குபேரா – விமர்சனம்

நடிப்பு: தனுஷ், நாகார்ஜுனா அக்கினேனி, ராஷ்மிகா மந்தனா, சுனைனா, ஜிம் சர்ப் மற்றும் பலர்

இயக்கம்: சேகர் கம்முலா

ஒளிப்பதிவு: நிகேத் பொம்மி

படத்தொகுப்பு: கார்த்திகா ஸ்ரீனிவாஸ் ஆர்

இசை: தேவி ஸ்ரீ பிரசாத்

தயாரிப்பு: ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி, அமிகோஸ் கிரியேஷன்ஸ் (பி) லிட்

தயாரிப்பாளர்கள்: சுனில் நராங், புஸ்கர் ராம் மோகன் ராவ்

தமிழக திரையரங்க வெளியீடு: ‘ரோமியோ பிக்சர்ஸ்’ ராகுல்

பத்திரிகை தொடர்பு: சதீஷ், சிவா (எய்ம்)

ஒன்றிய அரசின் விருது பெற்ற நடிப்பு அசுரன் தனுஷும், அதேபோல் ஒன்றிய அரசின் பல விருதுகள் பெற்ற பிரபல தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலாவும் முதல் முறையாக இணையும் திரைப்படம் என்ற தகவல் வெளியானபோதே ‘குபேரா’ படத்துக்கு ரசிகர்கள், விமர்சகர்கள், திரைத்துறையினர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்படத் தொடங்கிவிட்டது. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் தயாராகும் இந்த பான்-இந்தியா படத்தின் அட்டகாசமான டிரைலர் வெளியாகி ஆர்வத்தைத் தூண்டியவுடன் அந்த எதிர்பார்ப்பு மேலும் பல மடங்காக எகிறிவிட்டது. தற்போது தனுஷ் ரசிகர்களின் உற்சாகம் காரணமாக திருவிழாக்கோலம் பூண்டிருக்கும் திரையரங்குகளில் வெளியாகியிருக்கும் இந்த படம், அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்கிறதா? பார்ப்போம்…

இந்திய எல்லைக்கு உட்பட்ட வங்கக் கடலின் அடியில், அபரிமிதமான கச்சா எண்ணெய் இருப்பதை ஓர் அறிவியலாளர் தலைமையிலான குழு கண்டுபிடிக்கிறது. பல கோடி கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த எண்ணெய் வளத்தைக்கொண்டு, வெளிநாடுகளில் விலைக்கு வாங்காமல், மொத்த இந்தியாவும் பதினைந்து ஆண்டுகளுக்கு சுயசார்பாக இதை பயன்படுத்திக்கொள்ள முடியும் என்று கணக்கிடும் அறிவியலாளர், தன் கண்டுபிடிப்பு பற்றிய இந்த தகவலை முதலில் ஒன்றிய அரசுக்குத் தெரிவிக்காமல், ஒன்றிய அரசையே ஆட்டிப்படைக்கும் பெரிய கார்ப்பரேட் தொழிலதிபரான நீரஜ் மித்ராவிடம் (ஜிம் சர்ப்) தெரிவிக்கிறார்.

நீரஜ் மித்ரா உடனே இது தொடர்பான ஒன்றிய அமைச்சரை ரகசியமாக சந்தித்து, தங்கள் நிறுவனத்துக்கு அந்த எண்ணெய் வளத்தைக் கொடுத்துவிடும்படி கோரிக்கை வைக்கிறார். இதற்காக அமைச்சருக்கு வெள்ளைப்பணமாக ரூ.50ஆயிரம் கோடி, கருப்புப் பணமாக ரூ.50 ஆயிரம் கோடி என மொத்தம் ஒரு லட்சம் கோடி ரூபாய் லஞ்சம் தருவதாகவும் பேரம் பேசி முடிக்கிறார்.

இந்த சட்டவிரோத பணப்பரிமாற்றத்தைக் கச்சிதமாக செய்து முடிக்க, செய்யாத குற்றத்துக்காக சிறைத்தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கும் நேர்மையான முன்னாள் சிபிஐ அதிகாரி தீபக்கின் (நாகார்ஜுனா அக்கினேனி) உதவியை நாடுகிறார் தொழிலதிபர் நீரஜ் மித்ரா. தனக்கு துரோகம் இழைத்துள்ள இந்த அரசமைப்பு மேல் கோபமும், தன் மனைவி (சுனைனா) மற்றும் மகள் மீதான ஏக்கமும் கொண்டு விரக்தியில் இருக்கும் தீபக், முதலில் மறுத்தாலும் பின்னர் நீரஜ் மித்ராவுக்கு உதவ ஒப்புக்கொள்கிறார். உடனே தீபக் விடுதலையாகி வெளியே வர நீரஜ் மித்ரா உதவுகிறார்.

