வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி துவங்கியது

வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் நடவடிக்கையை நாடு தழுவிய அளவில் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு உள்ளது. தமிழ்நாட்டிலும் இந்த பணிகள் இன்று தொடங்கப்பட்டுள்ளன.

இதற்காக 6-பி என்ற படிவம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த படிவத்தை பூர்த்தி செய்து அளித்தால் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைக்கப்படும்.

இதற்காக வாக்குச்சாவடி அலுவலர்கள் வீடு வீடாக சென்று படிவத்தை அளிக்க உள்ளனர். இதில் ஆதார் எண், வாக்காளர் பட்டியல் வரிசை எண், முகவரி, தொலைபேசி எண் உள்ளிட்ட விவரங்கள் படிவத்தில் கேட்கப்பட்டு இருக்கும்.

வாக்காளர்கள் இதனை பூர்த்தி செய்து வாக்குச்சாவடி அலுவலரிடம் கொடுத்து விட்டால் அவர்கள் சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரியிடம் இதனை வழங்கி விடுவர். இதற்காக தயாரிக்கப்பட்டுள்ள மென்பொருள் மூலம் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டு விடும்.