பரமசிவன் பாத்திமா – விமர்சனம்

நடிப்பு: விமல், சாயாதேவி, எம்.எஸ்.பாஸ்கர், இசக்கி கார்வண்ணன், எம்.சுகுமார், கூல் சுரேஷ், அருள்தாஸ், ஸ்ரீரஞ்சனி, மனோஜ்குமார், ஆதிரா, சேஷ்விதா, வி.ஆர்.விமல்ராஜ், மகேந்திரன், காதல் சுகுமார், ஆறுபாலா, வீரசமர், களவாணி கலை மற்றும் பலர்
எழுத்து & இயக்கம்: இசக்கி கார்வண்ணன்
ஒளிப்பதிவு: எம்.சுகுமார்
படத்தொகுப்பு: புவன்
இசை: தீபன் சக்ரவர்த்தி
தயாரிப்பு: ’லட்சுமி கிரியேஷன்ஸ்’ இசக்கி கார்வண்ணன்
பத்திரிகை தொடர்பு: நிகில் முருகன்
சாதிய – வருணாசிரம ஆண்டைகளின் வன்கொடுமைகளைத் தாங்க முடியாமல் ஏராளமான ஒடுக்கப்பட்ட இந்துக்கள் தங்கள் மதத்தை விட்டு வெளியேறி, கிறிஸ்தவ மதம், இஸ்லாமிய மதம், புத்தமதம் போன்ற சிறுபான்மை மதங்களில் அடைக்கலம் ஆயினர் என்கிறது இந்திய சமூக வரலாறு. இது தெரியாமல், அல்லது தெரிந்தும் தெரியாதது போல், மதவெறுப்பு அரசியல் செய்யும் சங்கிகள், “ரொட்டிக்காக, அரிசிக்காக, பணத்துக்காக, வேலை வாய்ப்புக்காக, இது போன்ற பொருளாதார ஆதாயங்களுக்காக மதம் மாறியவர்களே சிறுபான்மை மதத்தினர்” என்று அனுதினமும் பொய்ப்பிரசாரம் செய்து வருகின்றனர். வெள்ளையர் ஆட்சிக்காலத்தில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் ’தோள்சீலை போராட்டம்’ நடத்தியவர்கள் ரொட்டித் துண்டுகளுக்காகவா கிறிஸ்தவ மதத்துக்கு மாறினார்கள்? எம்.ஜிஆர் ஆட்சிக்காலத்தில், மீனாட்சிபுரம் என்ற கிராமத்தின் தாழ்த்தப்பட்ட மக்கள் மொத்தப் பேரும் அரிசிக்காகவா இந்து மதத்தை உதறிவிட்டு இஸ்லாம் மதத்தைத் தழுவினார்கள்? “இந்துவாகப் பிறந்தேன். ஆனால் இந்துவாக சாக மாட்டேன்” என்று முழங்கிய புரட்சியாளர் அம்பேத்கர், வேலை வாய்ப்புக்காகவா பல லட்சம் தலித்துகளுடன் புத்த மதத்துக்கு மாறினார்? உழைக்கும் மக்களுக்கு எதிரான சாதியச் சுரண்டலை – சாதிய ஆதிக்கத்தை – சாதிய ஒடுக்குமுறையை இந்துமதம் கட்டிக் காப்பாற்றி வருகிறது என்று குற்றம்சாட்டித் தானே சமூக சீர்திருத்தவாதிகள் மத மாற்றத்தை ஆதரித்தார்கள்? இந்த உண்மையை மூடி மறைத்துவிட்டு, அரசியல் ஆதாயத்துக்காக ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் சங்கிகள் சிறுபான்மை மதத்தினருக்கு எதிராகப் பரப்பும் அவதூறுகளை வரிக்கு வரி அப்படியே எடுத்துக்கொண்டு, வெகுமக்களை மதரீதியில் பிளவுபடுத்தி மோதலை உருவாக்கும் ஓர் அபாயகரமான வெறுப்பு பிரச்சாரப் படமாக ‘பரமசிவன் பாத்திமா’ திரைப்படத்தை இயக்கி தயாரித்திருக்கிறார் இசக்கி கார்வண்ணன்.
இப்படத்தின் கதை என்னவென்றால், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு மலைப்பிரதேசத்தில், சுப்பிரமணியபுரம் என்ற இந்து கிராமம், யோகோபுரம் என்ற கிறிஸ்தவ கிராமம், சுல்தான்பேட்டை என்ற முஸ்லிம் கிராமம் ஆகிய மூன்று ஊர்கள் அருகருகே இருக்கின்றன. முன்னொரு காலத்தில் சுப்பிரமணியபுரம் என்ற ஒரே இந்து கிராமமாக இருந்த இவை, மதமாற்றம் காரணமாக மூன்று கிராமங்களாகப் பிரிந்துவிட்டன.
