மெட்ராஸ் மேட்னி – விமர்சனம்

நடிப்பு: காளி வெங்கட், சத்யராஜ், ரோஷினி ஹரிபிரியன், ஷெல்லி கிஷோர், விஷ்வா, ஜார்ஜ் மரியான், அர்ச்சனா, சுனில் சுகாதே, சாம்ஸ், ஜாங்கிரி மதுமிதா மற்றும் பலர்

எழுத்து & இயக்கம்: கார்த்திகேயன் மணி

ஒளிப்பதிவு: ஆனந்த்.ஜி.கே

படத்தொகுப்பு: சதீஷ்குமார் சமுஷ்கி

இசை: கே.சி.பாலசாரங்கன்

தயாரிப்பு: மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ்

வெளியீடு: ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்

பத்திரிகை தொடர்பு: யுவராஜ்

சிறிய பட்ஜெட்டில் நல்ல கண்டெண்ட்டுகளுடன் எடுக்கப்படும் குடும்பப் பாங்கான திரைப்படங்கள் மக்களால் கொண்டாடப்பட்டு, வெற்றிகரமாக வசூலை வாரிக் குவிக்கின்றன என்பது தற்போதைய தமிழ் சினிமா டிரெண்ட். ‘குட்நைட்’ முதல் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ வரையிலான சில படங்கள் இதற்கு உதாரணம். அந்த வரிசையில் சாதாரண மனிதர் ஒருவரின் குடும்பக் கதையைச் சொல்ல வந்திருக்கிறது ‘மெட்ராஸ் மேட்னி’ திரைப்படம்.

‘நடுத்தர வர்க்க குடும்ப வாழ்க்கை’ என்பது செக்கு மாடு மாதிரி; தினம் தினம் சுவாரஸ்யம் இல்லாமல் ஒரே மாதிரி வாழ்க்கை வாழ்வது என்ற எண்ணம் கொண்டவர் பிரபல கதாசிரியர் ஜோதி ராமையா (சத்யராஜ்). ஆகவே நடுத்தர வர்க்க குடும்ப வாழ்க்கையில் உள்ள சாமானிய மனிதர்கள் பற்றி கதை எழுதாமல், சுவாரஸ்யமும் விறுவிறுப்பும் மிகுந்த கற்பனையான அறிவியல் புனைவுக்கதைகள், துப்பறியும் கிரைம் கதைகள் போன்றவற்றை எழுதி வருகிறார். அவரைச் சந்திக்கும் ஒரு பெண், “உங்களால் சாதாரண மனிதர்களைப் பற்றி கதை எழுத முடியுமா?” என்று சவால் விடுகிறார். இந்த சவாலை ஏற்றுக்கொள்ளும் எழுத்தாளர் ஜோதி ராமையா, அதற்கான கதைக்கரு தேடி, சென்னையில் உள்ள ‘டாஸ்மாக்’ மதுபான பார் ஒன்றுக்கு வருகிறார். அங்கு இதுநாள் வரை குடிக்கவே குடிக்காத கண்ணன் (காளி வெங்கட்) என்ற நடுத்தர வயது மனிதரைச் சந்திக்கிறார். முதல்முறையாக குடிப்பதற்கு ரொம்ப சோகமாக வந்திருக்கும் கண்ணனிடம், அவரது வாழ்க்கைக் கதையைக் கேட்கிறார். கண்ணன் தன் கதையைக் கூறுகிறார்…

கீழ் நடுத்தர வர்க்க குடும்பத்தைச் சேர்ந்த கண்ணன் ஒரு ஆட்டோ டிரைவர். அவரது மனைவி கமலம் (ஷெல்லி கிஷோர்) ஹவுஸ் ஒய்ஃப். இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன். கண்ணன் ஆட்டோ ஓட்டி, அதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தை வைத்து தன் பிள்ளைகளை எப்படியாவது உயர்ந்த நிலைக்குக் கொண்டுவந்துவிட வேண்டும் என்று போராடுகிறார்.

விளைவாக, மகள் தீபிகா (ரோஷினி ஹரிபிரியன்) நன்றாகப் படித்து, முடித்து, பெங்களூருவில் உள்ள ஐடி நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். மகன் தினேஷ் (விஷ்வா) 12ஆம் வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் பெற்று, பொறியியல் படிப்பில் சேர தயாராகி வருகிறார்.

