கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘ரெட்ரோ’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், சூர்யா நடிப்பில் தயாராகியுள்ள ‘ரெட்ரோ’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ரெட்ரோ’ திரைப்படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ் , ஜெயராம், நாசர், பிரகாஷ்ராஜ், சுஜித் சங்கர், சுவாசிகா, சிங்கம் புலி, கருணாகரன், நந்திதா தாஸ், ரம்யா சுரேஷ், ஜார்ஜ் மரியான் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். ரொமாண்டிக் ஆக்சன் எண்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை 2 டி என்டர்டெய்ன்மென்ட் மற்றும் ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது.

எதிர்வரும் மே மாதம் முதல் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதற்காக சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற பிரத்யேக நிகழ்வில் ஆயிரக்கணக்கான சூர்யா ரசிகர்களுடன் படக் குழுவினர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் தயாரிப்பாளர் ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன் பேசுகையில், ” சூர்யாவின் அன்பான ரசிகர்கள் அனைவருக்கும் வணக்கம். நாம் நினைத்தது நடந்துவிடும்.

‘ரெட்ரோ’ திரைப்படம் மறக்க முடியாத அனுபவத்தை தரும். 2 டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் 15-வது படைப்பு இது. சூர்யாவுடனான பயணம் இனிமையானது. இதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இங்கு வருகை தந்திருக்கும் படக்குழுவினர் அனைவரும் தங்களின் முழுமையான பங்களிப்பை வழங்கி இருக்கிறார்கள். அதற்காகவும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் நிறுவனத்தை பற்றி நிறைய சொல்ல வேண்டும். தயாரிப்பாளர் கார்த்திகேயன் சந்தானம் என் இனிய நண்பர். மூன்றாண்டுகளுக்கு முன் சந்தித்து இந்த கூட்டணியை உருவாக்கினோம். மார்ச் 2024ஆம் ஆண்டில் உறுதி செய்து ஜூன் மாதம் படப்பிடிப்புக்கு சென்றோம். கார்த்திக் சுப்புராஜ் உடன் இணைந்து பணியாற்றிய அனுபவமும் மறக்க முடியாதது. குறிப்பாக அந்தமானில் 36 நாட்கள் இடைவிடாது படப்பிடிப்பு நடத்தினார். இதற்கு அவரது குழுவினரின் திட்டமிடல் தான் காரணம்.

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் எங்களுடைய தயாரிப்பில் உருவான ’36 வயதினிலே’ படத்திற்கு இசையமைத்தார். அதன்பிறகு இந்த படத்தில் மீண்டும் அவருடன் இணைந்திருக்கிறோம். இந்தப் படத்தில் அனைத்து பாடல்களும் அற்புதமாக இருக்கிறது. இந்த படத்தில் அவர் ஒரு பாடலுக்கு நடனமாடி இருக்கிறார். அதற்கும் ரசிகர்கள் வரவேற்பு தெரிவித்திருக்கிறார்கள். இயக்குநர் அல்போன்ஸ் புத்திரனுக்கும் என்னுடைய நன்றிகள்” என்றார்.

தயாரிப்பாளர் கார்த்திகேயன் சந்தானம் பேசுகையில், ”நான் வாழ்க்கையில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது ஒரு முக்கியமான முடிவை எடுத்தேன். அது என் மனைவியை காதலித்தது. அன்றைய தினம் விதைத்த விதை தான் இன்று விருட்சமாக வளர்ந்து மேடையில் உங்கள் முன்னால் நிற்கிறேன். அத்துடன் கார்த்திக் சுப்புராஜும் உறவினர் ஆனார். இது மிகவும் உணர்வுபூர்வமான தருணம்.

