திருக்குறள் – விமர்சனம்

நடிப்பு: கலைச்சோழன், தனலட்சுமி, குணாபாபு, பாடினி குமார், சுகன்யா, சந்துரு, ஓ.ஏ.கே.சுந்தர், சுப்பிரமணிய சிவா, கொட்டாச்சி, அரவிந்த் ஆண்டவர், அருவி ஆனந்தன், இந்துமதி, கார்த்தி, யாசர், ஹரிதாஸ்ரீ
இயக்கம்: ஏ.ஜே.பாலகிருஷ்ணன்
கதை, திரைக்கதை, வசனம்: செம்பூர் கே ஜெயராஜ்
இசை மற்றும் பாடல்கள்: இளையராஜா
ஒளிப்பதிவு: எட்வின் சகாய்
கலை இயக்கம்: சுரேஷ் கலேரி
ஆடை வடிவமைப்பு: சுரேஷ் குமார்
தயாரிப்பு: ரமணா கம்யூனிகேஷன்ஸ்
பத்திரிகை தொடர்பு: புவன் செல்வராஜ்
தமிழில் எழுதப்பட்டு, உலகின் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, ‘உலகப் பொதுமறை’ என்று கொண்டாடப்படும் ‘திருக்குறள்’ நூலை இயற்றிய திருவள்ளுவர், தற்பெருமை துளியும் இல்லாதவராக வாழ்ந்திருக்கிறார். அதனால் தான் அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்ற மூன்று பிரிவுகளில், 133 அதிகாரங்களில், கருத்துச் செறிந்த 1330 குறள்களை எழுதிய அவர், தன்னைப் பற்றியோ, தன் வாழ்க்கை பற்றியோ ஒரு வரி கூட எழுதாமல் தவிர்த்திருக்கிறார். இதனால் அவரது வாழ்க்கை பற்றிய ஆதாரப்பூர்வமான குறிப்புகள் எதுவும் நமக்குக் கிடைக்கவில்லை. அவர் வாழ்ந்த காலகட்டம் எது? வாழ்ந்த இடம் எது? எப்படிப்பட்ட வரலாற்று – சமூகச் சூழலில் வாழ்ந்தார்? அவருக்கு நெருக்கமாக வாழ்ந்த மாந்தர்கள் யார், யார்? என்பன போன்ற விவரங்கள் எதுவும் நமக்குத் தெரியாமலேயே போய்விட்டது. இந்தப் பெருங்குறையைப் போக்க இயக்குநர் ஏ.ஜே.பாலகிருஷ்ணனும், கதை, திரைக்கதை, வசனகர்த்தா செம்பூர் கே.ஜெயராஜும் முன்வந்திருக்கிறார்கள். வள்ளுவர் எந்தச் சூழலில் எப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருந்தால் இப்படிப்பட்ட குறள்களை எழுதியிருப்பார் என்று அலசி ஆராய்ந்து, அவற்றிலிருந்து புனைவுச் சம்பவங்களையும், புனைவுக் கதாபாத்திரங்களையும் உருவாக்கி, அவற்றோடு “வள்ளுவரின் மனைவி பெயர் வாசுகி” என்பது போன்ற செவிவழிச் செய்திகளையும் சேர்த்து, வியப்புக்கும் போற்றுதலுக்கும் உரிய கற்பனைக் கதை ஒன்றை எழுதி, ‘திருக்குறள்’ என்ற அற்புதமான திரைப்படமாக நமக்கு படைத்தளித்திருக்கிறார்கள்.
இவர்களது கற்பனைக் கதை சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்ததாக கட்டமைக்கப்பட்டுள்ளது. அப்போது தமிழகத்தின் தென்பகுதியில் ‘வள்ளுவ நாடு’ என்றொரு நாடு இருக்கிறது. அந்நாட்டில், மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கும் ஆசிரியராக வாழ்ந்து வருகிறார் திருவள்ளுவர் (கலைச்சோழன்). அவரது மனைவி வாசுகி (தனலட்சுமி). இவர்களுக்கு ஒரு குழந்தை இருக்கிறது.
வள்ளுவர் தான் வாழ்ந்த – கண்ணால் கண்ட – வாழ்க்கை அனுபவங்களிலிருந்து பெற்ற அறம் சார்ந்த நற்கருத்துகளை மையமாக வைத்து, ஒண்ணே முக்கால் அடிகள் கொண்ட குறள் பாக்கள் எழுதத் தொடங்குகிறார். அவர் ஓலைச் சுவடிகளில் எழுதும் குறள்களைப் படி எடுக்கும் பணியை அவரது மனைவி வாசுகி செய்து, உறுதுணையாக இருக்கிறார்.
