குட் டே – விமர்சனம்

நடிப்பு: பிரித்திவிராஜ் ராமலிங்கம், காளி வெங்கட், மைனா நந்தினி, ஆடுகளம் முருகதாஸ், பகவதி பெருமாள் (பக்ஸ்), வேல ராமமூர்த்தி, போஸ் வெங்கட், கலை இயக்குநர் விஜய் முருகன், ஜீவா சுப்பிரமணியம், பாரத் நெல்லையப்பன் மற்றும் பலர்

இயக்கம்: என்.அரவிந்தன்

திரைக்கதை, வசனம்: பூர்ணா ஜெஸ் மைக்கேல்

ஒளிப்பதிவு & படத்தொகுப்பு: மதன் குணதேவ்

இசை: கோவிந்த் வசந்தா

தயாரிப்பு: ‘நியூ மாங்க் பிக்சர்ஸ்’ பிரித்திவிராஜ் ராமலிங்கம்

பத்திரிகை தொடர்பு: சதீஷ், சிவா (எய்ம்)

தமிழில் மட்டும் அல்ல, உலகெங்கிலும் ‘Plot driven’ திரைப்படங்களை விட, ‘Character driven’ திரைப்படங்கள் வருவது அபூர்வம். அதாவது, கதைச் சம்பவங்களால் நகர்த்திச் செல்லப்படும் திரைப்படங்களை விட, ஒரு கதாபாத்திரத்தின் குணாதிசயங்கள் உருவாக்கும் சம்பவங்களால் நகர்த்திச் செல்லப்படும் திரைப்படங்கள் வருவது மிக மிகக் குறைவு. அத்தகைய அபூர்வமான ‘Character driven’ திரைப்படமாக வித்தியாசமாக உருவாகியிருக்கிறது ‘குட் டே’ எனும் தமிழ் திரைப்படம்.

இப்படத்தைப் பார்க்கும்போது, இந்த கதையின் நாயகன் போன்ற பல நிஜ மனிதர்கள் உங்கள் நினைவில் வந்து ‘தள்ளாட்டம்’ போடுவார்கள் என்பது நிச்சயம். காரணம், உங்கள் அன்றாட வாழ்க்கையில் நீங்கள் சாலையோரத்தில், பேருந்தில், திரையரங்கில், கடைத் தெருவில்… ஏன்… உங்கள் வீட்டில் கூட… இப்படிப்பட்ட மனிதர்களை அனுதினமும் பார்த்திருப்பீர்கள் – சில சமயம் வேடிக்கையாக; சில சமயம் கோபமாக! இவ்விதம் உங்களுக்கு வேடிக்கையாகவோ, அல்லது ஆத்திரமூட்டும் வகையிலோ தோற்றமளித்து, “மதுபானத்துக்கு நாங்க கொடுக்கிற பணத்தில் தான் இந்த அரசாங்கமே நடக்குது! போவியா…” என்று சலம்பித் திரியும் சுவாரஸ்யமான மனிதர்களின் பிரதிபலிப்பு தான் இப்படத்தின் நாயக கதாபாத்திரம். அப்பாத்திரம் ஓர் இரவில் உருவாக்கும் சம்பவங்கள் தான் கதை.

இப்படக்கதை திருப்பூரில் நடப்பதாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது.

கதையின் நாயகன் சாந்தகுமார் (பிரித்திவிராஜ் ராமலிங்கம்), தன் மனைவி மற்றும் மகளை சொந்த ஊரில் விட்டுவிட்டு, பிழைப்புத் தேடி திருப்பத்தூர் வந்து, இங்குள்ள பனியன் கம்பெனி ஒன்றில் சூப்ரவைசராக வேலை பார்த்து வருகிறார். அக்கம்பெனியில் வேலை செய்யும் ஒரு பெண்ணை, மேலாளரின் பாலியல் தொல்லையிலிருந்து பாதுகாக்க சாந்தகுமார் முயல, அவருக்கும் நிர்வாகத்துக்கும் மோதல் ஏற்படுகிறது. ஒரு கட்டத்தில் அவரது கன்னத்தில் மேலாளர் ஓங்கி அறைந்து அவமானப்படுத்துகிறார். ஊதியத்தை உடனே கொடுக்காமல், இழுத்தடித்து, அவரை பாடாய்படுத்தி, தாமதமாகக் கொடுக்கிறார்கள்.

ஊதியம் கிரிடிட் ஆனவுடன் அதை எடுத்து மனைவிக்கும் அம்மாவுக்கும் அனுப்புகிறார். அம்மாவுக்கு பணம் அனுப்பியது தொடர்பாக போனில் மனைவி டார்ச்சர் செய்கிறார். இத்தனை மனஉளைச்சலில் கடுப்பாகும் சாந்தகுமார், ‘சரக்கு’ வாங்கிக்கொண்டு, பேச்சலருடன் தானும் பங்கு போட்டு தங்கியிருக்கும் வாடகையறைக்கு அந்த இரவில் வந்து குடிக்கிறார்.

