சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் – விமர்சனம்

நடிப்பு: வைபவ், அதுல்யா ரவி, மணிகண்டா ராஜேஷ், ஆனந்த்ராஜ், இளவரசு, ஜான் விஜய், ரெடின் கிங்ஸ்லி, மொட்டை ராஜேந்திரன், சுனில் ரெட்டி, லிவிங்ஸ்டன், பிபின், ஷிஹான் ஹுசைனி, சூர்யா கணபதி, சாம்ஸ் மற்றும் பலர்
எழுத்து & இயக்கம்: விக்ரம் ராஜேஷ்வர் மற்றும் அருண் கேசவ்
ஒளிப்பதிவு: டிஜோ டாமி
படத்தொகுப்பு: சுரேஷ் ஏ பிரசாத்
இசை: டி.இமான்
தயாரிப்பு: ‘பி.டி.ஜி யுனிவர்சல்’ பாபி பாலச்சந்திரன்
பத்திரிகை தொடர்பு: ரியாஸ் கே அஹ்மத், பாரஸ் ரியாஸ்
சென்னையில் பெரிய தாதாவாக இருக்கும் ஷிஹான் ஹுசைனி, குறுக்கு வழியில் இன்ஷ்யூரன்ஸ் தொகையைக் கைப்பற்ற ஆசைப்பட்டு, தனது நம்பிக்கைக்கு உரிய நபரான லிவிங்ஸ்டனிடம் ஒரு திட்டத்தைக் கூறுகிறார். தன் வீட்டிலுள்ள சில கோடி ரூபாய் மதிப்புள்ள பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்து பாதுகாப்பாக வைத்திருக்குமாறும், இன்ஷ்யூரன்ஸ் கிளைம் பண்ணி தொகையைப் பெற்றுக்கொண்ட பிறகு, கொள்ளையடிக்கப்பட்ட பணம் மற்றும் நகைகளைத் திருப்பி வாங்கிக்கொள்வதாகவும் கூறுகிறார்.
லிவிங்ஸ்டனோ, தனக்கு நெருக்கமானவர்களாகவும், சின்னச் சின்னத் திருட்டுகளில் ஈடுபடுபவர்களுமான வைபவ் மற்றும் மணிகண்டா ராஜேஷை ஏவி, ஷிஹான் ஹுசைனி வீட்டிலுள்ள பணம் மற்றும் நகைகளைக் கொள்ளையடிக்க வைக்கிறார்.
வெற்றிகரமாக இக்கொள்ளையை செய்து முடித்த வைபவ் மற்றும் மணிகண்டா ராஜேஷ், கொள்ளையடித்த பணம் மற்றும் நகைகள் உள்ள பையுடன் மது அருந்துவதற்காக மதுபான பாருக்குச் செல்லுகிறார்கள். குடித்து முடித்தபின், அங்கே அந்த பையைத் தொலைத்துவிடுகிறார்கள். அதிர்ச்சி அடையும் அவர்கள், லிவிங்ஸ்டன் மற்றும் ஷிஹான் ஹுசைனிக்குத் தெரிந்தால் தங்களைக் கொன்றுவிடுவார்கள் என்று அஞ்சுகிறார்கள். விஷயத்தை ரெடின் கிங்ஸ்லியிடம் சொல்லி, தங்களுக்கு உதவுமாறு கேட்கிறார்கள்.
அவர்களை கிங்ஸ்லி ‘சென்னை சிட்டி கேங்ஸ்டர்’களான ஆனந்த்ராஜ், சுனில் ரெட்டி, ஜான் விஜய், மொட்டை ராஜேந்திரன் ஆகிய பழைய குற்றவாளிகளை உள்ளடக்கிய கூட்டத்திடம் அழைத்துச் சென்று, அறிமுகப்படுத்தி, அவர்கள் தொலைத்த பணம் மற்றும் நகைகளைத் திரும்பப் பெற ஒருவழி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறார்.