இதில், இந்துக்கள் வாழும் சுப்பிரமணியபுரம் கிராமத்துக்கும் கிறிஸ்தவர்கள் வாழும் யோகோபுரம் கிராமத்துக்கும் இடையே அவ்வபோது மோதல்கள் ஏற்படுகின்றன. இந்நிலையில், இந்த இரண்டு கிராமங்களை சேர்ந்த இரண்டு இளைஞர்களை நாயகன் பரமசிவன் (விமல்) ஆவியும், நாயகி தமிழ்செல்வி (எ) பாத்திமா (சாயாதேவி) ஆவியும் இணைந்து படுகொலை செய்வதோடு, மேலும் சிலரை கொலை செய்ய திட்டம் போடுகின்றன.
கொலைகளைச் செய்வது ஆவிகள் என்பதால், கொலையாளிகளைக் கண்டுபிடிக்க முடியாமல் திணறுகிறது காவல்துறை.
நாயகன் பரமசிவனும், நாயகி பாத்திமாவும் எப்படி இறந்து ஆவியானார்கள்? அவர்களுக்கும் அவர்களால் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கும் இடையில் என்ன விரோதம்? அவர்கள் கொல்ல நினைத்திருந்த ஏனையோரையும் கொன்று முடித்தார்களா? என்பன போன்ற கேள்விகளுக்கு ஆர்.எஸ்.எஸ்ஸின் சங்கித்துவ பிரச்சாரமாக விடை அளிப்பதே ‘பரமசிவன் பாத்திமா’ திரைப்படத்தின் மீதிக்கதை.
கதையின் நாயகனாக, கிறிஸ்தவப் பள்ளிக்கூட தமிழ் ஆசிரியர் பரமசிவனாக விமல், நாயகியாக, அதே பள்ளியின் ஆசிரியை தமிழ்செல்வி (எ) பாத்திமாவாக சாயாதேவி, தேவாலய பாதிரியாராக எம்.எஸ்.பாஸ்கர், வில்லனாக ஒளிப்பதிவாளர் எம்.சுகுமார், துபாய் மாப்பிள்ளையாக கூல்சுரேஷ், சாமியாராக அருள்தாஸ், நாயகனின் அம்மாவாக ஸ்ரீரஞ்சனி, நாயகியின் அப்பாவாக மனோஜ்குமார், அம்மாவாக ஆதிரா, தோழியாக சேஷ்விதா, நாயகனின் நண்பர்களாக வி.ஆர்.விமல்ராஜ் மற்றும் மகேந்திரன், போலீஸ் இன்ஸ்பெக்டராக இயக்குநர் இசக்கி கார்வண்ணன், கான்ஸ்டபிள்களாக காதல் சுகுமார் மற்றும் ஆறு பாலா, குடிகாரராக வீரசமர், வில்லனின் நண்பராக களவாணி கலை ஆகியோர் தத்தமது கதாபாத்திர வடிவமைப்புக்குத் தேவையான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.
தீபன் சக்ரவர்த்தியின் பாடலிசை மற்றும் பின்னணி இசை, எம்.சுகுமாரின் ஒளிப்பதிவு, புவனின் படத்தொகுப்பு உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் திரைக்கதை மற்றும் காட்சியமைப்புகளுக்கு ஏற்ப பயணித்திருக்கின்றன.
இப்படத்தை எழுதி, தயாரித்து, இயக்கியிருக்கிறார் இசக்கி கார்வண்ணன். இந்த விமர்சனத்தின் முதல் பாராவில் சொல்லியிருப்பதைப் போல, மதமாற்றப் பிரச்சனை குறித்து, சிறுபான்மை மதத்தினருக்கு எதிராக – குறிப்பாக கிறிஸ்தவ மதத்தினருக்கு எதிராக – ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் சங்கிகள் அவிழ்த்துவிடும் பிளவுவாத அவதூறுகளை, எவ்வித ஆராய்ச்சியுமின்றி அப்படியே ஏற்றுக்கொண்டு, இக்கதையை, திரைக்கதையை, வசனங்களை எழுதி, மனம்போன போக்கில் இயக்கியிருக்கிறார் இசக்கி கார்வண்ணன். மதவாத வெறுப்பு அரசியலுக்கு வெண்சாமரம் வீசும் அவரது பிற்போக்கு முயற்சிக்கு நமது கடும் கண்டனங்கள். மத நல்லிணக்கத்துக்கும், சமூகநீதிக்கும் பெயர்பெற்ற தமிழ்நாட்டு மக்கள் இப்படத்தை இடதுகையால் புறம் தள்ளி, படுதோல்வியை பரிசாக அளிப்பார்கள் என்பது திண்ணம்.
ரேட்டிங்: 1/5.