வீட்டு உரிமையாளர் வாடகைக்கான ரசீதைக் கொண்டு வந்து கொடுக்க, முழு மப்பில் இருக்கும் சாந்தகுமார், “முறைவாசல் முன்னூறு ரூவான்னு போட்டிருக்கே! உன் வீட்டுவாசலை கூட்டி, தெளிச்சு, கோலம் போடுறதுக்கு நான் ஏன் பணம் தரணும்?” என்று கரடுமுரடாகப் பேச, வாக்குவாதம் முற்ற, ஒரு கல்லை எடுத்து வீச, அது வீட்டு உரிமையாளரின் மண்டையைப் பதம் பார்க்கிறது. உடனே அவர் அலறியடித்து, காவல் நிலையத்துக்கு போன் செய்ய, சாந்தகுமார் அங்கிருந்து நழுவிச் சென்றுவிடுகிறார்.

போகும் வழியில், தனக்கு அன்று பிறந்தநாள் என்பதும், பரஸ்பரம் சொல்லிக்கொள்ளாமலே முன்பு உள்ளுக்குள் காதலித்துவந்த தனது கல்லூரிக்காலத் தோழி கிருஷ்ணவேணியின் (மைனா நந்தினி) முகமும் நினைவுக்கு வர, பிறந்தநாள் கொண்டாடுவதற்கு ஒரு கேக் வாங்கிக்கொண்டு, அந்த நள்ளிரவில் போய் கிருஷ்ணவேணியின் வீட்டுக்கதவைத் தட்டுகிறார் சாந்தகுமார். இடுப்பில் கைக்குழந்தையுடன் வந்து கதவைத் திறக்கும் கிருஷ்ணவேணி, போதையில் அலங்கோலமாக நிற்கும் சாந்தகுமாரைப் பார்த்து அதிர்ச்சி அடைகிறார். “நீ ஏன் இங்கே வந்தே?” என்று கிருஷ்ணவேணி கேட்க, ஒன்றும் புரியாமல் முழிக்கும் கிருஷ்ணவேணியின் கணவர் (ஆடுகளம் முருகதாஸ்) “யாருடி இவன்?” என்று கத்த, “இவ இப்பத் தான் உன் பொண்டாட்டி…” என்கிற ரீதியில் சாந்தகுமார் உளற, வேணியின் கணவர் பதற, ஏக ரகளை.

பின்னர் அங்கிருந்து நழுவும் சாந்தகுமார், வழியில் அவரைப் போலவே முழு போதையில் இருக்கும் நேரு (காளி வெங்கட்) என்ற ஆட்டோ டிரைவரைச் சந்திக்கிறார். முன் பின் அறிமுகமில்லாத போதிலும் நேருவின் ஆட்டோவில் ஏறிச் சென்று, அவரது உதவியுடன், ஒரு இரும்புத் தடியால் ஏடிஎம் இயந்திரத்தை அடித்து உடைக்கிறார். பின்னர் இந்த இருவருக்குள்ளும் வார்த்தை முற்றி கைகலப்பாக மாற, இருவரும் பிரிந்துபோகிறார்கள்.

இதனையடுத்து, தன் மீது கழிவிரக்கம் கொள்ளும் சாந்தகுமார், குதித்து தற்கொலை செய்துகொள்ளும் எண்ணத்துடன் மேம்பாலத்தின் மீது ஏறி நிற்க, அந்த நேரம் போலீஸ் வாகனத்தில் வந்த இன்ஸ்பெக்டர் தயாளன் (விஜய் முருகன்), சாந்தகுமாரைப் பிடித்திழுத்து வாகனத்தில் ஏற்றி, போலீஸ் நிலையத்துக்குக் கொண்டு போகிறார்.

அப்போது சுமார் 4 வயது பெண்குழந்தை காணாமல் போனதாக புகார் வர, அது குறித்து விசாரிக்கும் பணியில் போலீஸ் நிலையத்தில் உள்ள அனைவரும் மும்முரமாகிவிட, கவனிப்பாரற்று நிற்கும் சாந்தகுமார், இன்ஸ்பெக்டர் தயாளனின் காக்கிச்சட்டையை அணிந்துகொண்டு, அவரது வாக்கி-டாக்கியை எடுத்துக்கொண்டு, அங்கிருந்து எஸ்கேப் ஆகிறார்.

