படை தலைவன் – விமர்சனம்

நடிப்பு: சண்முகபாண்டியன் விஜயகாந்த், கஸ்தூரி ராஜா, யாமினி சந்தர், முனீஷ்காந்த், கருடன் ராம், ரிஷி, ஏ.வெங்கடேஷ், யூகி சேது, ஸ்ரீஜித் ரவி, அருள்தாஸ், லோகு என்பிகேஎஸ் மற்றும் பலர்

எழுத்து & இயக்கம்: யு.அன்பு

வசனம் & திரைக்கதை: பார்த்திபன் தேசிங்கு

ஒளிப்பதிவு: எஸ்.ஆர்.சதீஷ்குமார்

படத்தொகுப்பு: எஸ்.பி.அகமது

இசை: இளையராஜா

தயாரிப்பு: ‘விஜே கம்பைன்ஸ் & தாஸ் பிக்சர்ஸ்’ ஜெகநாதன் பரமசிவம்

திரையரங்க வெளியீடு: கேப்டன் சினி கிரியேஷன்ஸ்

பத்திரிகை தொடர்பு: சதீஷ், சிவா (எய்ம்)

ஒரிசா மாநிலத்தின் அடர்ந்த காட்டுப்பகுதியில் உள்ள மலைகிராமம் ஒன்றில் கதை ஆரம்பமாகிறது. இங்குள்ள பழங்குடி குடும்பங்களோடு, அவர்கள் வழிபடும் வனபத்ரகாளி என்ற தெய்வத்தின் பூசாரி (முனிஷ்காந்த்) குடும்பமும் வசித்து வருகிறது. இந்த பூசாரி குடும்பம் தமிழ் குடும்பம். அவரது மகள் கதையின் நாயகி பொன்னி (யாமினி சந்தர்).

அந்த காட்டில் ஈவு இரக்கமற்ற ஒரு கொடூர சாமியார் (கருடன் ராம்), முழுக் காட்டையும் தன் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவர ஆசைப்படுகிறார். வனபத்ரகாளிக்கு உயிர்பலிகள் கொடுத்தால் தன் ஆசையை அந்த தெய்வம் பூர்த்தி செய்யும் என நம்புகிறார். இதற்கு முதல் படியாக, வனபத்ரகாளி சிலையை தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து, அந்த தெய்வத்தை பழங்குடி கிராம மக்கள் அணுகி வழிபட முடியாத நிலையை ஏற்படுத்துகிறார். அடுத்து, தனது அடியாட்களை ஏவி, அந்த மக்கள் வளர்க்கும் கால்நடைகளை அபகரித்து கொண்டுவரச் செய்து, வனபத்ரகாளிக்கு உயிர்பலி கொடுக்கிறார். தனது அட்டகாசத்தை ஏற்காமல் எதிர்க்கும் பழங்குடி மக்களை கழுத்தில் கயிறு மாட்டி மரத்தில் கட்டித் தொங்கவிட்டு கொலை செய்து கொக்கரிக்கிறார். அவரை எதிர்க்க முடியாமல், அச்சத்தில் அவருக்கு அடிமைகளாக இருக்கிறார்கள் பழங்குடி கிராம மக்கள். இந்த கொடூர சாமியாரின் பிடியிலிருந்து தங்களை விடுவிக்க ஒரு நல்லவர் வர மாட்டாரா என்று கவலையோடு ஏங்கிக் கிடக்கிறார்கள்.

அடுத்து, தமிழ்நாட்டின் பொள்ளாச்சி அருகே உள்ள சேத்துமடை என்ற ஊருக்கு காட்சி மாறுகிறது. இங்கு கதையின் நாயகன் வேலு (சண்முகபாண்டியன்), அப்பா வெள்ளைச்சாமி (கஸ்தூரி ராஜா), ஒரு தங்கை ஆகியோர் வசித்து வருகிறார்கள். மண்பாண்டங்கள் செய்து விற்றுப் பிழைக்கும் இவர்கள் கடந்த 25 ஆண்டுகளாக ‘மணியன்’ என்ற ஆண் யானையை பாசமாக தங்கள் வீட்டில் வைத்து வளர்த்து வருகிறார்கள்.

