காந்தி டாக்ஸ் – விமர்சனம்

நடிப்பு: விஜய் சேதுபதி, அரவிந்த்சாமி, அதிதி ராவ் ஹைதரி, மகேஷ் மஞ்சரேக்கர், பிரியதர்ஷினி இந்தல்கர், சித்தார்த் ஜாதவ், பகவதி பெருமாள் மற்றும் பலர்

எழுத்து & இயக்கம்: கிஷோர் பாண்டுரங் பெலேகர்

ஒளிப்பதிவு: கரண் பி ராவத்

படத்தொகுப்பு: – ஆசிஸ் மாத்ரே

இசை: ஏ.ஆர்.ரஹ்மான்

தயாரிப்பு: ’ஜி ஸ்டூடியோஸ், கையூரியஸ், பிங்க்மூன் & மூவிமில் எண்டர்டெயின்மெண்ட்’ ராஜேஷ் கெஜ்ரிவால், குர்பால் சச்சர், உமேஷ் குமார் பன்சால், மீரா சோப்ரா, கிஷோர் பி பெலேகர்

தமிழ்நாடு & கேரளா திரையரங்க ரிலீஸ்: ‘ரோமியோ பிக்சர்ஸ்’ ராகுல்

பத்திரிகை தொடர்பு: சதீஷ் எய்ம், சிவா

மும்பை குடிசைப்பகுதியில், நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையாக இருக்கும் தன் தாயோடு, கடும் வறுமையில் வாழ்கிறார் மகாதேவ் (விஜய் சேதுபதி). இறந்த தந்தையின் அரசு வேலையைப் பெற்று தாயின் உடல்நிலையைக் கவனித்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறார். அந்த வேலையைப் பெறுவதற்கு லஞ்சம் கொடுக்க வேண்டும் என்பதால் அந்த வேலை அவருக்குக் கிடைக்காமல் போகிறது.

மற்றொரு பக்கம், அதே மும்பையில், பெரும் செல்வந்தராக இருக்கிறார் மோகன் போஸ்மேன் (அரவிந்த்சாமி). இவரின் பிசினஸ் எதிரிகளின் சூழ்ச்சி வேலைகளால் இவரின் சொத்துகள் திடீரென பறிபோவதோடு, கனவு ப்ராஜெக்டும் எரிந்து சாம்பலாகிறது. பிசினஸுக்காக கடன் கொடுத்த முதலீட்டாளர்கள் இவரை நெருக்கடிக்குள்ளாக்க, பெரும் கடன் சுமையிலும் சிக்கித் தவிக்கிறார்.

இந்நிலையில் மகாதேவும், மோகன் போஸ்மேனும் சந்தித்துக்கொள்ள, அதற்கு அடுத்து இருவரின் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன? என்பதே மராத்திய இயக்குநர் கிஷோர் பாண்டுரங் பெலேகர் இயக்கியிருக்கும் இந்த ‘வசனம் பேசா (மவுன) சினிமா’வின் மீதிக்கதை.

மகாதேவ் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்திருக்கிறார். ஏமாற்றம், அவமானம், பாசம், காதல், பேராசை எனப் பலவகை எமோஷன்களைச் சேர்த்து கதாபாத்திரத்தைப் பேச வைத்திருக்கிறார் விஜய் சேதுபதி. வயிற்றுப் பசியோடு காதலையும் எதிர்கொள்ளும் காட்சிகளில் நம்மையும் மௌனமாக்கி இதயத்தைக் கனக்கச் செய்திருக்கிறார்.

மோகன் போஸ்மேன் கதாபாத்திரத்தில் அரவிந்த்சாமி நடித்திருக்கிறார். செல்வந்தராக பந்தா முகம் காட்டும் இடம், சூழ்ச்சியால் வீழ்ச்சியைச் சந்தித்து ஏமாற்றமடையும் இடம் என அவருக்குக் கொடுக்கப்பட்ட பணியைச் செவ்வனே செய்திருக்கிறார்.

