ஏஸ் – விமர்சனம்

நடிப்பு: விஜய் சேதுபதி, யோகி பாபு, ருக்மிணி வசந்த், பப்லு பிருத்விராஜ், திவ்யா பிள்ளை, பி.எஸ்.அவினாஷ், ராஜ்குமார் மற்றும் பலர்
எழுத்து, இயக்கம்: ஆறுமுககுமார்
ஒளிப்பதிவு: கரண் பி ராவத்
படத்தொகுப்பு: ஃபென்னி ஆலிவர்
பாடலிசை: ஜஸ்டின் பிரபாகரன்
பின்னணி இசை: சாம் சி.எஸ்
தயாரிப்பு: 7cs எண்டர்டெயின்மெண்ட்
தயாரிப்பாளர்: ஆறுமுககுமார்
பத்திரிகை தொடர்பு: யுவராஜ்
முன்னணி ஹீரோவாகத் திகழும் விஜய் சேதுபதி நடித்த திரைப்படம் என்றாலே ரசிகர்கள், விமர்சகர்கள், திரைத்துறையினர் மத்தியில் வழக்கமாக எதிர்பார்ப்பு எகிறும். இந்நிலையில், உலக அளவில் எங்கெல்லாம் திரையிடப்பட்டதோ அங்கெல்லாம் வெற்றி வாகை சூடி வசூலை வாரிக்குவித்த ‘மகாராஜா’ திரைப்படத்துக்குப் பிறகு வரும் அவரது படம் என்பதால் ‘ஏஸ்’ திரைப்படத்துக்கு எக்கச்சக்கமான எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது திரைக்கு வந்திருக்கும் ‘ஏஸ்’ திரைப்படம் இந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்கிறதா? பார்ப்போம்…

தமிழ்நாட்டிலிருந்து தன் உறவினர் அனுப்பியுள்ள அவரது நண்பரான ‘போல்ட் கண்ணன்’ என்பவரை அழைத்துச் செல்வதற்காக மலேஷிய விமான நிலையத்தில் காத்திருக்கிறார், தன்னை மிகப்பெரிய பிசினஸ்மேனாகக் காட்டிக்கொள்ளும் அறிவுக்கரசன் (யோகி பாபு). அங்கு வரும் இக்கதையின் நாயகனை (விஜய் சேதுபதி) பார்த்து, “நீ தானே போல்ட் கண்ணன்?” என்று அறிவுக்கரசன் கேட்க, நாயகன் சிறிது நேரம் யோசித்துவிட்டு, “ஆம்” என்று சொல்ல, அவரை தன்னுடன் அழைத்துச் சென்று தங்க வைத்துக்கொள்கிறார் அறிவுக்கரசன். மேலும், தான் காதலிக்கும் கல்பனாவின் (திவ்யா பிள்ளை) உணவகத்தில் வேலையிலும் சேர்த்துவிடுகிறார்.
அறிவுக்கரசன் உண்மையில் பெரிய பிசினஸ்மேன் எல்லாம் இல்லை, குப்பையைக் கிளறி பழைய பொருட்களை சேகரித்து, அவற்றை விற்றுப் பிழைப்பவர் என்பதும், தன் காதலி கல்பனாவை பிராக்கெட் போட்டு வைத்துக்கொள்வதற்காக ’பெரிய பணக்காரன்’ என்று சீன் போட்டுத் திரிகிறார் என்பதும் போல்ட் கண்ணனுக்கு விரைவிலேயே தெரிந்துவிடுகிறது.
இந்நிலையில், போல்ட் கண்ணன் பேருந்தில் செல்லும்போது, ஒரு வாக்குவாதம் மூலம் சக பயணியான நாயகி ருக்மிணி (ருக்மிணி வசந்த்) அவருக்கு அறிமுகம் ஆகிறார். அவரை கண்டதும் காதல் கொள்கிறார் போல்ட் கண்ணன். அவர் தங்கியிருக்கும் இடத்துக்கு எதிரில் இருக்கும் வீட்டில் ருக்மிணி வசித்து வருவதால் இருவரும் அடிக்கடி சந்தித்துக்கொள்ள, நாளடைவில் ருக்மிணிக்கும் காதல் வந்துவிடுகிறது.
உயர்தர ரெடிமேட் துணிக்கடையில் வேலை பார்க்கும் காதலி ருக்மிணிக்கு விலையுயர்ந்த ஆடையை பரிசளிக்க நினைக்கிறார் போல்ட் கண்ணன். அதற்குத் தேவையான பணத்தை வட்டிக்கு கடனாக வாங்குவதற்காக, மலேஷியாவில் பெரிய தாதாவாக இருப்பவரும் சூதாட்டக்கிளப் நடத்துபவருமான தர்மாவிடம் (பி.எஸ்.அவினாஷ்), அறிவுக்கரசனின் உறவினரான ராஜ் (ராஜ்குமார்) மூலம் போகிறார். போன இடத்தில் சூதாட்டத்தில் ஈடுபட்டு, தர்மாவால் மோசடியாகத் தோற்கடிக்கப்பட்டு, மிகப்பெரிய தொகைக்கு கடனாளியாகிறார் போல்ட் கண்ணன். இந்த கடனை ஒரு வாரத்தில் அடைக்கவில்லை என்றால் உயிர் போய்விடும் என்று மிரட்டி அனுப்புகிறார் தர்மா.
இதற்கிடையே, தாயை இழந்தவரான காதலி ருக்மிணிக்கும், அவரது தாயின் இரண்டாவது கணவரும் போலீஸ்காரருமான ராஜதுரைக்கும் (பப்லு பிருத்விராஜ்) இடையே சொத்துப் பிரச்சனை இருந்து வருகிறது. ராஜதுரைக்கு பெரிய தொகையைக் கொடுத்தால் மட்டுமே அவருடைய தொல்லையிலிருந்து ருக்மிணி விடுபட முடியும் என்பது போல்ட் கண்ணனுக்குத் தெரிய வருகிறது.
அதேவேளை, அறிவுக்கரசனின் காதலி கல்பனாவும் கடனில் சிக்கி தத்தளிக்கிறார். அவரைக் காப்பாற்ற அறிவுக்கரசனுக்கும் பணம் தேவைப்படுகிறது.
தாதா தர்மாவுக்கு போல்ட் கண்ணன் கொடுக்க வேண்டிய தொகை, ராஜதுரைக்கு ருக்மிணி கொடுக்க வேண்டிய தொகை, கல்பனா வாங்கிய கடனை அடைக்க அறிவுக்கரசன் கொடுக்க வேண்டிய தொகை ஆகிய அனைத்து வகை பணப் பிரச்சனைகளையும் தீர்க்க வங்கியில் கொள்ளை அடிப்பது தான் ஒரே வழி என்ற முடிவுக்கு வருகிறார் போல்ட் கண்ணன். வங்கிக் கொள்ளைக்கு அறிவுக்கரசனுடன் சேர்ந்து திட்டம் தீட்டுகிறார். அவரது திட்டம் நிறைவேறியதா? அனைத்துப் பிரச்சனைகளும் முடிவுக்கு வந்ததா? அல்லது போலீசில் சிக்கி புதுப் பிரச்சனைகளுக்கு ஆளானார்களா? என்பன போன்ற கேள்விகளுக்கு எதிர்பாராத திருப்பங்களுடன் விடை அளிக்கிறது ‘ஏஸ்’ திரைப்படத்தின் மீதிக்கதை.