ராஜசேகர் என் வாழ்வில் கிடைத்த மிக இனிமையான மனிதர். இந்த படத்தில் இருந்து நாங்கள் புதிய பயணத்தை தொடங்கி இருக்கிறோம். சூர்யாவை போல் ஒரு ஜென்டில்மேன் ஆக இருக்க முடியுமா என தெரியவில்லை. மக்கள் மீதும்… ரசிகர்கள் மீதும்… அவர் காட்டும் அன்பை போல் வேறு யாரிடமும் நான் பார்த்ததில்லை. அவரிடம் இருந்து பெற்ற ‘ஆரா’ என் இறுதி மூச்சு வரை தொடரும். அவருடைய ‘அகரம் ‘ அலுவலகத்திற்கு ஒரு முறை தான் விஜயம் செய்தேன். எங்களால் என்ன செய்ய முடியும் என யோசிக்க வைத்தது அந்த சந்திப்பு. ஐ லவ் யூ சூர்யா சார். படத்தைப் பற்றி நாங்கள் எப்போதும் பேச மாட்டோம். படம் தான் பேச வேண்டும் என கார்த்திக் சுப்புராஜ் சொல்வார். ஆனால் ஒன்றை மட்டும் உறுதியாக சொல்கிறேன். சிறப்பான- தரமான -அழகான- அன்பான – சம்பவம் இந்த படத்தில் இருக்கிறது” என்றார்.

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பேசுகையில், ” இசை வெளியீட்டு விழாவில் என்னுடைய முதல் பேச்சு இதுதான். வருகை தந்திருக்கும் அனைவருக்கும் முதலில் நன்றி. பீட்சா படத்திலிருந்து கார்த்திக் சுப்புராஜ் உடன் இணைந்து பயணித்துக் கொண்டிருக்கிறேன். நம்மிடம் இருக்கும் பைத்தியக்காரத்தனத்தை வெளியில் கொண்டு வந்து, அதனை கலை வடிவமாக மாற்றும் திறமைக்காரர் கார்த்திக் சுப்புராஜ். அவருடன் பணியாற்றும்போது கிடைக்கும் அனுபவம் வித்தியாசமானது. தயாரிப்பாளர்களுக்கும் நன்றி. இந்த படத்தில் மிகவும் அன்பான நடிகர் சூர்யாவுடன் பணியாற்றியது மறக்க முடியாதது. எப்போதும் பெரிய நட்சத்திரங்களுடன் பணியாற்றும்போது தயக்கம் இருக்கும். ஆனால் இந்த படத்தில் அந்த தயக்கத்தை உடைத்து இயல்பாக்கியவர் சூர்யா சார்.

படப்பிடிப்பு தளத்தில் பூஜா ஹெக்டே எப்படி ரியாக்ட் செய்வாரோ.. அதிலிருந்து ஒரு விசயத்தை கார்த்திக் சுப்புராஜ் எடுத்து இதில் பயன்படுத்தி இருக்கிறார்.

இந்த திரைப்படத்தில் என்னுடைய அம்மாவும் பாடியிருக்கிறார்கள்.
இந்தப் படத்திற்காக கடினமாக உழைத்து இருக்கிறோம். இது ரசிகர்களுடன் மாயாஜால தொடர்பை ஏற்படுத்தி வெற்றி பெறச் செய்யும் என நம்புகிறேன்” என்றார்.

பாடலாசிரியர் விவேக் பேசுகையில், ” நம்ம நெனச்சது நடந்துருமா.. சிங்கம் மறுபடியும் திரும்புதும்மா.. முன்ன ஒரு கதை இருந்ததும்மா.. இப்போ உரு கொண்டு இறங்குதம்மா.. சூர்யாவைப் பற்றி எவ்வளவு சொன்னாலும் போதாது. சூர்யா சாருக்கு எப்போதும் நன்றி கடன் பட்டிருக்கிறேன். நான் ’36 வயதினிலே’ என்ற திரைப்படத்தில் தான் அனைத்து பாடல்களையும் எழுதினேன்.

