நரிவேட்டை – விமர்சனம்

நடிப்பு: டொவினோ தாமஸ், சுராஜ் வெஞ்சரமூடு, சேரன், ஆர்யா சலீம், பிரியம்வதா கிருஷ்ணன், ரினி உதயகுமார், பிரசாந்த் மாதவன், ப்ரணவ் தியோஃபைன், நந்து, கிருஷ்ணன் பாலகிருஷ்ணன், சுதி கேலிகட், அப்புன்னி சசி, குமார் சேது, உன்னி கிருஷ்ணன், வினோத் போஸ், தொம்மன் மற்றும் பலர்

இயக்கம்: அனுராஜ் மனோகர்

எழுத்து: அபின் ஜோசஃப்

ஒளிப்பதிவு: விஜய்

படத்தொகுப்பு: ஷமீர் முஹமத்

இசை: ஜேக்ஸ் பிஜாய்

தயாரிப்பு: இந்தியன் சினிமா கம்பெனி

தயாரிப்பாளர்கள்: திப்பு ஷான், ஷியாஸ் ஹாசன்

பத்திரிகை தொடர்பு: ரியாஸ் கே அஹ்மத், பாரஸ் ரியாஸ்

‘ஓநாய் வேட்டை’ என்ற பொருளில் ‘ நரிவேட்டா’ என்ற பெயரில் மலையாளத்திலும், ‘ நரிவேட்டை’ என்ற பெயரில் தமிழிலும் வெளியாகியிருக்கும் இந்த ‘சமூக அரசியல் திரில்லர்’ (Socio Political Thriller) திரைப்படம் ரத்தத்தை உறைய வைக்கும் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது.

2023ஆம் ஆண்டு கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் முத்தங்காவில் நடைபெற்றது அந்த உண்மைச் சம்பவம். மலைவாழ் பழங்குடி மக்களின் வாழ்விடங்களிலிருந்து ’வனவிலங்கு சரணாலயம்’, ’தேசியப் பூங்கா’ போன்றவை அமைக்கப்போவதாகச் சொல்லி மலைகளிலிருந்து வெளியேற்றப்பட்டு, நிர்கதியாக்கப்பட்ட பழங்குடி மக்கள், மீண்டும் தங்கள் முந்தைய வாழ்விடங்களுக்குத் திரும்பும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். அவர்களுக்கு எதிராக அரசு களமிறங்கியது. அந்த அப்பாவி மக்களை ஒடுக்குவதற்காக போலீசார் அரச பயங்கரவாதத்தில் ஈடுபட்டு, கோரத் தாண்டவமாடி, உயிர்ப்பலி எடுத்தனர். பழங்குடி மக்களுக்கு எதிரான இந்த அரச பயங்கரவாதத்தையும், அதன் கோரத்தையும் தழுவி, எழுத்தாளர் அபின் ஜோசஃப் கதை, திரைக்கதை எழுத, அதை இப்படமாக இயக்கியுள்ளார் அனுராஜ் மனோகர்.

கேரள மாநிலம் ஆலப்புழாவில் தன் அம்மாவுடன் வசித்து வரும் வர்கீஸ் பீட்டர் (டொவினோ தாமஸ்), தன் படிப்பிற்கு ஏற்ற பெரிய அரசு வேலையில் சேர வேண்டும் என்ற கனவுடன் முயன்று வருகிறார். ஒரு பக்கம் குடும்ப வறுமையும், மறுபக்கம் காதலிக்குத் திருமண ஏற்பாடும் அவரை நெருக்க, வேண்டா வெறுப்பாக ஆயுதப்படை கான்ஸ்டபிள் வேலையில் சேருகிறார். அ ந்த ஆயுதப்ப்டையில் ஹெட் கான்ஸ்டபிளாக பஷீர் முகமது (சுராஜ் வெஞ்சரமூடு) இருக்கிறார்.

இந்நிலையில், வயநாடு மலைப்பகுதியிலிருந்து அரசால் வெளியேற்றப்பட்டு, நிர்கதியாக்கப்பட்ட பழங்குடி மக்கள், மீண்டும் தங்கள் வாழ்விடங்களில் குடியேறும் திட்டத்துடன், வனப்பகுதிக்குள் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

இதனால், அங்கு பதற்றமான சூழல் உருவாக, அதைத் தணிக்கும் பொருட்டு, டிஐஜி ஆர்.கேசவதாஸ் ஐபிஎஸ் (சேரன்) தலைமையில், வர்கீஸ் பீட்டர், பஷீர் முகமது உள்ளிட்ட காவலர்கள் அடங்கிய காவல்படை அங்கு குவிக்கப்படுகிறது.