மண்பாண்டத் தொழிலில் பெரிய வருமானம் இல்லாத நிலையில், தீனி வாங்கிப் போட்டு யானையை வளர்ப்பது அத்தனை சுலபமான காரியமா, என்ன? இதனால், வெள்ளைச்சாமி ஒரு கந்துவட்டி தாதாவிடம் கடன் வாங்கி, வாழ்க்கையை ஓட்டி வருகிறார். ஒரு கட்டத்தில், கந்துவட்டி தாதாவுக்கு செலுத்த வேண்டிய வட்டியைக் கூட செலுத்த முடியாமல் போய்விடுகிறது. இதனால், வட்டித்தொகை ரூ.25ஆயிரத்தை உடனே கட்ட வேண்டும் என்றும், அதை கட்டும் வரை தன் வீட்டைவிட்டு வெளியே போகாமல் நின்றுகொண்டே இருக்க வேண்டும் என்றும் வெள்ளைச்சாமிக்கு உத்தரவிடுகிறார் கந்துவட்டி தாதா. அப்பாவின் நிலை கண்டு பொருமும் மகன் வேலு, அங்கும் இங்கும் ஓடி, சிரமப்பட்டு, பணம் புரட்டி, வட்டியைக் கட்டி, அப்பாவை மீட்கிறார்.

குடும்பத்தின் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க கூடுதலாக பணம் சம்பாதிக்க வேண்டும் என்று நினைக்கும் வேலுவுக்கு, மணியன் யானையை திருமண விழாக்களுக்கும், கோயில் திருவிழாக்களுக்கும் வாடகைக்கு விட்டால் நிறைய சம்பாதிக்கலாம் என்று யோசனை கூறுகிறார்கள் வேலுவின் நண்பர்கள். அந்த யோசனையைத் தான் ஏற்பதோடு, தன் அப்பாவையும் ஏற்கச் செய்கிறார் வேலு.

இதற்கிடையில், மணியன் யானை ரூ. 5 கோடி வரை விலை போகும் என்பதைத் தெரிந்துகொள்ளும் கந்துவட்டி தாதா, தான் கொடுத்த கடன் தொகைக்கு ஈடாக யானையைத் தன்னிடம் கொடுத்து விடுமாறு கேட்கிறார். இதை ஏற்க மறுக்கும் வேலு, மொத்தக் கடனையும் சில தினங்களில் திருப்பிக் கொடுத்துவிடுவதாக உறுதி அளிக்கிறார்.

ஆனால், மணியன் யானையை எப்படியாவது அபகரித்துவிட வேண்டும் என்று நினைக்கும் கந்துவட்டி தாதா, சதித்திட்டம் தீட்டுகிறார். ஒரு திருமண விழாவில் பங்கேற்பதற்காக அழைத்து வரப்படும் மணியன் யானைக்கு செயற்கையாக மதம் பிடிக்க ஏற்பாடு செய்கிறார். இதனால் யானை திடீரென்று மதம் பிடித்து, திருமண விழாவில் களேபரத்தில் இறங்கி, பலரை துவைத்து துவம்சம் செய்கிறது.

தகவலறிந்து வரும் போலீசார், யானையை மடக்கி போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்கிறார்கள். இவ்வழக்கை விசாரிக்கும் நீதிபதியிடம், யானைக்கு மதம் பிடிக்க வாய்ப்பே இல்லை என்று வாதாடுகிறது வேலு தரப்பு. ஆனால் நீதிபதியோ, யானைக்கு மதம் பிடிக்கவில்லை என்று சான்றிதழ் வாங்கி வந்து கொடுத்து, அதன் பின்பு யானையை அழைத்துச் செல்லலாம் என்றும், அதுவரை யானையை வனத்துறையின் ’யானைகள் மறுவாழ்வு முகாமில்’ வைத்து பராமரிக்க வேண்டும் என்றும் உத்தரவிடுகிறார்.

இதனை தொடர்ந்து, வேலுவும், அவரது அப்பா வெள்ளைச்சாமியும் மிகவும் சிரமப்பட்டு, பணம் புரட்டி, அரசு அலுவலகங்களில்
லஞ்சம் கொடுத்து, சான்றிதழ் வாங்கிக்கொண்டு வந்து யானை மறுவாழ்வு முகாமில் கொடுக்கும்பொழுது, அங்கிருந்து மணியன் யானை தப்பியோடி விட்டதாக ரொம்ப சர்வசாதாரணமாகச் சொல்லுகிறார் வனத்துறை அதிகாரி.