வைபவ் மற்றும் மணிகண்டா ராஜேஷை தங்கள் கூட்டத்தில் சேர்த்துக்கொள்ளும் ‘சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்’, அனைவரும் கூட்டாக ஒரு பெரிய நகைக்கடையில் கொள்ளையடிக்கத் திட்டமிடுகிறார்கள். அது தோல்வியில் முடிய, அடுத்த கட்டமாக, வங்கி லாக்கர்களிலுள்ள பணம் மற்றும் நகைகளைக் கொள்ளையடிக்க முடிவு செய்கிறார்கள். இதற்காக, ரகசியமாக வங்கிக்குள் நுழைவதற்காக, சுரங்கப்பாதை ஒன்றை அமைக்க, பூமியைத் தோண்டத் தொடங்குகிறார்கள்.
அதன்பிறகு என்ன நடந்தது? வங்கிக் கொள்ளையை வெற்றிகரமாக செய்து முடித்தார்களா? வைபவும், மணிகண்டா ராஜேஷும் லிவிங்ஸ்டன் மற்றும் ஷிஹான் ஹுசைனியின் கொலைவெறியிலிருந்து தப்பித்தார்களா? என்பன போன்ற கேள்விகளுக்கு நகைச்சுவையாக விடை அளிப்பதே ‘சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்’ திரைப்படத்தின் மீதிக்கதை.
கதையின் நாயகனாக வைபவ் நடித்திருக்கிறார். ஜாலியான காமெடி கதாபாத்திரத்தில், வழக்கம் போல் அப்பாவியாக முகத்தை வைத்துக்கொண்டு, நகைச்சுவையாக வசனம் பேசி கலகலப்பூட்டுகிறார்.
நாயகனின் நண்பனாகவும், அவரது தொழில் கூட்டாளியாகவும் மணிகண்டா ராஜேஷ் நடித்திருக்கிறார். ஏறக்குறைய படம் முழுக்க வரும் இந்த கதாபாத்திரத்தில் அவர் இன்னும் கொஞ்சம் கூட சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்தியிருக்கலாம். அவர் போதுமான நடிப்புப் பயிற்சி எடுத்துக்கொள்வது அவரது எதிர்காலத்திற்கு நல்லது.
நாயகனின் ஜோடியாக, லிவிங்ஸ்டனின் மகளாக அதுல்யா ரவி நடித்திருக்கிறார். படத்தில் அவருக்கு பெரிய வேலை இல்லை; என்றாலும் கொடுத்த வேலையை குறைவின்றி நிறைவாக செய்திருக்கிறார்.
’ஞாபகமறதி’ மொட்டை ராஜேந்திரன், ’குடிகார்ர்’ சுனில் ரெட்டி, ’காது கேளாத’ ஜான் விஜய், ’சைரன் சத்தம் கேட்டால் போலீஸாக மாறிவிடும்’ ஆனந்தராஜ், இவர்களுடன் லிவிங்ஸ்டன், ஷிஹான் ஹூசைனி ஆகியோர் ஆங்காங்கே காமெடி வெடியைக் கொளுத்திப்போட்டு பார்வையாளர்களை சிரிக்க வைக்கிறார்கள்.
இப்படத்தை விக்ரம் ராஜேஷ்வர், அருண் கேசவ் ஆகிய இருவரும் எழுதி இயக்கியிருக்கிறார்கள். கதையில் புதுமை இல்லாவிட்டாலும், பார்வையாளர்களை சிரிக்க வைக்கும் நகைச்சுவையை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு திரைக்கதை அமைத்து, ஏகப்பட்ட காமெடி நடிகர்களை படத்துக்குள் கொண்டுவந்து, முழுநீள பொழுதுபோக்குப் படமாக இதை இயக்கியுள்ளார்கள்.
டி.இமானின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் ஓ.கே ரகம்.
ஒளிப்பதிவாளர் டிஜோ டாமி, கண்களுக்கு விருந்தாக காட்சிகளை வண்ணமயமாகப் படமாக்கியிருக்கிறார்.
சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்’ – லாஜிக் தேடாமல், சிரித்து மகிழ்வதற்காகவே, பார்க்கலாம்; ரசிக்கலாம்!
ரேட்டிங்: 2.75/5