பழங்குடி மக்களுக்கும், காவல்துறைக்கும் இடையே சில உரசல்கள் ஏற்பட, அதற்குப் பிறகு பழங்குடி மக்களின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர டிஐஜி கேசவதாஸ் சில கொடூர கிரிமினல் வேலைகள் செய்து நட்த்தும் அரச பயங்கரவாத சம்பவங்களே அனுராஜ் மனோகர் இயக்கியிருக்கும் ‘நரிவேட்டை’ திரைப்படத்தின் மீதிக்கதை.

கதையின் நாயகனாக, வர்கீஸ் பீட்டராக டொவினோ தாமஸ் நடித்திருக்கிறார். ஆரம்பத்தில் வேலை இல்லாமல் சுற்றுவது, காதலிப்பது என்று பொறுப்பற்ற இளைஞனாக இருப்பது, பின்னர் கான்ஸ்டபிள் ஆனபிறகு – குறிப்பாக இரண்டாம் பாதியில் – ஆற்றாமை, கோபம், ஆக்ரோஷம், எழுச்சி என அழுத்தமடையும் கதாபாத்திரத்திற்குப் பொருத்தமான நடிப்பை சிறப்பாக வழங்கியுள்ளார்.

டிஐஜி ஆர்.கேசவதாஸ் ஐபிஎஸ்ஸாக சேரன் நடித்திருக்கிறார். அவர் தமிழில் பிரபலம் என்றபோதிலும், மலையாள திரையுலகுக்கு இப்படத்தின் மூலம் தான் நடிகராக அறிமுகமாகியிருக்கிறார். காக்கி உடையில் மிடுக்காக தோற்றமளிக்கிறார். கண்டிப்பான, அதே நேரத்தில் உள்ளுக்குள் வஞ்சக நெஞ்சம் கொண்ட போலீஸ் உயர் அதிகாரி கதாபாத்திரத்தில் தன்னை கச்சிதமாகப் பொருத்தி அருமையாக நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

இளகிய மனம் கொண்ட அப்பாவி ஹெட் கான்ஸ்டபிள் பஷீர் முகமதுவாக வரும் சூரஜ் வெஞ்சரமூடு கவனம் ஈர்க்கிறார். அவருக்கு ஏற்படும் முடிவு பார்வையாளர்களுக்கு அதிர்ச்சியையும் ஆவேசத்தையும் ஏற்படுத்துகிறது.

பழங்குடி மக்களின் உரிமையை மீட்கப் போராடும் முன்னணி போராளி சி.கே.சாந்தியாக வரும் ஆர்யா சலீம், பாதிக்கப்பட்ட பழங்குடி மக்களின் பிரதிநிதியாக நடித்திருப்பவர், ஐந்து வயது பழங்குடி சிறுமி என அனைவரும் மனதில் நிற்கிறார்கள். பாதிக்கப்பட்டு தீப்பிழம்புடன் ஓடிவந்து மரணிக்கும் நாயும் நம் மனதை பிசைகிறது.

உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, கற்பனை கலந்து, கதை, திரைக்கதை பிரமாதமாக எழுதியிருக்கும் எழுத்தாளர் அபின் ஜோசஃப்பும், சிறப்பாக இயக்கியிருக்கும் அனுராஜ் மனோகரும் பாராட்டுக்கு உரியவர்கள். இன்றைய காலகட்டத்தில் அடிப்படை உரிமைக்காக போராடும் மக்களின் நிலை, குறிப்பாக, மலைகளிலும் காடுகளிலும் பல ஆண்டுகளாக வாழ்பவர்கள் ஏதாவது ஒரு காரணத்துக்காக அங்கிருந்து அப்புறப்படுத்தப்படும் நிலை, அவர்களின் உரிமைப் போராட்டத்தை ஒடுக்க நினைக்கும் அரசின் தந்திரம், அரசின் அடியாளாக இருக்கும் போலீசின் கோர முகம், பாதிக்கப்பட்ட மக்களின் பரிதாப நிலை, அவர்களுக்காக போராடும் அமைப்புகள்
என பல விஷயங்களை ரத்தமும் சதையுமாக இப்பட்த்தில் விரிவாக சித்தரித்திருக்கிறார்கள்.

வயநாடு அழகையும், போராட்ட காட்சிகளையும் சிறப்பாக காண்பித்து இருக்கிறது விஜய்யின் கேமரா.

சண்டைக் காட்சிகளில் கச்சிதத்தைக் காட்டியுள்ளார் படத்தொகுப்பாளர் ஷமீர் முஹமத்.

ஜேக்ஸ் பிஜாய் இசையில், ‘மின்னல்’ பாடல் காதலின் குளிர்ச்சியைத் தந்துள்ளது. அவரின் பின்னணி இசை, விறுவிறுப்பும், எமோஷனும் கலந்த இறுதிப்பகுதிக்கு உயிரூட்டியுள்ளது.

‘நரி வேட்டை’ – அவசியம் பார்த்தே ஆக வேண்டிய படம்!

ரேட்டிங்: 4/5.