2.22 கோடி குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் தலா ரூ.3000 ரொக்கம்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை சிறப்பாகக் கொண்டாடிட அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு பொங்கல் பரிசாக ரூ.3000 ரொக்கமாக வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று அறிவித்தார். மேலும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு நீளக்கரும்பும் வழங்கப்பட உள்ளது.
பொங்கல் திருநாளுக்கு முன்பாக ரொக்கப் பரிசும், பொங்கல் பரிசு தொகுப்பும், வேட்டி, சேலைகளும் வழங்க தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாட தமிழ்நாடு அரசு ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பை வழங்கி வருகிறது. கலைஞர் ஆட்சியில் 2009-ம் ஆண்டு இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது. இதன்படி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.
இந்த திட்டம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், ரொக்க பணத்துடன், அரிசி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்ட பொருட்களுடன் பொங்கல் பரிசை ஒவ்வொரு ஆண்டும் அரசு வழங்குகிறது. இந்நிலையில், கடந்த 2025ம் ஆண்டு பொங்கலையொட்டி தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழுக்கரும்பு வழங்கப்பட்டது. ரொக்கப் பணம் வழங்கப்படவில்லை. இந்த நிலையில் இந்தாண்டு பொங்கல் பண்டிகை வருகிற 15-ம் தேதி கொண்டாடப்படுகிறது.
பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாட மக்கள் தயாராகி வருகின்றனர். இந்த ஆண்டுக்கான பொங்கல் பரிசு தொகுப்புக்கு ரூ.248 கோடி நிதியை ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அண்மையில் அரசாணை வெளியிட்டது. ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு கொள்முதல் செய்வதற்காக இந்த தொகை ஒதுக்கப்பட்டுள்ளதாக கூட்டுறவுத் துறை தகவல் தெரிவித்தது.
தொடர்ந்து பொங்கல் பரிசு தொகுப்புடன் எவ்வளவு ரொக்க பணம் வழங்குவது என்பது குறித்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். ஆலோசனையின் முடிவில் ரூ.3 ஆயிரம் ரொக்க பணம் வழங்குவது என்று முடிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை நேற்று தமிழக அரசு வெளியிட்டது. அதில் அரிசி அட்டைதாரர்களுக்குக்கு ரூ.3 ஆயிரம் பொங்கல் பரிசாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட அறிவிப்பு:
இயற்கையின் முதன்மை வடிவாய் அமைந்த சூரியனுக்கும் உழவர்களின் உழைப்பிற்கு உறுதுணையாய் விளங்கும் கால்நடைகளுக்கும் உலக மக்களுக்கு உணவளித்துப் பசி பிணி போக்கும் விவசாயிகளுக்கும் நன்றி கூறி குடும்ப உறவுகள் ஒன்றிணைந்து உலகத் தமிழர்களால் பன்னெடுங் காலமாகக் கொண்டாடப்படும் பாரம்பரிய உன்னத விழா பொங்கல் திருநாள் ஆகும்.
பொங்கல் விழாவைச் சிறப்பாகக் கொண்டாடிட தமிழ்நாடு அரசு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு நீளக்கரும்பு வழங்கிட தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்துள்ளார்.
இதன் மூலம் 2 கோடியே 22 லட்சத்து 91 ஆயிரத்து 710 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினர் பயன்பெறுவர். மேலும், பொங்கல் திருநாளை முன்னிட்டு வழங்கப்படவுள்ள வேட்டி சேலைகள் அனைத்தும் எல்லா மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. பொங்கல் விழாவை மேலும் சிறப்பாக கொண்டாடிட அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் அனைத்து குடும்பங்களுக்கும் பொங்கல் ரொக்கப் பரிசாக ரூ.3000 வழங்கிட முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.
பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரொக்கப் பரிசு மொத்தம் ரூ.6936,17,47,959 செலவில் வழங்கப்படும். பொங்கல் திருநாளுக்கு முன்பாக ரொக்கப் பரிசும், பொங்கல் பரிசுத் தொகுப்பும், வேட்டி சேலைகளும் அனைத்து நியாயவிலைக் கடைகள் வழியாக வழங்கிட அனைத்து ஏற்பாடுகளும் செய்ய முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