கறுப்புப் பணத்தை பினாமி சொத்து மூலம் வெள்ளையாக மாற்ற, விவரம் அறியாத சில அப்பாவி பிச்சைக்காரர்களைப் பயன்படுத்தலாம் என்று தீபக் யோசனை கூறுகிறார். அதன்படி நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இருந்து நான்கு பிச்சைக்காரர்கள் அழைத்து வரப்படுகிறார்கள். அப்படி திருப்பதியில் இருந்து அழைத்து வரப்படும் பிச்சைக்காரர் தான் நாயகன் தேவா (தனுஷ்).

தேவா, கர்ப்பிணியாக இருக்கும் குஷ்பு (திவ்யா) உள்ளிட்ட இந்த நான்கு பிச்சைக்காரர்களையும் பணக்காரர்கள் போன்ற பொலிவான தோற்றத்துக்கு மாற்றி, நாகரிகப் பழக்க வழக்கங்களை கைக்கொள்ளும் விதமாக பயிற்சி கொடுக்கிறார்கள். இவர்கள் பெயரில் ஆதார் அட்டைகள் உள்ளிட்ட ஆவணங்களைப் போலியாக தயார் செய்து, இவர்கள் பெயரிலேயே ’ஷெல் கம்பெனிகள்’ எனப்படும் போலி நிறுவனங்கள் தொடங்கி, கருப்புப் பணத்தை வெள்ளைப் பணமாக மாற்றுகிறார்கள். அந்த பணம் கைமாறியபின், நீரஜ் மித்ராவின் உத்தரவின்படி, ஒவ்வொரு பிச்சைக்காரராகக் கொல்லப்படுகிறார்கள்.

இப்படி இரண்டு பேர் கொல்லப்பட்டு, மூன்றாவது நபரான கர்ப்பிணிப் பெண் குஷ்பு என்ன ஆனார் என்றே தெரியாமல் மாயமாகிவிட, நான்காவது நபரான தேவா உண்மை தெரிந்து, நீரஜ் மித்ராவின் ஆட்களின் பிடியிலிருந்து தப்பி ஓடிவிடுகிறார். அவர் இல்லாமல் அவரது பெயரில் உள்ள கணக்கில் இருக்கும் பத்தாயிரம் கோடி ரூபாய் பணத்தை மாற்ற முடியாது என்பதால், அவரை தீபக்கும், நீரஜ் மித்ராவின் ஆட்களும் தீவிரமாகத் தேடுகிறார்கள்.

வழியில், ஊரைவிட்டு ஓடிப்போகலாம் என ரயில் நிலையத்துக்கு வரச் சொன்ன காதலன் வராமல் ஏமாற்றிவிட்டதால், செய்வதறியாமல் தவித்துக் கொண்டிருக்கும் நாயகி சமீராவை (ராஷ்மிகா மந்தனா) சந்திக்கிறார் தேவா. அவருக்கு சமீரா தற்செயலாக உதவப்போய், அவரும் ஆபத்தில் சிக்கிக்கொள்ள, இருவரும் உயிருக்கு பயந்து ஓடுகிறார்கள்; ஓடுகிறார்கள்; ஓடிக்கொண்டே இருக்கிறார்கள்.

அதன்பிறகு என்ன நடந்தது? எதிரிகளிடம் தேவா சிக்கினாரா? அல்லது தப்பித்தாரா? அவரிடம் இருந்த ரூ.10ஆயிரம் கோடி என்ன ஆனது? தீபக் மனம் மாறினாரா, இல்லையா? மாயமான பெண் குஷ்பு என்ன ஆனார்? சமீரா கதி என்ன? என்பன போன்ற கேள்விகளுக்கு எதிர்பாராத திருப்பங்களுடன் சுவாரஸ்யமாக விடை அளிக்கிறது ‘குபேரா’ திரைப்படத்தின் மீதிக்கதை.

கதையின் நாயகன் தேவாவாக தனுஷ் நடித்திருக்கிறார். எந்த ’மாஸ்’ ஹீரோவும் ஏற்க மறுக்கக்கூடிய இந்த ஸ்கிரிப்டை கவனமாகத் தேர்ந்தெடுத்து, இத்தனை யதார்த்தமான பிச்சைக்காரர் கதாபாத்திரத்தைத் துணிந்து ஏற்றதற்காகவே அவரைப் பாராட்டலாம். மட்டுமல்ல, அழுக்கு உடம்பு, அழுக்கு உடை, பரட்டைத் தலை, வறண்ட தாடி – மீசை, பசியால் சோர்ந்த கண்கள் என இயல்பாக அந்த கதாபாத்திரம் தெரிய வேண்டும் என்பதற்காக தன்னை நூறு சதவிகிதம் ஒப்புக்கொடுத்ததற்காகவும் அவரை பாராட்டலாம். சிறுவயதில் ஒரு கொடூரன் அவரது வலது கையை ஒடித்துவிட்டதால், படம் முழுவதும் அந்த கையை ஒருதினுசாக தூக்கி வைத்துக்கொண்டு, சாப்பிடுவது உள்ளிட்ட அனைத்து வேலைகளையும் இடது கையால் செய்து, தன் பாத்திர வடிவமைப்புக்கு நியாயம் செய்திருக்கும் அவருக்கு ஹேட்ஸ் ஆஃப். இப்படியும் நடிக்க முடியுமா என்று வியக்கும் அளவுக்கு தனுஷ் ஒவ்வொரு ஃபிரேமிலும் அபாரமாக நடித்து, பார்வையாளர்களை பிரமிக்க வைக்கிறார். இந்த படத்தில் நடித்ததற்காக அவருக்கு ஒன்றிய அரசின் இன்னொரு விருது நிச்சயம். வாழ்த்துகள் தனுஷ்.