சார்லி சாப்ளின் உடல்மொழியுடன் திருடராக வந்து நம்மை சிரிக்க வைக்கிறார் சித்தார்த் ஜாதவ்.

மகாதேவின் காதலியாக அதிதி ராவ் நடித்திருக்கிறார். காதல் காட்சிகளில் மட்டும் இல்லாமல், நேர்மையாக நடந்துகொள்ள வேண்டும் என மகாதேவை உணரச் செய்யும் இடம், அவரைச் சமாதானப்படுத்தும் இடம் போன்ற காட்சிகளில் சிறப்பாக நடித்து ஸ்கோர் செய்திருக்கிறார்.

மகேஷ் மஞ்சரேக்கர், பிரியதர்ஷினி இந்தல்கர்,பகவதி பெருமாள் உள்ளிட்டோரும் தத்தமது கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பை குறைவின்றி கொடுத்திருக்கிறார்கள்.

எழுதி இயக்கியிருக்கிறார் இயக்குநர் கிஷோர் பாண்டுரங் பெலேகர். கடன் தொல்லையிலிருந்து தப்பிக்க நினைக்கும் செல்வந்தர் போஸ்மேன், கொள்ளையடித்தாவது வேலையைப் பெற்று பொருளாதார நிலையைச் சீர்செய்துகொள்ள நினைக்கும் மகாதேவ் ஆகிய இருவரின் கதையை வசனங்களே இல்லாமல் மௌன மொழியில் கடத்தியிருக்கிறார் இயக்குநர். ரூபாய் நோட்டில் இருக்கும் காந்தியின் முகம், மனிதர்களின் பேராசையையும் அதிகாரத்தின் போலித்தனத்தையும் பார்த்து சிரிப்பதைப் போல காட்சிகளை சிறப்பாக வடிவமைத்திருக்கிறார்.

பணம் பத்தும் செய்யும் என்று சொல்வது போல், நம் வாழ்க்கையின் அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு பணம் தான், அந்த பணம் எங்கு, எப்படி எல்லாம் பேசுகிறது என்பதை இயக்குநர் விவரிப்பதோடு, பணம் மட்டுமே போதுமா? என்ற கேள்வியையும் பார்வையாளர்களிடத்தில் எழுப்பி, அதற்கான தீர்வையும் சொல்லியிருப்பது பாராட்டுக்கு உரியது.

கரண் பி ராவத்தின் ஒளிப்பதிவில் ஏழைகளும், பணக்காரர்களும் யார்? என்பதை அப்பட்டமாக காட்டும் நகரமாக மும்பை காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. ஆடம்பர வாழ்க்கையை வெளிக்காட்டும் அரவிந்த்சாமியின் வீட்டையும், ஏழ்மையை பிரதிபலிக்கும் விஜய் சேதுபதியின் வீட்டையும் காட்சிப்படுத்திய விதம் கவனம் ஈர்க்கிறது.

படத்தில் வசனம் இல்லை என்றாலும், தன் இசையை பேச வைத்திருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான். ஒவ்வொரு சூழலுக்கும் ஏற்ற வகையிலான பின்னணி இசை, படத்தின் காட்சிகளைப் போல் பார்வையாளர்களின் மனதிலும் பல வகையான மாற்றங்களை உண்டாக்குகிறது. சூழ்நிலைக்கு ஏற்ப அமைக்கப்பட்டிருக்கும் பாடல்களின் வரிகள் கவரவில்லை என்றாலும், அதில் உள்ள இசை கவனம் ஈர்க்கிறது.

படத்தொகுப்பாளர் ஆசிஸ் மாத்ரே மற்றும் கலை இயக்குநர் துர்கபிரசாத் மஹாபத்ரா ஆகியோரது பணி படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது.

’காந்தி டாக்ஸ்’ – புதிய அனுபவம்; கண்டு களிக்கலாம்!

ரேட்டிங்: 4/5