கதையின் நாயகனாக, போல்ட் கண்ணனாக விஜய் சேதுபதி நடித்திருக்கிறார். அவரது நடிப்புப்பசிக்குத் தீனி போடும் கதாபாத்திரம் இது இல்லை என்பதால், அதிரடி ஆக்ஷன் காட்சிகள் தவிர்த்து ஏனைய காட்சிகளில் அலட்டல் இல்லாமல் அமைதியான தனது தனித்துவ நடிப்பை வழங்கியிருக்கிறார். ஒரு கமர்ஷியல் கதைக்குத் தேவையான அளவு காதல், ஆக்ஷன், நகைச்சுவை, நக்கல், நையாண்டி ஆகியவற்றை கச்சிதமாகக் கொடுத்து முழுப்படத்தையும் திறம்பட தாங்கியிருக்கிறார்.
நாயகனின் நண்பன் அறிவுக்கரசனாக யோகி பாபு நடித்திருக்கிறார். இரண்டாவது ஹீரோ என்று சொல்லும் அளவுக்கு படம் முழுவதும் நாயகனுடன் சேர்ந்து பயணித்திருக்கிறார். அவரும் நாயகனும் இணைந்து ஆங்காங்கே தூவியிருக்கும் காமெடியின் வெடிச்சிரிப்பில் திரையரங்கு அதிர்கிறது.
நாயகி ருக்மிணியாக, கன்னட திரையுலகில் முன்னணி நடிகையாகத் திகழும் ருக்மிணி வசந்த் நடித்திருக்கிறார். தமிழுக்குப் புது வரவான அவர், காதல் மற்றும் எமோஷனல் காட்சிகளில் சிறப்பான நடிப்பை வழங்கியிருக்கிறார். கல்பனாவாக வரும் திவ்யா பிள்ளையின் நடிப்பிலும் குறை இல்லை.
தாதா தர்மாவாக வரும் பி.எஸ்.அவினாஷும், போலீஸ்காரர் ராஜதுரையாக வரும் பப்லு பிருத்விராஜும் வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார்கள்.
ராஜாக வரும் ராஜ்குமார் உள்ளிட்ட ஏனைய நடிப்புக் கலைஞர்கள் அனைவருமே தத்தமது கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பைக் கொடுத்திருக்கிறார்கள்.
விஜய் சேதுபதியை வைத்து ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ படத்தை இயக்கிய ஆறுமுககுமார், இப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார். முழுக்க முழுக்க மலேஷியாவிலேயே கதை நடப்பதாகக் கட்டமைத்து, காமெடி, காதல், ஆக்ஷன், கிரைம் என எல்லாம் கலந்த கமர்ஷியல் கலவையாக, படத்தை சுவாரஸ்யமாக, விறுவிறுப்பாக நகர்த்திச் சென்றுள்ளார். பொழுதுபோக்குக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து, அனைத்துத் தரப்பினரும் ரசிக்கும்படியாக படத்தை இயக்கி கவனிக்க வைத்திருக்கிறார். கிளைமாக்ஸ் காட்சி எழுதப்பட்ட விதம் பாராட்டுக்கு உரியது.
ஜஸ்டின் பிரபாகரனின் இசையில் பாடல்கள் ஓ.கே ரகம். சாம் சிஎஸ்ஸின் பின்னணி இசை படத்துக்கு பெரிய பலம். சேஸிங், ஆக்ஷன் காட்சிகளை அவரது பின்னணி இசை சிறப்பாகத் தாங்கிப் பிடித்திருக்கிறது.
கரண் பி ராவத்தின் ஒளிப்பதிவு மலேஷியாவை வண்ணமயமாக காட்சிப்படுத்தி, படத்தின் தரத்தை உயர்த்திக் காட்டியிருக்கிறது.
‘ஏஸ்’ – நல்ல பொழுதுபோக்கு திரைப்படம்; பார்த்து ரசிக்கலாம்
ரேட்டிங்: 3.5/5.