மகள் தீபிகாவுக்கு ஒரு நல்ல வரன் அமைந்து விரைவில் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்பது அப்பா கண்ணனின் ஆசை. இதற்காக ஊறுகாய் வியாபாரியும் கல்யாண புரோக்கருமான ஒருவர் (சமஸ்) மூலம் அவர் பார்க்கும் வரன்கள் எல்லாம் செட்டாகாமல் தள்ளிப் போய்க்கொண்டே இருக்கிறது. செட் ஆகாததற்குக் காரணம், அந்த வரன்களை எல்லாம் தீபிகா கழித்துக் கட்டிக்கொண்டே இருப்பது தான். நம் குடும்ப கஷ்டத்தை எல்லாம் மகள் மீது வைத்ததால் தான் அவர் இப்படி கழித்துக் கட்டிக்கொண்டு இருக்கிறாரோ என்று நினைத்து கவலைப்படுகிறார் கண்ணன். மேலும், மகள் திருமணத்துக்கு குறைந்தது 5 லட்சம் வரை தேவைப்படும் என்பதும் அவரது கவலைக்கு மற்றொரு காரணம்.

விடலைப் பையனான மகன் தினேஷுக்கு அப்பா மீது கோபம். எல்லோரிடமும் ரொம்ப தாழ்ந்து பேசுகிறார், நடந்து கொள்கிறார் என்று கோபம். தவறு செய்பவர்களைக் கூட தட்டிக்கேட்க மறுக்கிறாரே என்று கோபம். இதனால் அப்பாவுடன் பேசுவதையே நிறுத்திக்கொள்கிறான் தினேஷ். மகனின் போக்கு, அவனுக்கும் தனக்குமான தலைமுறை இடைவெளி ஆகியவை கண்ணனுக்கு மிகுந்த கவலை அளிக்கிறது. மேலும், மகனை பொறியியல் படிப்பு படிக்க வைக்க சில லட்சங்கள் தேவை என்ற கவலை வேறு. இந்நிலையில், தெருவில் உள்ள மின்சாரக் கம்பி அறுந்து விழுந்ததில், தினேஷின் செல்ல நாயான ‘பிரவுனி’ எரிந்து உயிரிழக்கிறது. மின்வாரியத்தின் அலட்சியம் தான் இதற்கு காரணம் என்று ஆவேசப்படும் தினேஷ், வட்டார மின்வாரிய அலுவலகத்துக்குச் சென்று, மின்வாரிய அதிகாரியான பூமர் அங்கிளோடு (சுனில் சுகாதே) கைகலப்பில் ஈடுபட்டு, போலீஸ் வழக்கில் சிக்க நேரிடுகிறது.

இப்படி மோசமான பொருளாதாரச் சூழல், குடும்பத்திற்குள் இருக்கும் மனக்கசப்புகள், குடும்பத்திற்கு வெளியிலிருந்து மிரட்டும் சர்ச்சைகள் போன்ற அழுத்தங்கள் காரணமாக, குடிக்கவே குடிக்காத கண்ணன், முதல்முறையாக குடிப்பதற்காக மதுபான பாருக்கு வந்திருக்கிறார்.

அதன்பிறகு என்ன நடந்தது? கண்ணனின் கதையிலிருந்து எழுத்தாளர் ஜோதி ராமையா என்ன தெரிந்துகொண்டார்? என்பன போன்ற கேள்விகளுக்கு சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும் விடை அளிக்கிறது ‘மெட்ராஸ் மேட்னி’ திரைப்படத்தின் மீதிக்கதை.

பிரபல கதாசிரியர் ஜோதி ராமையாவாக கௌரவ வேடத்தில் சத்யராஜ் நடித்திருக்கிறார். உட்கார்ந்த நாற்காலியைவிட்டு நகராமல், உட்கார்ந்தது உட்கார்ந்தபடியே அவர் இப்படத்தின் ‘ஆங்கர்’ போல் செயல்பட்டிருக்கிறார். அவரது பாணியில் நக்கல், நையாண்டியோடு சிந்திக்க வைக்கும் வசனங்களையும் பேசி ரசிக்க வைத்திருக்கிறார்.