அரங்கேற்றத்துக்கான அங்கீகாரம் வேண்டி, தான் எழுதிய சில குறள் பாக்களை, புலவர்களின் சங்கமான மதுரை தமிழ்ச்சங்கத்தின் முன் சமர்ப்பிக்கிறார் வள்ளுவர். ஆனால், நான்கு அடிக்கும் குறைவாக ஒண்ணே முக்கால் அடி கொண்ட குறள்களை, செய்யுளாக அங்கீகரிக்கக் கூடாது என்ற தமிழ்ச்சங்க விதியைச் சுட்டிக்காட்டி புலவர் நக்கீரர் (சுப்பிரமணிய சிவா) எதிர்ப்புத் தெரிவிப்பதை அடுத்து, வள்ளுவரின் குறள்கள் நிராகரிக்கப்படுகின்றன. இருந்தபோதிலும், என்றாவது ஒருநாள் தன் குறள் பாக்களுக்கு அங்கீகாரம் கிடைத்தே தீரும் என்ற தன்னம்பிக்கையுடன் குறள்களை வள்ளுவர் தொடர்ந்து எழுதி வருகிறார்.
இதற்கிடையில், நல்லாட்சி நடத்தும் மன்னர் வீழ்த்தப்பட்டு, கொடுங்கோல் அரசர் அரியணையைக் கைப்பற்றுகிறார். இதனால் குடிமக்கள் சொல்லொண்ணாத் துயரடைகிறார்கள். இந்நிலை போக்க, கொடுங்கோல் அரசரை அழிக்க, வீறுகொண்டு எழுகிறார் மாவீரர் பரிதி (குணாபாபு).

பவளக்கொடி (பாடினி குமார்) எனும் தன் காதலியைக் காதலிக்கும் அதேவேளை, தான் கொண்ட லடசியத்திலிருந்து வழுவாமல், புரட்சிப் படை ஒன்றைக் கட்டுகிறார் பரிதி. போராயுதங்களை செய்து குவிக்கிறார். மேலும், நல் ஆலோசனைகள் வழங்கும் சிறந்த கல்விமானான வள்ளுவர், தனக்கு ஆலோசகராக இருந்து உதவ வேண்டும் என்றும் வேண்டுகிறார். வள்ளுவர் போரையும், உயிர்க்கொலையையும் அறவே வெறுப்பவர் என்ற போதிலும், குடிமக்களின் நலனுக்காக, கொடுங்கோல் அரசரை வீழ்த்த போர்க்களம் புகும் பரிதிக்கு தன் ஆதரவையும், ஆலோசனைகளையும் வழங்குகிறார்.
போரில் கொடுங்கோல் அரசரை வீழ்த்தி பரிதி வெற்றி பெற்றாரா, இல்லையா? வள்ளுவர் விரும்பியது போல் நாட்டில் நல்லாட்சி மலர்ந்ததா, இல்லையா? பரிதி தனது காதலியை கரம் பிடித்தாரா, இல்லையா? இறுதியில் மதுரை தமிழ்ச்சங்கம் வள்ளுவரின் திருக்குறளை அங்கீகரித்து, அரங்கேற்றம் செய்ய ஒத்துழைத்ததா, இல்லையா? என்பன போன்ற கேள்விகளுக்கு உணர்வுப்பூர்வமாக விடை அளிக்கிறது ‘திருக்குறள்’ திரைப்படத்தின் மீதிக்கதை.
திருவள்ளுவராக கலைச்சோழன் நடித்திருக்கிறார். நிறை குடம் ததும்பாது என்ற பழமொழிக்கேற்ப நிறைஞானியாய் வாழ்ந்த வள்ளுவருக்கு எந்த களங்கமும் வந்துவிடாதவாறு, அமைதியே உருவாகவும், நடை, உடை, பேச்சு ஆகியவற்றாலும் திருவள்ளுவராகவே வாழ்ந்து காட்டியிருக்கிறார் கலைச் சோழன்.