முன்னாள் சிபிஐ அதிகாரி தீபக்காக நாகார்ஜுனா அக்கினேனி நடித்திருக்கிறார். பணியில் நேர்மையாக இருந்ததற்காக இந்த நாடு தன்னை தண்டித்துவிட்டதே என்ற விரக்தியில் வில்லனுடன் கை கோர்த்து தவறான பாதையில் செல்வது, பின்னர் மனச்சாட்சி உறுத்தி திருந்துவது என்ற கதாபாத்திரத்தை தனது அனுபவ நடிப்பால் அற்புதமாக மெருகூட்டியிருக்கிறார் நாகார்ஜுனா.

கதையின் நாயகியாக, எவனோ ஒரு காதலனால் ஏமாற்றப்பட்ட சமீராவாக ராஷ்மிகா வந்தனா நடித்திருக்கிறார். வழக்கமாக ஆடல் – பாடல், கவர்ச்சி ஆகிய அம்சங்களுக்காக மட்டுமே பயன்படுத்தப்படும் அவர், இந்த படத்தில் அந்த அம்சங்கள் எதுவும் இல்லாமல், முற்றிலும் வேறுபட்ட கதாபாத்திரத்தில் உணர்வுபூர்வமாக நடித்திருப்பது ரசிப்புக்கு உரியது. நாயகனுக்கும் நாயகிக்கும் இடையிலான கெமிஸ்ட்ரி கச்சிதமாக இருக்கிறது. “மேடம்… மேடம்” என்று அழைத்தவாறு பின்னால் செல்லும் தனுஷ்… “யார்ரா நீ” என துரத்தும் ராஷ்மிகா… இவர்கள் இருவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை மெய்மறந்து குதூகலமாக ரசிக்கலாம்.

அம்பானி, அதானிக்கு இணையான பெரிய தொழிலதிபர் நீரஜ் மித்ராவாக ஜிம் சர்ப் நடித்திருக்கிறார். இதயத்தில் துளியளவு கூட இரக்கம் இல்லாமல், பணம்… பணம்… என்று வெறிகொண்டு அலையும் தனது கதாபாத்திரத்தில், மிரட்டலாக வில்லத்தனம் காட்டி, ஸ்கோர் செய்திருக்கிறார்.

பாக்யராஜ், நாசர், சுனைனா, பக்ஸ் உள்ளிட்ட ஏனைய நடிப்புக் கலைஞர்களும் தத்தமது கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.

இப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் பிரபல இயக்குநர் சேகர் கம்முலா. ‘இந்தியாவில் இரண்டு இந்தியா இருக்கிறது. ஒன்று – தின்று கொழுத்த பணக்காரர்களின் இந்தியா. மற்றொன்று – பசியில் அல்லாடும் ஏழைகளின் இந்தியா’ என்று சிந்தனாவாதிகள் சுட்டிக்காட்டும் ’பொருளாதார சமநிலையின்மை’ என்பதை அடித்தளமாகக் கொண்டு, சமூகப் பொறுப்புணர்வுடன் கூடிய வித்தியாசமான உள்ளடக்கத்துடன் திரைக்கதை அமைத்து, தனுஷ் உள்ளிட்ட மிகவும் பொருத்தமான நடிப்புக் கலைஞர்களையும், தொழில் நுட்பக் கலைஞர்களையும் தேர்வு செய்து, அவர்களை வேலை வாங்கி, சுவாரஸ்யமாக படத்தை நகர்த்திச் சென்றுள்ளார் சேகர் கம்முலா. மொத்தப்படத்தின் நீளத்தை ஒரு அரை மணி நேரம் குறைத்து, படத்தின் இரண்டாம் பாதியை இன்னும் நேர்த்தியாகக் கொடுத்திருந்தால், படத்தை இன்னும் கூடுதலாக ரசித்திருக்கலாம்.

நிகேத் பொம்மியின் ஒளிப்பதிவு படத்துக்கு பலம். தேவி ஸ்ரீ பிரசாத்தின் பாடலிசையும், பின்னணி இசையும் படத்துடன் ஒன்ற வைக்கின்றன.

‘குபேரா’ – முற்றிலும் வித்தியாசமான அனுபவம்! நடிப்பு அசுரன் தனுஷின் அற்புதமான நடிப்பை ரசிப்பதற்காகவே திரும்பத் திரும்ப பார்க்கலாம்!

ரேட்டிங்: 4/5.