மையல் – விமர்சனம்

நடிப்பு: சேது, சம்ரிதி தாரா, பி.எல்.தேனப்பன், சூப்பர்குட் சுப்ரமணி, ரத்னகலா, சி.எம்.பாலா மற்றும் பலர்

இயக்கம்: ஏபிஜி. ஏழுமலை

கதை, திரைக்கதை, வசனம்: ஜெயமோகன்

ஒளிப்பதிவு: பால பழனியப்பன்

படத்தொகுப்பு: வெற்றி சண்முகம்

இசை: அமர்கீத்

தயாரிப்பு: ஐகான் சினி கிரியேஷன்ஸ் எல்எல்பி

தயாரிப்பாளர்கள்: அனுபமா விக்ரம் சிங் & வேணுகோபால்.ஆர்

பத்திரிகை தொடர்பு: சுரேஷ் சந்திரா & அப்துல் நாசர்

பிரபு சாலமன் இயக்கிய ‘மைனா’ வெற்றிப்படத்தில் நாயகனை கைது செய்து அழைத்துவரும் போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருந்த சேது நாயகனாகவும், ஒரு படவிழாவில் சிறப்பு விருந்தினர்களால் “அழகோ அழகு” என்று ஏகத்துக்கும் வர்ணிக்கப்பட்ட அறிமுக நடிகை சம்ரிதி தாரா நாயகியாகவும் நடித்துள்ள காதல் திரைப்படம் இந்த ‘மையல்’. முழுக்க முழுக்க எழில் கொஞ்சும் கிராமியப் பின்னணியில் இக்காதல் கதை நடப்பதாக கட்டமைக்கப்பட்டுள்ளது. பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் கதை – திரைக்கதை – வசனம் எழுதியுள்ள இப்படம் எப்படி இருக்கிறது? பார்ப்போம்…

ஒரு கிராமம். ஊரடங்கிவிட்ட இரவு. வாரிசு இல்லாத முதியவர் ஒருவரையும், அவரது வயோதிக மனைவியையும் மர்ம நபர்கள் இரண்டு பேர் வீடு புகுந்து சரமாரியாக வெட்டி படுகொலை செய்கிறார்கள்.

அதே இரவு. அதே கிராமத்துக்கு வெளியூரைச் சேர்ந்த நாயகன் மாடசாமி (சேது) வருகிறார். ஆடுகளைத் திருடி விற்றுப் பிழைப்பவரான அவர், ஆடுகள் கிடையமர்த்தப்பட்டிருக்கும் இடத்திலிருந்து ஒரு ஆட்டைத் திருடுகிறார். அவர் ஆடு திருடுவதைப் பார்த்துவிட்ட சிலர் கத்தி கூச்சலிட்டவாறு அவரை துரத்துகிறார்கள். அவர்களிடம் சிக்கிவிடக் கூடாது என்று இருட்டில் தலைதெறிக்க தப்பி ஓடும் மாடசாமி, வழியிலிருந்த கிணற்றுக்குள் தவறி விழுந்துவிடுகிறார். இதன்மூலம் தன்னை துரத்திக்கொண்டு வந்தவர்களிடமிருந்து அவர் தப்பிவிட்ட போதிலும், கிணற்றுக்குளிருந்து வெளியே வர முடியாமல் தண்ணீரிலேயே கிடக்கிறார்.

இரட்டைக் கொலை வழக்கு, ஆடு திருட வந்த நபர் மீதான வழக்கு ஆகிய இரண்டு வழக்குகளையும் போலீஸ் இன்ஸ்பெக்டர் (சி.எம்.பாலா) விசாரிக்கத் தொடங்குகிறார்.

விடிந்ததும், கிராம மக்களால் ஊரைவிட்டு தள்ளி வைக்கப்பட்டு, ஊருக்கு வெளியே ஒதுக்குப்புறத்தில் ஒரு குடிசை போட்டு வாழ்ந்துவரும் சூன்யக்கார பாட்டியின் (ரத்னகலா) பேத்தி நாயகி அல்லி (சம்ரிதி தாரா), தண்ணீர் எடுக்க கிணற்றுக்கு வருகிறார். கிணற்றுக்குள் மாடசாமி தவித்துக்கொண்டிருப்பதைப் பார்த்த அவர், கயிறை உள்ளேவிட்டு தூக்கி மாடசாமியை காப்பாற்றி, குடிசைக்கு அழைத்து வந்து, காயங்களுக்கு மருந்து போடுகிறார். முதல் பார்வையிலேயே மாடசாமி மீது காதல் கொண்டுவிட்ட அல்லி, ஊர்மக்கள் மற்றும் போலீஸ் கண்களில் அவர் படாதவாறு தங்கள் குடிசையிலேயே ரகசியமாக தங்க வைக்கிறார். தன்னை காப்பாற்றி, மருந்திட்டு அன்பு செலுத்தும் அல்லி மீது மாடசாமிக்கும் காதல் வருகிறது. ஆனால் இவர்களது காதலை சூனியக்கார பாட்டி எதிர்க்கிறார்.

திருந்தி, திருட்டுத் தொழிலைக் கைவிட்டு, கௌரவமான ஒரு வேலையில் சேர்ந்து, அல்லியை மணந்து, அமைதியான குடும்ப வாழ்க்கை வாழ வேண்டும் என்ற எண்ணத்துடன் தனது ஊருக்குத் திரும்புகிறார் மாடசாமி.