கதையின் நாயகனாக, கீழ் நடுத்தர வர்க்கக் குடும்பத் தலைவரும் ஆட்டோ டிரைவருமான கண்ணனாக காளி வெங்கட் நடித்திருக்கிறார். யதார்த்தமான குணச்சித்திர கதாபாத்திரத்தில் அக்கதாபாத்திரமாகவே மாறி இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். ஒவ்வொரு பார்வையாளரும் தன் தந்தையையும், அவர் சுமந்த குடும்ப சுமைகளையும் நினைத்து கண் கலங்கும் அளவுக்கு எமோஷனலாக நடித்திருக்கிறார். அவரது நடிப்பில் தொடர்ந்து தெரியும் முன்னேற்றங்களைப் பார்க்கும்போது, “சிறந்த குணச்சித்திர வேடமா… கூப்பிடு காளி வெங்கட்டை…” என்று அழைக்கும் காலம் வந்துவிட்டதாகவே தெரிகிறது. வாழ்த்துகள் காளி வெங்கட்.

நாயகனின் மகள் தீபிகாவாக ரோஷினி ஹரிபிரியன் நடித்திருக்கிறார். ஐ.டி நிறுவனத்தில் பணிபுரிந்தாலும் தன் குடும்ப நிலை பற்றியும், தன் எதிர்காலம் பற்றியும் கலக்கம் கொண்டவராக, ஆர்ப்பாட்டம் இல்லாமல் அழுத்தமான நடிப்பை வழங்கியிருக்கிறார்.

நாயகனின் மகன் தனுஷாக விஷ்வா நடித்திருக்கிறார். விடலைப் பருவத்துக்கு உரிய முன்கோபம், செல்ல நாய் பிரவுனி மீது வைத்திருக்கும் பாசம், ஒரு கட்டத்தில் அப்பாவைப் புரிந்துகொண்டு இளகும் தருணம் என பல இடங்களில் தனது பொருத்தமான நடிப்பைக் கொடுத்து அசத்தியிருக்கிறார் விஷ்வா.

நாயகனின் மனைவியாக, குடும்பத் தலைவி கமலமாக ஷெல்லி கிஷோர் நடித்திருக்கிறார். குறைவாகப் பேசி நிறைவான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

பெங்களூரு ஐ.டி நிறுவன அதிகாரியாக வரும் அர்ச்சனா, மின்வாரிய அதிகாரி பூமர் அங்கிளாக வரும் சுனில் சுகாதே, அவரது காதலி பூமர் ஆண்ட்டியாக வரும் ஜாங்கிரி மதுமிதா, ஊறுகாய் விற்பவராக வரும் சாம்ஸ், டிரைவிங் கற்றுத்தரும் கமலாக வரும் ஜார்ஜ் மரியான், அரசியல்வாதி பச்சோந்தியாக வரும் கீதா கைலாசம், அவரது உதவியாளராக வரும் விஜய் டிவி ராமர், அடியாளாக வரும் லோக்கல் ரவுடி, நாயகனை பாருக்கு அழைத்துச் செல்லும் நண்பராக வருபவர் உள்ளிட்ட அனைவருமே தத்தமது கேரக்டரை உணர்ந்து சரியாக நடித்திருக்கிறார்கள்.

இப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் கார்த்திகேயன் மணி. யதார்த்தமான எளிய குடும்பக் கதையை எடுத்துக்கொண்டு, அதன் இயல்பு கெடாமல் சுவாரஸ்யமாக திரைக்கதை அமைத்து, படத்தை போரடிக்காமல் நகர்த்திச் சென்றுள்ளார். பார்வையாளர்களை படத்துடன் எமோஷனலாக தொடர்புகொள்ள வைத்ததற்காக இயக்குநர் கார்த்திகேயன் மணியை பாராட்டலாம்.

கே.சி.பாலசாரங்கன் இசையில் வடிவேலு பாடியுள்ள “என்னடா பொழப்பு இது…” என்ற பாடல் ஈர்க்கிறது. பின்னணி இசை படத்துக்கு மிகப் பெரிய பங்காற்றியுள்ளது.

எளிய மனிதர்களின் வாழ்க்கையை அச்சு அசலாய் கண்முன் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது ஜி.கே.ஆனந்த் ஒளிப்பதிவு.

சதீஷ்குமார் சமுஷ்கியின் படத்தொகுப்பு ரொம்பவே ஷார்ப்.

‘மெட்ராஸ் மேட்னி’ – குடும்பத்துடன் கண்டு களிக்கலாம்!

ரேட்டிங் – 3.5/5.