வள்ளுவரின் மனைவி வாசுகியாக தனலட்சுமி நடித்திருக்கிறார். அழகாக இருக்கிறார். வள்ளுவருக்கு குறள் பாக்கள் எழுத உதவியாக இருப்பதோடு, வள்ளுவர் மீதான காதலை கண்களாலேயே வெளிப்படுத்துவது அழகோ அழகு.
புரட்சிப்படைத் தலைவர் பரிதியாக குணாபாபு சுறுசுறுப்பாகவும், அவரது காதலி பவளக்கொடியாக பாடினி குமார் துருதுருவெனவும் நடிப்பை வெளிப்படுத்தி மனதை ஈர்க்கிறார்கள். இருவரையும் இறுதியில் ‘நடுகல்’லாகப் பார்க்கும்போது கண்கள் கலங்கிவிட்டன.
பாண்டிய மன்னனாக வரும் ஓ.ஏ.கே.சுந்தர், புலவர் நக்கீரராக வரும் சுப்பிரமணிய சிவா, புலவர் பெருந்தலைச் சாத்தனாராக வரும் கொட்டாச்சி, மாட்டத்தியாக வரும் சுகன்யா, மாட்டத்தியின் தந்தையாக வரும் அருவி ஆனந்தன், தாயாக வரும் இந்துமதி, சங்கு மாறனாக வரும் சந்துரு, குமணனாக வரும் அரவிந்த் ஆண்டவர், நன்னனாக வரும் கார்த்தி, பரிதியின் தோழனாக வரும் யாசர், பவளக்கொடியின் தோழியாக வரும் ஹரிதாஸ்ரீ உள்ளிட்டோர் தத்தமது கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.
இப்படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதியிருக்கிறார் செம்பூர் கே ஜெயராஜ். சவாலான இப்பணியை சிறப்பாக செய்து முடித்திருக்கிறார். அவரது உழைப்புக்கும், படைப்புத் திறனுக்கும் நமது பாராட்டுகள்.
இப்படத்தை இயக்கியிருக்கிறார் ஏ.ஜே.பாலகிருஷ்ணன். ஏற்கெனவே ‘காமராஜ்’, ‘கம் பேக் காந்தி’ ஆகிய படங்களை இயக்கி கவனம் ஈர்த்து, பரவலாக பாராட்டுப் பெற்றுள்ள இவர், இந்த ‘திருக்குறள்’ படத்தை இயக்கி, மேலும் உயரம் தொட்டிருக்கிறார். கைக்கு அடக்கமான பட்ஜெட்டில், குறள்பாக்கள் பிறந்த கற்பனைக் கதையோடு, பண்டைய தமிழரின் காதலும் வீரமும் செறிந்த வாழ்வியலைப் பின்னி, போரடிக்காமல் சுவாரஸ்யமாக படத்தை நகர்த்திச் சென்றுள்ளார். பாராட்டுகள். நடிப்புக் கலைஞர்கள் ஒவ்வொருவரையும் அழகுதமிழில் பேச வைத்து, செவிக்கின்பம் அளித்ததற்காக இயக்குநருக்கு ஒரு ஸ்பெஷல் தேங்ஸ்!.
இளையராஜா எழுதி, இசையமைத்துள்ள பாடல்கள் அனைத்தும் பிரமாதம். அது போல், அவரது பின்னணி இசை… சொல்லவே வேண்டாம்… படத்துக்கு பலம் சேர்த்து, ரசனையைக் கூட்டியிருக்கிறது.
எட்வின் சகாயின் ஒளிப்பதிவு, சுரேஷ் கலேரியின் கலை இயக்கம், சுரேஷ் குமாரின் ஆடை வடிவமைப்பு உள்ளிட்ட தொழில்நுட்பங்கள், பீரியட் ஃபிலிமுக்குத் தேவையான நம்பகத் தன்மையையும் நேர்த்தியையும் அளித்துள்ளன.
தமிழ்நாடு அரசு இப்படத்தை அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும், அனைத்துக் கல்லூரிகளிலும் இலவசமாகத் திரையிட ஏற்பாடு செய்தால், மாணவ மாணவிகள் திருவள்ளுவர் மற்றும் திருக்குறளின் பெருமையை அறிந்துகொள்ள பேருதவியாக இருக்கும்.
’திருக்குறள்’ – தமிழ்த்திரை வரலாற்றில் ஒரு முக்கியமான திரைப்படம்; அனைவரும் அவசியம் பார்த்து ஆதரிக்க வேண்டும்.
ரேட்டிங்: 3.5/5.