அதன்பின் என்னவெல்லாம் நடந்தது? மதுபோதையில் இரவெல்லாம் ஆங்காங்கே ’ஏழரை’யைக் கூட்டிக்கொண்டிருந்த சாந்தகுமார் இறுதியில் என்ன ஆனார்? அவரிடம் இருந்த இன்ஸ்பெக்டரின் காக்கிச்சட்டை மற்றும் வாக்கி-டாக்கியை போலீஸ் கைப்பற்றியதா, இல்லையா? காணாமல் போன குழந்தையின் கதி என்ன? அதை போலீஸ் உயிருடன் மீட்டதா, இல்லையா? என்பன போன்ற கேள்விகளுக்கு ஹியூமரும், எமோஷனும் கலந்து விடை அளிக்கிறது ‘குட் டே’ திரைப்படத்தின் மீதிக்கதை.

இப்படத்துக்கு கதைக்கரு வழங்கி, தயாரித்து, நாயகன் சாந்தகுமாராகவும் நடித்திருக்கிறார் பிரித்திவிராஜ் ராமலிங்கம். புதுமுக நடிகர் போல் இல்லாமல் அனுபவம் வாய்ந்த நடிகர் போல் அசால்டாக நடித்து, தன் கதாபாத்திரத்தை தூக்கி நிறுத்தியிருக்கிறார். தள்ளாடும் நடை, சுருங்கிய பார்வை உள்ளிட்ட உடல்மொழியுடன் குழறல் பேச்சு, காண்போர் நகைக்கத் தக்க செய்கை என நிஜ மொடாக்குடியரை அச்சு அசலாய் பார்வையாளர்களின் கண்முன் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறார். காமெடி நடிப்பில் மட்டும் அல்ல, சுடுகாட்டில் கற்பனையாக தன்னையே பிணமாகப் பார்ப்பது, அதனருகே மனைவியும் மகளும் கதறி அழுவது என்ற எமோஷனல் காட்சியிலும் பிரமாதமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். ஒவ்வொரு பிரேமிலும் அவரது நடிப்பு ரசிக்கத் தக்கதாக இருக்கிறது. வரும் காலங்களில் இதுபோல் தரமான கதை – திரைக்கதை, திறமையான இயக்கம் ஆகியவற்றை கவனமாக தேர்வு செய்து நடித்தால், அவர் தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு தனியிடம் பிடிப்பது நிச்சயம்.

நாயகனின் கல்லூரிக்காலத் தோழி கிருஷ்ணவேணியாக மைனா நந்தினியும், அவரது கணவராக ஆடுகளம் முருகதாஸும் அட்டகாசமாக நடித்து நகைச்சுவை வெடியை சரவெடியாய் கொளுத்திப் போட்டிருக்கிறார்கள்.

போலீஸ் இன்ஸ்பெக்டர் தயாளனாக கலை இயக்குநர் விஜய் முருகன் நடித்திருக்கிறார். அவரது விறைப்பான உடம்பும், கனமான குரலும் கதாபாத்திரத்துக்குப் பொருத்தமாக அமைந்திருக்கிறது. கருமமே கண்ணாக பணியில் வேகம் காட்டும் பெண் சப்-இன்ஸ்பெக்டராக வரும் ஜீவா சுப்பிரமணியம் நடிப்பும் அருமை.

ஆட்டோ டிரைவர் நேருவாக வரும் காளி வெங்கட், சுல்தான் பேட்டையாக வரும் பக்ஸ் (எ) பகவதி பெருமாள், பஸ் கண்டக்டராக வரும் போஸ் வெங்கட், வெட்டியான் தவவேலுவாக வரும் வேல.ராம்மூர்த்தி, மாடர்ன் சாமியாக வரும் கார்த்திக் நேத்தா, மற்றும் பாரத் நெல்லையப்பன் உள்ளிட்டோர் தத்தமது கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பை நிறைவாகக் கொடுத்திருக்கிறார்கள்.

இப்படத்தின் திரைக்கதை – வசனத்தை பூர்ணா ஜெஸ் மைக்கேல் எழுத, அறிமுக இயக்குநர் என்.அரவிந்தன் இயக்கியிருக்கிறார். உண்மையான வாழ்க்கைச் சம்பவங்களுக்கு நெருக்கமாக திரைப்படக் காட்சிகளை அமைத்து, போரடிக்காமல் சிரித்து மகிழவும், அதேநேரத்தில் சிந்தனையைத் தூண்டும் விதமாகவும் படத்தை சிறப்பாக இயக்கியிருக்கிறார் இயக்குநர் என்.அரவிந்தன். அவருக்கு நமது பாராட்டுகள்.

கோவிந்த் வசந்தாவின் இசையில் பாடல்கள் ஓ.கே ரகம். பின்னணி இசை, காட்சிகளுக்கு வலு சேர்த்துள்ளன.

மதன் குணதேவின் ஒளிப்பதிவு, படத்தின் தரத்துக்கும், நேர்த்திக்கும் உத்தரவாதம் அளித்திருக்கிறது.

‘குட் டே’ – அவசியம் பார்க்க வேண்டிய படம்; குடும்பத்துடன் பார்த்து மகிழலாம்!

ரேட்டிங்: 3.5/5.