ஆழி – விமர்சனம்
நடிப்பு: ஆர்.சரத்குமார், இந்திரஜித் ஜெகஜித், தேவிகா சதீஷ், வையாபுரி, ஸ்ரீஜித் ரெவி, பிர்லா போஸ், தாமரை செல்வி, சர்ஜின், மைதிலி சத்யராஜ், பினிஷ் பாபு, பிஜு மவுங்கல் வர்கீஸ், தீனா பாட்டியா, நிகில் முருகன் மற்றும் பலர்
எழுத்து & இயக்கம்: மாதவ் ராமதாசன்
ஒளிப்பதிவு: ஆனந்த் என் நாயர்
படத்தொகுப்பு: கே.ஸ்ரீனிவாஸ்
பாடலிசை: ஜாஸி கிஃப்ட்
பின்னணி இசை: வில்லியம் ஃபிரான்சிஸ்
கலை இயக்கம்: பிரதீப்.எம்.வி
சண்டை அமைப்பு: பீனிக்ஸ் பிரபு
தயாரிப்பு: 888 புரொடக்ஷன் & செல்லுலாய்ட் கிரியேஷன்ஸ் – சஷித் கிருஷ்ணன்
விநியோகம்: உத்ரா புரொடக்ஷன்ஸ் (எஸ்.ஹரி உத்ரா)
பத்திரிகை தொடர்பு: நிகில் முருகன்
கதையின் பெரும்பகுதி நடுக்கடலில் நடப்பதால், இப்படத்துக்கு ‘ஆழி’ என்று பொருத்தமாகப் பெயர் வைத்திருக்கிறார்கள்.
நாகர்கோயிலில் வசிக்கும் மீன்பிடிப் படகு மெக்கானிக்கான மூர்த்தி (ஆர்.சரத்குமார்), அந்த வேலையோடு போதை மருந்து கடத்தல், கள்ளத் துப்பாக்கி மற்றும் ஆயுதம் கடத்தல் போன்ற சட்ட விரோத குற்றச் செயல்களிலும் ஈடுபட்டு பெரும் செல்வந்தராகத் திகழ்கிறார். அவரது ஒரே மகள் முகிலா (தேவிகா சதீஷ்) கல்லூரியில் படிக்கிறார். அவரும், அவருடன் படிக்கும் அருள் (இந்திரஜித் ஜெகஜித்) என்ற எளிய குடும்பத்து மாணவரும் காதலிக்கிறார்கள்.
இந்த காதல் விவகாரம் மூர்த்திக்குத் தெரிய வர, ஆத்திரம் கொள்கிறார். அருளை தனியே மடக்கித் தாக்குகிறார். மூர்ச்சையாகி விழும் அருளைத் தூக்கிச் சென்று மீன்பிடி படகுக்குள் போட்டு, ஆழ்கடலுக்குள் கடத்திச் செல்கிறார்.
அருளை கொலை செய்ய நினைக்கும் மூர்த்தி, அதற்கு முன்னதாக அணு அணுவாக கொடூரமாக சித்திரவதை செய்கிறார். அவரிடமிருந்து தப்பிக்க அருள் பல வகைகளில் முயற்சி செய்கிறார். இதனால், நடுக்கடலில் மிதக்கும் மீன்பிடிப் படகுக்குள் இருவருக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்படுகிறது.
இறுதியில் அருள் உயிருடன் தப்பித்தாரா? அல்லது மூர்த்தியால் கொலை செய்யப்பட்டாரா? அருள் – முகிலா காதல் கைகூடியதா, இல்லையா? என்பன போன்ற கேள்விகளுக்கு விடை அளிக்கிறது ‘ஆழி’ திரைப்படத்தின் மீதிக்கதை.

மீன்பிடிப் படகு மெக்கானிக் மூர்த்தியாக, பெரும் செல்வந்தராக ஆர்.சரத்குமார் நடித்திருக்கிறார். அவருக்கு அப்பா வேடம் புதிதல்ல என்றாலும், ஒட்டு மீசை, ஒட்டு தாடி எல்லாம் வைத்து மாறுபட்ட தோற்றத்தில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
அவரது மகளைக் காதலிக்கும் எளிய குடும்பத்து மாணவர் அருளாக இந்திரஜித் ஜெகஜித் நடித்திருக்கிறார். தனது காதலியின் அப்பாவிடம் வதைபட்டு, ரத்தம் சிந்தி, பார்வையாளர்களின் அனுதாபத்தை அள்ளிக்கொள்கிறார்.
மூர்த்தியின் மகளாக, அருளின் காதலி முகிலாவாக தேவிகா சதீஷ் நடித்திருக்கிறார். கல்லூரி மாணவிக்குரிய லட்சணத்துடன், பார்க்க அழகாக இருக்கிறார். படத்தில் அவருக்கு வேலை குறைவு என்றாலும், கொடுத்த வேலையை குறைவின்றி நிறைவாக செய்திருக்கிறார்.
வையாபுரி, ஸ்ரீஜித் ரெவி, பிர்லா போஸ், தாமரை செல்வி, சர்ஜின், மைதிலி சத்யராஜ், பினிஷ் பாபு, பிஜு மவுங்கல் வர்கீஸ், தீனா பாட்டியா, நிகில் முருகன் உள்ளிட்டோர் தத்தமது கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பை சிறப்பாக வழங்கியிருக்கிறார்கள்.
இப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் மாதவ் ராமதாசன். ஒரு மீன்பிடிப் படகு, அதில் இரண்டு கதாபாத்திரங்கள், அவர்களுக்கு இடையில் மன ரீதியிலும் உடல் ரீதியிலும் நடக்கும் உக்கிரமான போராட்டம் என்பதை அடிப்படையாக வைத்துக்கொண்டு இரண்டு மணி நேரத்தை கடத்தியிருக்கிறார் இயக்குநர். படம் முழுவதும் பல குறைகள் இருந்தாலும், இறுதிக் காட்சியில் மூர்த்தியின் உடலில் வழியும் இரத்தம் மூலம் அருள் தனது பெயரையும், காதலி பெயரையும் எழுதி தன் காதலின் தீவிரத்தை நிரூபிக்க முயல, அதற்கு பதிலடியாக மூர்த்தி, தன் நெஞ்சில் பச்சைக் குத்தியிருக்கும் மகள் பெயரை காட்டி, தந்தை – மகள் உறவும் உயர்வானது என சொல்லாமல் சொல்லுவது ரசிப்புக்கு உரியது.
ஜாஸி கிஃப்ட் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். வில்லியம் ஃபிரான்சிஸின் பின்னணி இசை, படத்தை நகர்த்திச் செல்ல உதவியுள்ளது.
ஆனந்த் என் நாயரின் ஒளிப்பதிவில் நாகர்கோயில் கடற்பகுதி ரம்மியமாகவும், அதே நேரத்தில் அச்சுறுத்துவதாகவும் இருக்கிறது.
ரசூல் பூக்குட்டியின் ஒலி வடிவமைப்பு, சில மணி நேரம் நடுக்கடலில் வாழ்ந்த அனுபவத்தைக் கொடுக்கிறது.
‘ஆழி’ – பொறுமையிருந்தால் ரசித்துப் பார்த்து மகிழலாம்!
ரேட்டிங்: 3/5.
