“முதல் குண்டு வீசப்படும் வரை வடகொரியாவுடன் பேச்சுவார்த்தை தொடரும்!” – அமெரிக்கா

வடகொரிய அரசையும், அந்நாட்டு அதிபர் கிம் ஜிங் உன்-ஐயும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மிரட்டும் தொனியில் கடுமையாக விமர்சித்து வந்தார். இதனால் அமெரிக்காவுக்கும் வடகொரியாவுக்கும் இடையே போர் சூழல் உருவாகியுள்ளது.

இதனால் தற்காப்புக்காகவும், போர் மூண்டால் எதிரியை வலிமையுடன் எதிர்கொள்வதற்காகவும், கடந்த பிப்ரவரி மாதம் முதல், உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி, வடகொரியா 22 ஏவுகணை சோதனைகளை நடத்தியுள்ளது. இதில் இரண்டு சோதனைகள் ஜப்பான் கடலுக்கு அருகில் நடத்தப்பட்டது.

வடகொரியாவின் இந்த நடவடிக்கையை அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகள் கடுமையாக எதிர்த்து வந்தன.

ஏவுகணை சோதனைகளோடு, ஐக்கிய நாடு சபையின் தடையை மீறி தொடர்ந்து அணுஆயுத சோதனைகளையும் நடத்தி வருகிறது வடகொரியா.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன்,  “நான் ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகிறேன். அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பேச்சுவார்த்தை மூலம் வடகொரியாவுடனான பிரச்சினையை தீர்க்க நினைக்கிறார்.அவர் போர் புரிய விரும்பவில்லை. முதல் குண்டு வீசப்படும் வரை வடகொரியாவுடனான அரசியல் ரீதியான  பேச்சுவார்த்தை தொடரும்” என்றார்.