சூர்யாவைப் பற்றி ஒரு பாடலில் சொல்ல வேண்டும்… ஆனால் நேரடியாக சொல்லாமல் சொல்ல வேண்டும் என நினைத்தேன். ‘ஒரு தீயில சொல்லெடுத்து ஒளி போடுற கையெழுத்து’ என சொல்லியாகிவிட்டது. ‘ வீரனாம் கர்ணனுக்கே அவ அப்பன்..’ எனும் வரிகளை எழுதியது மறக்க முடியாது. அவருடன் இணைந்து பயணித்ததில் பெரு மகிழ்ச்சி.

இந்த படத்தின் டீசரில் ‘பரிசுத்த காதல்’ வருகிறது. இந்த பரிசுத்த காதல் சந்தோஷ் நாராயணனின் பரிசுத்த காதலை சொல்கிறது. சந்தோஷ் நாராயணன் தமிழ் சினிமாவின் ஜீனியஸ். ‘ கனிமா ..’ பாடலில், படத்தின் பாடல் வெளியீட்டிற்கு முதல் நாள் தற்போது நீங்கள் கேட்கும் வரிகள் இல்லை. இசையும் இல்லை. கதாபாத்திரத்தின் நடன அசைவுகளுக்கு ஏற்ப இசையை மாற்றி.. பாடல் வரிகளையும் மாற்றி அமைத்தார். அந்த அளவிற்கு நுட்பமாகவும் நுணுக்கமாகவும் பணியாற்றுபவர் தான் இந்த ஜீனியஸ்.

இந்த திரைப்படத்தில் இதுவரை மூன்று பாடல்கள் வெளியாகி இருக்கிறது. இன்னும் நிறைய பாடல்கள் உண்டு . நான் மேலும் மூன்று பாடல்களை எழுதி இருக்கிறேன். அந்த மூன்று பாடல்களும் மிகச் சிறப்பானதாக இருக்கும். அவருக்கு என் நன்றி.

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் எங்களைப் போன்ற பாடல் ஆசிரியர்களுக்கு முழுமையான சுதந்திரத்தை வழங்குவார். அவர் உருவாக்கிய கதை சூழல்தான் அற்புதமான பாடல்களாக மாற்றம் பெறுகிறது. இதற்காக அவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மற்றும் இந்த படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் பேசுகையில், ” முதல் முறையாக சூர்யா படத்தின் முன்னோட்டத்தில் பணியாற்றி இருக்கிறேன். சூர்யா நடித்த அன்புச்செல்வன் கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடிக்கும். ‘பிதாமகன்’ பட சூர்யாவை பிடிக்கும். ரெட்ரோ படத்தில் அனைத்து அம்சங்களும் மிகச் சிறப்பாக இருக்கிறது” என்றார்.

நடிகர் ஜோஜு ஜார்ஜ் பேசுகையில், ” வந்தாரை வாழ வைக்கும் தமிழகம். சினிமாவை கொண்டாடும் இந்த மண்ணில்… இந்த மேடையில்.. நிற்பதற்கு சந்தோஷமாக இருக்கிறது. இந்தப் படத்தில் என் கதாபாத்திரத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் சொன்னபோது பயந்துவிட்டேன். அவரிடம் ஒரே ஒரு வேண்டுகோளை தான் வைத்தேன். அதை இயக்குநர் நிறைவேற்றினார். எனக்கு என் மீது நம்பிக்கையை கொடுத்த படம்.

மலையாளத்தில் மம்முட்டியுடன் நடித்த ஒரு படத்தில்தான் எனக்கு பிரேக் கிடைத்தது. அப்போது அவரிடம் இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு எனக்கு இரண்டு ஆண்டுகள் வரை வாய்ப்புகள் தொடர்ந்து கிடைக்குமா? என கேட்டேன். வெற்றியை எப்படி கையாளுகிறாயோ… அதைப் பொறுத்து தான் வாய்ப்பு தொடரும் என்றார். இதற்கு நான் நேரில் பார்த்த மிக சிறந்த உதாரணம் சூர்யா சார். இத்தனை வெற்றிகளுக்கு பிறகும் அவரிடம் இருக்கும் எளிமை.. எனக்கு மிகவும் பிடிக்கும். ஐ லவ் யூ சார். இந்த படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

