மனிதர்கள் – விமர்சனம்

நடிப்பு: கபில் வேலவன், தக்ஷா, குணவந்தன், அர்ஜுன்தேவ் சரவணன், சாம்பசிவம் மற்றும் பலர்
எழுத்து & இயக்கம்: ராம் இந்திரா
ஒளிப்பதிவு: அஜய் ஆபிரகாம் ஜார்ஜ்
இசை: அனிலேஷ் மேத்யூ
படத்தொகுப்பு: தின்சா
தயாரிப்பு: ஸ்டூடியோ மூவிங் டர்ட்ல் & ஸ்ரீகிரிஷ் பிக்சர்ஸ்
தயாரிப்பாளர்கள்: ராஜேந்திர பிரசாத், ஜே நவீன் குமார், சாம்பசிவம் எம்.கே.
பத்திரிகை தொடர்பு: சதீஷ், சிவா (எய்ம்)
ஒரு இரவில் கார்லி (கபில் வேலவன்), சதீஷ் (தக்ஷா), மனோ (குணவந்தன்), தீபன் (அர்ஜுன்தேவ் சரவணன்), சந்துரு (சாம்பசிவம்), பிரேம் ஆகிய ஆறு நண்பர்கள் மது அருந்துகிறார்கள். அப்போது திடீரென்று அவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டு, ஒருவரையொருவர் தாக்கிக் கொள்கிறார்கள். இதில் பிரேமை மதுபாட்டில் குத்திக் கிழித்துவிட, அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து இறந்துபோகிறார். இக்கொலையை யார் செய்தது என்று தெரியாமல் மீண்டும் நண்பர்களுக்குள் சண்டை வெடிக்கிறது. ஒருகட்டத்தில் சண்டையை முடிவுக்குக் கொண்டுவரும் கார்லி, பிரேமின் உடலை கார் டிக்கிக்குள் வைத்து மூடுகிறார். அதன்பிறகு நண்பர்கள், சடலம் உள்ள காரை கிளப்பிக்கொண்டு போகிறார்கள்.
பிரேமின் சடலத்தை நண்பர்கள் என்ன செய்தார்கள்? நடு இரவில், காரில் செல்லும் வழியில் அவர்கள் சந்தித்த சவால்கள் என்னென்ன? முடிவில் என்ன நிகழ்ந்தது? என்பன போன்ற கேள்விகளுக்கு விடை அளிக்கிறது ‘மனிதர்கள்’ திரைப்படத்தின் மீதிக்கதை.
இக்கதையில் கார்லியாக வரும் கபில் வேலவன், சதீஷாக வரும் தக்ஷா, மனோவாக வரும் குணவந்தன், தீபனாக வரும் அர்ஜுன்தேவ் சரவணன், சந்துருவாக வரும் சாம்பசிவம், மற்றும் பிரேம் ஆகிய ஆறு பேரும் தத்தமது கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பை உணர்ச்சி பொங்க வெளிப்படுத்தியிருக்கிறார்கள். சிற்சில காட்சிகளில் இவர்கள் அச்சம், பீதி போன்ற உணர்வுகளை வெளிப்படுத்துகையில் ஓவர் ஆக்டிங் செய்துள்ளபோதிலும், இக்கட்டான சூழலுக்குள் சிக்கித் தவிக்கும் மனிதர்களின் மனநிலையை துல்லியமாக பிரதிபலித்திருக்கிறார்கள்.
இப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் ராம் இந்திரா. கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் ஜானர் கதையை, ஆறே ஆறு முக்கிய கதாபாத்திரங்களைக் கொண்டு, மிக எளிமையான முறையில், அதே சமயம் வித்தியாசமான கண்ணோட்டத்தில் சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குநர். ஆனால், அரை மணிநேரத்தில் குறும்படமாக சொல்ல வேண்டிய ஒரு கதைக்கருவை 100 நிமிட முழுநீளப்படமாக இழுஇழுவென இழுத்து பொறுமையை ரொம்பவே சோதித்திருக்கிறார். மேலும் இப்படத்தை வெகுமக்களுக்காக அல்லாமல், திரைக்கலையை சீரியஸாக அணுகும் சொற்ப பார்வையாளர்களுக்காகவே இயக்குநர் எடுத்திருப்பதாகத் தெரிகிறது. இதுதான் இயக்குநரின் நோக்கம் என்றால், அதில் அவர் வெற்றி பெற்றுள்ளார்.
அனிலேஷ் மேத்யூவின் இசை, அஜய் ஆபிரகாம் ஜார்ஜின் ஒளிப்பதிவு, தின்சாவின் படத்தொகுப்பு உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் இயக்குநரின் பரிசோதனை முயற்சிக்கு உறுதுணையாக இருந்துள்ளன.
‘மனிதர்கள்’ – திரில்லர் விரும்பிகளுக்குப் பிடிக்கும்!
ரேட்டிங்: 2.5/5.