுகிறார்கள். காதலர்களாக மாறுகிறார்கள். யுத்தத்தில் நம்பிக்கை கொண்ட கிருஷ்ண பரமாத்மாவைப் பின்பற்றுபவராக பாரிவேல் இருக்க, ருக்மணியோ, அகிம்சையை போதித்த புத்தரை பின்பற்றுபவராக இருக்கிறார். “நீ அடிதடியை விட்டுவிட்டு வந்தால், நாம் திருமணம் செய்துகொள்ளலாம்” என்கிறார் ருக்மணி. அவருடன் திருமண வாழ்க்கையில் நுழையும் ஆசையில் ரவுடியிசத்தை கைவிட்டு புது வாழ்க்கைக்குத் தயாராகிறார் பாரிவேல்.
ஆனால், பாரிவேலுக்கு திலகன் கொடுத்த கடைசி வேலையின்படி, தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து ஆப்பிரிக்காவுக்குக் கடத்தப்பட்ட, ’கோல்டு ஃபிஷ்’ என சங்கேத வார்த்தையால் குறிப்பிடப்படும் கடத்தல் பொருள் மாயமாகிவிடுகிறது. இது பாரிவேலின் வேலை தான் என்று நம்பும் திலகன், ‘கோல்ட் ஃபிஷ்’ இருக்கும் இடத்தை தெரிந்து கொள்வதற்காக பாரிவேல் – ருக்மணி திருமண விழா நடைபெறும் மண்டபத்துக்கு வருகிறார். தனது கேள்விக்கு பதில் சொல்ல பாரிவேல் மறுப்பதால் “ருக்மணியை கொன்றால் தான் நீ பதில் சொல்வாய்” என்றவாறு திலகன் கத்தியுடன் ருக்மணியை நெருங்க, காதலியை காப்பாறுவதற்காக மீண்டும் கத்தியை எடுக்கும் பாரிவேல், திலகனின் கையை வெட்டி வீழ்த்துகிறார். அவர் மீண்டும் வன்முறையில் இறங்கியது கண்டு ருக்மணி கோபமாக அங்கிருந்து வெளியேறுகிறார். திருமணம் தடை படுகிறது. பாரிவேல் சிறை செல்கிறார்.
சில வருடங்களுக்குப் பிறகு, ருக்மணி அந்தமானில் இருப்பது பாரிவேலுக்குத் தெரிய வருகிறது. சிறையில் அவர் சண்டை போடும் திறன் கண்டு அவரை தங்களுடன் சேர்த்துக்கொள்ள விரும்புகிறது ஒரு கும்பல். இதற்காக அவரை சிறையிலிருந்து தப்பிக்கச் செய்கிறது. ஆனால், அந்த கும்பலை அடித்து நொறுக்கிவிட்டு தப்பிக்கிறார் பாரிவேல். ஒரு பக்கம் அந்த கும்பல் தேட, இன்னொரு பக்கம் வளர்ப்பு தந்தை திலகனின் ஆட்கள் தேட, தன் காதலி ருக்மணியைத் தேடி அந்தமான் புறப்படுகிறார் பாரிவேல்.
அந்தமானில் அப்பாவி மக்களை கொத்தடிமைகளாக வைத்திருக்கும் கொடூர அதிகார வர்க்கத்துக்கும், பாரிவேலுக்கும் மோதல் வெடிக்கிறது.
இந்த மோதலில் பாரிவேல் வெற்றி பெற்றாரா? தனது காதலி ருக்மணியை அவர் கண்டுபிடித்தாரா? அவரை ருக்மணி ஏற்றுக்கொண்டாரா? பாரிவேலைத் தேடிக்கொண்டிருக்கும் கும்பலின் பின்னணி என்ன? வளர்ப்புத் தந்தை திலகன் தேடும் ‘கோல்ட் ஃபிஷ்’ என்ற கடத்தல் பொருள் தான் என்ன? என்பன போன்ற கேள்விகளுக்கு சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும் விடை அளிக்கிறது ‘ரெட்ரோ’ திரைப்படத்தின் மீதிக்கதை.