இதைக் கேட்டு வேலுவும், வெள்ளைச்சாமியும் அதிர்ச்சி அடைகிறார்கள். பாசமாக வளர்த்த மணியன் யானையைத் தொலைத்த அவர்கள் வேதனையில் தவிக்கிறார்கள். எப்படியாவது மணியன் யானையைத் தேடி கண்டுபிடித்து அழைத்து வரவேண்டும் என்ற உறுதியுடன் வேலுவும், அவருடைய நண்பர்களும் புறப்பட்டுப் போகிறார்கள்.

மணியன் யானையைக் கடத்தியது யார்? எதற்காக கடத்தினார்கள்? எங்கே கொண்டு சென்றார்கள்? அது இருக்கும் இடத்தை வேலு கண்டுபிடித்தாரா? அதை மீட்கும் போராட்டத்தில் எத்தகைய ஆபத்துகளையும், சவால்களையும் அவர் சந்தித்தார்? ஒரிசா மலைகிராம மக்களுக்கு கொடூர சாமியாரிடமிருந்து விடுதலை கிடைத்ததா? எப்படி? என்பன போன்ற கேள்விகளுக்கு விடை அளிக்கிறது ‘படை தலைவன்’ திரைப்படத்தின் மீதிக்கதை.

கதையின் நாயகன் வேலுவாக விஜயகாந்தின் இளைய மகன் சண்முகபாண்டியன் நடித்திருக்கிறார். 2015-ல் அவர் அறிமுகமான ‘சகாப்தம்’, 2018-ல் வெளியான அவரது ‘மதுர வீரன்’ ஆகிய இரண்டு படங்களைக் காட்டிலும் இந்த மூன்றாவது படத்தில் அவரது தோற்றத்திலும் நடிப்பிலும் நல்ல முன்னேற்றம் தெரிகிறது. அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளில் அட்டகாசமாக அசத்தியிருக்கிறார். எதிர்காலத்தில், உடல்மொழியையும், முகபாவனையையும் வெளிப்படுத்த இன்னும் கொஞ்சம் பயிற்சி எடுத்துக்கொள்வதோடு, நல்ல கதை, அருமையான திரைக்கதை, மற்றும் ஆளுமையுள்ள திறமையான இயக்குநரை கவனமாக தேர்ந்தெடுத்து படங்கள் செய்தால், தமிழ் திரைத்துறையில் அவர் நிச்சயம் வலுவாக கால் ஊன்ற முடியும்.

நாயகனின் அப்பா வெள்ளைச்சாமியாக கஸ்தூரி ராஜா, ஒரிசா பழங்குடிப்பெண் பொன்னியாக யாமினி சந்தர், கொடூர சாமியாராக கருடன் ராம் மற்றும் முனீஷ்காந்த், ரிஷி, ஏ.வெங்கடேஷ், யூகி சேது, ஸ்ரீஜித் ரவி, அருள்தாஸ், லோகு என்பிகேஎஸ் உள்ளிட்டோர் தத்தமது கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.

இப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் யு.அன்பு. வசனம் மற்றும் திரைக்கதை எழுதியிருக்கிறார் பார்த்திபன் தேசிங்கு. இந்த இருவருக்கும் இடையில் ஒத்துழைப்பு இல்லாததாலோ, அல்லது இவர்களின் படைப்பாற்றல் இவ்வளவு தான் என்பதாலோ, யானைக்கும் மானுடனுக்கும் இடையிலான பாசப்ப்பிணைப்பு என்ற நல்ல கதைக்கருவை அழுத்தம் இல்லாத திரைக்கதை மற்றும் சுவாரஸ்யம் இல்லாத காட்சிகள் மூலம் சொல்லியிருப்பதால் படம் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. விஜயகாந்தை ஏஐ தொழில்நுட்பம் மூலம் மீண்டும் திரையில் சில நொடிகள் தோன்ற வைத்திருப்பது பாராட்டத் தக்கது.

’இசை இளையராஜா’ என்று டைட்டில் கார்டில் தெரிகிறார். ஆனால், பாடல்கள் மற்றும் பின்னணி இசையில் அவர் தெரியவில்லை.

ஒளிப்பதிவாளர் எஸ்.ஆர்.சதிஷ்குமாரின் கேமரா கிராமத்துப் பகுதிகளை அழகாகவும், ஆக்‌ஷன் காட்சிகளை அதிரடியாகவும் படமாக்கியிருக்கிறது.

‘படை தலைவன்’ – விஜயகாந்த் ரசிகர்களுக்குப் பிடிக்கும்!

ரேட்டிங்: 2.5/5