தயாரிப்பாளர் ஜெயந்தி லால் கட்டா பேசுகையில், ” இந்தப் படத்தில் இணைந்து பணியாற்ற வாய்ப்பளித்ததற்காக முதலில் சூர்யாவிற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவர் நடித்த பல படங்கள் ஹிந்தியில் ரீமேக் ஆகியிருக்கிறது. அதில் அமீர்கான் – அக்ஷய் குமார் – அஜய் தேவகன் – போன்றவர்கள் நடித்திருக்கிறார்கள். சூர்யாவை இந்தியா முழுவதும் தெரியும். அவர் இந்தியாவின் ஹீரோ. எனக்கு இந்தி மட்டும் தான் தெரியும். அவர்களுக்கு ஆங்கிலமும், தமிழ் மட்டும்தான் தெரியும். இருப்பினும் அரை மணி நேரம் நாங்கள் சந்தித்து பேசினோம். கார்த்திகேயன் சந்தானம் தான் பேச்சுவார்த்தைக்கு உதவினார். நான் முதன்முதலில் இவ்வளவு பிரமாண்டமான விழாவில் கலந்து கொள்கிறேன். எனக்கு தமிழ் படங்கள் என்றால் சூர்யாவின் படங்கள் மட்டும் தான் தெரியும். திரைப்படத்தின் வெற்றிக்கு உதவும் ரசிகர்களை வாழ்த்துகிறேன். ரெட்ரோ திரைப்படத்தின் வெற்றி விழாவை மும்பையில் நடத்துகிறேன். சூர்யாவின் ரசிகர்கள் அனைவரும் அதில் கலந்து கொள்ள வேண்டும் என அழைப்பு விடுக்கிறேன்” என்றார்.

நடிகை பூஜா ஹெக்டே பேசுகையில், ” நான் கலந்து கொள்ளும் இரண்டாவது இசை வெளியீட்டு விழா நிகழ்வு. இதனை சிறப்பானதாக மாற்றிய அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ் சினிமாவில் தான் முதலில் அறிமுகமானேன்.

இந்த வாய்ப்பினை வழங்கிய தயாரிப்பாளருக்கும், இயக்குநருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படத்தில் தமிழில் பின்னணி பேசி இருக்கிறேன். இதற்கு உதவிய இயக்குநர் குழுவினருக்கும் நன்றி. டீசரில் எந்த டயலாக்குகளையும் நான் பேசவில்லை என்றாலும் இசை மூலமாக என் கதாபாத்திரத்தின் உணர்வை ரசிகர்களுக்கு சொன்ன இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனுக்கு என் நன்றி. இந்த திரைப்படத்தில் ருக்மணி எனும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன் இத்தகைய கேரக்டரை வடிவமைத்ததற்காகவும் அதில் நடிப்பதற்கு எனக்கு வாய்ப்பளித்ததற்காகவும் இயக்குநருக்கு மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். கேங்ஸ்டர் கதையை எழுதி இருக்கிறீர்கள். ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கேங்ஸ்டர் கதையை எழுதுங்கள் அதில் நடிப்பதற்கு வாய்ப்பு தாருங்கள்.
சூர்யா சார் இந்த படத்தில் பாரி என்ற கேரக்டரில் நடித்திருக்கிறார். சூர்யாவுடன் இணைந்து நடித்த அனுபவம் மறக்க முடியாதது. எப்போதும் ஊக்கப்படுத்திக் கொண்டே இருப்பார். அவருடைய எக்ஸ்பிரஸிவ்வான கண்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்.
‘கனிமா ‘பாடலை ரீல்சாக உருவாக்கி பதிவிட்ட அனைவருக்கும் நன்றி” என்றார்.