நாயகன் பாரிவேல் கண்ணனாக சூர்யா நடித்திருக்கிறார். தனது ரசிகர்களை முழுமையாக திருப்திபடுத்தும் வகையில் படம் முழுக்க அவரது ஆதிக்கம் தான். நாயகியை உருகி உருகி காதலிப்பது, எதிரிகளை ஓட ஓட விரட்டி பந்தாடுவது என இருவேறு பரிமாணத்தில் படம் முழுக்க ஆதிக்கம் செய்கிறார். மொத்தப் படத்தையும் ஒற்றை நபராக தன் தோளில் சிறப்பாக தாங்கிப் பிடித்திருக்கிறார். கண்ணுக்குக் குளிர்ச்சியான வெவ்வேறு கெட்டப்களில் தோன்றி, மிகை இல்லாத இயல்பான நடிப்பால் கவர்கிறார். தூத்துக்குடி வட்டார மொழியை ரொம்ப யதார்த்தமாகப் பேசி ரசிக்க வைத்திருக்கிறார். திருமண விழாவில் ஆட்டம், பாட்டம் என்று அவர் செய்திருக்கும் அமர்க்களத்தை திரும்பத் திரும்ப பார்த்து ரசிக்கலாம்.. சந்தேகம் இல்லாமல் ஒரு நடிகராக சூர்யாவுக்கு இது செம கம்பேக் தான். பாராட்டுகள் சூர்யா.
நாயகி ருக்மணியாக பூஜா ஹெக்டே நடித்திருக்கிறார். மேக்கப் இல்லாமல் இயல்பாகவே ரொம்ப அழகாக இருக்கிறார். அமைதியை விரும்பும் புத்தரின் கொள்கைகளைக் கடைப்பிடிக்கும் சாந்தமான கதாபாத்திரத்தில் கச்சிதமாகப் பொருந்தி, வாய்ப்பை அருமையாகப் பயன்படுத்தி, சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். அவருக்கும் சூர்யாவுக்கும் இடையிலான காதல் காட்சிகளில் கெமிஸ்ட்ரி அட்டகாசம்!
ஜோஜு ஜார்ஜ், ஸ்வாசிகா, நாசர், விது, பிரகாஷ்ராஜ், தமிழ் ஜெயராம், கருணாகரன், சிங்கம்புலி உள்ளிட்ட ஏனைய நடிப்புக் கலைஞர்களும் தத்தமது கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பை நிறைவாக வழங்கியிருக்கிறார்கள்.
இப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ். படத்தின் முதல் பாதியை சூர்யா படமாகவும், இரண்டாம் பாதியை இயக்குநராகிய தனது படமாகவும் பிரித்து மேய்ந்திருக்கிறார். காதல், நகைச்சுவை, ஆக்ஷன் ஆகியவை கலந்த கலவையாக திரைக்கதை அமைத்து, போரடிக்காமல், செயற்கையான பஞ்ச் வசனங்கள் இல்லாமல், சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும் படத்தை நகர்த்திச் சென்றுள்ளார். படத்தின் மொத்தக் கதையையும் ஆறு அத்தியாயங்களாகப் பிரித்து, அவற்றிற்கு லவ், நகைப்பு, யுத்தம், கல்ட், தி ஒன், தம்மம் என தலைப்பிட்டு, படத்துக்கு இலக்கியத் தரம் சேர்த்துள்ளார். வாழ்த்துகள் கார்த்திக் சுப்பராஜ்.
ஸ்ரேயாஸ் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு சிறப்பு. குறிப்பாக, நாயகன் – நாயகி திருமண விழாவில் வரும் 15 நிமிடக் காட்சியை ஒரே சிங்கிள் ஷாட்டில் எடுத்துள்ள விதம் பிரமிப்பு.
சந்தோஷ் நாராயணனின் இசையில் பாடல்கள் அருமை. ‘கனிமா’ பாடல் ஆட்டம் போட வைக்கிறது. பின்னணி இசை காட்சிகளுக்கு வலு சேர்த்திருக்கிறது.
ஸ்டண்ட் அமைப்பாளர் கீச்சா கம்பக்டே ஓவர்டைம் வேலை பார்த்து உழைப்பைக் கொட்டியிருக்கிறார்.
அந்தமான் பகுதியில் நடக்கும் காட்சிகளில் கலை இயக்குநர்கள் ஜாக்கி, மாயபாண்டி ஆகியோர் கூடுதலாக மெனக்கெட்டிருக்கிறார்கள்.
’ரெட்ரோ’ – சூர்யாவின் ஆக்ஷன் மற்றும் ஆடலுக்காகவும், கார்த்திக் சுப்பராஜின் இயக்கத்திற்காகவும் திரும்பத் திரும்ப பார்த்து ரசிக்கலாம்!
ரேட்டிங்: 3.5/5