இதனிடையே, இரட்டைக்கொலை விழுந்த ஊரில் ஒரு பெரிய மனிதர் (பி.எல்.தேனப்பன்). அவர் தான் சொத்துக்கு ஆசைப்பட்டு, வாரிசு இல்லாத தனது சொந்த சித்தப்பாவையும் சித்தியையும் அடியாட்களை ஏவி கொலை செய்தவர். இந்த கொலை வழக்கை முடிவுக்குக் கொண்டுவர, போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு பணம் கொடுத்து, இரட்டைக்கொலை செய்த தன் அடியாட்களில் ஒருவரை என்கவுண்ட்டர் செய்யச் சொல்லுகிறார் பெரிய மனிதர். அதன்படி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒரு அடியாளை இரவில் என்கவுண்ட்டர் செய்ய, அதைப் பார்த்துவிட்டு இன்னொரு அடியாள் தப்பி ஓட, அவரைப் பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

அந்த இரவில் திருமணத்துக்குத் தேவையான தாலி, நகை மற்றும் பட்டுப்புடவையுடன் அல்லியைச் சந்திக்க வருகிறார் மாடசாமி. அவரை சந்தேகத்தின் பேரில் மடக்கிப் பிடித்து, விசாரணைக்கு அழைத்துச் செல்கிறார் இன்ஸ்பெக்டர். ஏற்கெனவே ஆடு திருட்டு வழக்கில் சம்பந்தப்படிருந்த மாடசாமியை இரட்டைக்கொலை வழக்கிலும் குற்றவாளி ஆக்க இன்ஸ்பெக்டர் ஏற்பாடு செய்கிறார்.
அதன்பிறகு என்ன நடந்தது? மாடசாமியின் கதி என்ன? மாடசாமி – அல்லி திருமணம் நடந்ததா, இல்லையா? என்பன போன்ற கேள்விகளுக்கு திருப்பங்களுடன் விடை அளிக்கிறது ’மையல்’ திரைப்படத்தின் மீதிக்கதை.

கதையின் நாயகனாக, ஆடு திருடிப் பிழைக்கும் மாடசாமியாக சேது நடித்திருக்கிறார். ‘மைனா’ படத்தில் மிரட்டலாக நடித்து பெயர் வாங்கிய அவர், நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்படத்தின் மூலம் ரீ-எண்ட்ரி கொடுத்திருக்கிறார். தாடி – மீசை சகிதம் அசல் கிராமத்து இளைஞராகவே படம் முழுவதும் வாழ்ந்திருக்கிறார்.

நாயகி அல்லியாக அறிமுக நடிகை சம்ரிதி தாரா நடித்திருக்கிறார். பாவாடை – தாவணியில் கிராமத்து இளம்பெண்ணாக பேரழகுடன் திரையில் தோற்றம் தந்திருக்கிறார். வெகுளித்தனம், காதல், ஏக்கம், துருதுருப்பு என சகல உணர்வுகளையும் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். அழகோடு, நடிக்கும் வித்தையும் கைவசம் இருப்பதால் தமிழ் திரையுலகில் நிச்சயம் ஒரு ரவுண்டு வருவார் என்று நம்பலாம்.

ஊர் பெரிய மனிதராக வரும் பி.எல்.தேனப்பன், போலீஸ் இன்ஸ்பெக்டராக வரும் சி.எம்.பாலா ஆகியோர் வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார்கள்.

சதா சுருட்டு புகைத்துக்கொண்டிருக்கும் சூனியக்கார பாட்டியாக வரும் ரத்னகலா, போலீஸ் ஏட்டாக வரும் சூப்பர் குட் சுப்ரமணி உள்ளிட்ட ஏனைய நடிப்புக் கலைஞர்கள் அனைவரும் தத்தமது கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.

கதை, திரைக்கதை, வசனம் எழுதியிருக்கும் எழுத்தாளர் ஜெயமோகன் திரைக்கதையை இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யமாக எழுதியிருக்கலாம். அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை கிட்டத்தட்ட சரியாகவே பார்வையாளர்கள் யூகிக்கும்படி திரைக்கதை நகர்வதால் சோர்வு தட்டுகிறது. ஜெயமோகன் எழுதிக்கொடுத்ததை தன்னால் இயன்ற அளவு சிறப்பாக திரையில் கொண்டு வந்திருக்கிறார் இயக்குநர் ஏபிஜி ஏழுமலை.

எழில் கொஞ்சும் கிராமத்து லொக்கேஷன்களின் அழகை ஒவ்வொரு ஃபிரேமிலும் ஓவியம் போல் அருமையாகத் தீட்டிக் காட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் பால பழனியப்பன்.

அறிமுக இசையமைப்பாளர் அமர்கீத்தின் இசையில் பாடல்கள் அனைத்தும் ரசனைக்குரியவையாக இருக்கின்றன. பின்னணி இசை காட்சிகளுக்கு பலம் சேர்த்திருக்கிறது.

’மையல்’ – நீண்ட நாட்களுக்குப் பிறகு வந்திருக்கும் கிராமிய காதல் படம்; பார்த்து ரசிக்கலாம்!

ரேட்டிங்: 3/5.