மர்மர் – விமர்சனம்

நடிப்பு: ரிச்சி கபூர், தேவராஜ் ஆறுமுகம், சுகன்யா ஷண்முகம், யுவிகா ராஜேந்திரன், அரியா செல்வராஜ்

எழுத்து & இயக்கம் : ஹேம்நாத் நாராயணன்

ஒளிப்பதிவு: ஜேசன் வில்லியம்ஸ்

படத்தொகுப்பு: ரோஹித்

பின்னணி ஒலி அமைப்பு: கேவ்ய்ன் பிரெடெரிக்

தயாரிப்பு: ’எஸ்.பி.கே பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட்’ பிரபாகரன்

பத்திரிகை தொடர்பு: ஸ்ரீ வெங்கடேஷ்

ஓர் இடத்தில் நடந்த சம்பவங்களைப் பதிவு செய்த கேமராவில் உள்ள காட்சிகள், அப்படியே ஒரு ஆவணப்படமாக எடிட் செய்யப்பட்டு வெளியிடப்பட்டால், அதை ‘ஃபவுண்ட் ஃபுட்டேஜ்’ திரைப்படம் என்று ஹாலிவுட்டில் வகைப்படுத்துவார்கள். அதே பாணியில், ”தமிழின் முதல் ஃபவுண்ட் ஃபுட்டேஜ் ஹாரர் திரைப்படம்” என்ற தனிச்சிறப்போடு உருவாகி வெளிவந்திருக்கிறது ‘மர்மர்’ திரைப்படம். ஆரம்பம் முதல் முடிவு வரை வீடியோ கேமராக்களின் விஷுவல்களிலேயே இப்படம் நகர்கிறது.

திருவண்ணாமலை மாவட்டத்தின் ஜவ்வாது மலைப்பகுதியில் உள்ள காத்தூர் கிராமத்தை ஒட்டியுள்ள அடர்ந்த காட்டிற்குள் செல்பவர்கள் திரும்பி வராமல் மாயமாகி விடுவார்களாம். காரணம், அந்த காட்டில் மனிதர்களை பலி கேட்கும் மங்கை என்ற சூனியக்காரியின் ஆவி, முழு பவுர்ணமி இரவில் குளத்தில் குளிக்கும் ஏழு சப்த கன்னியர் இருப்பது தான் என்று அக்கிராம மக்கள் நம்புகிறார்கள்.

மேற்கண்ட இரண்டு அமானுஷ்ய விஷயங்களும் உண்மையா? அல்லது இட்டுக்கட்டிய கட்டுக்கதையா? என்பதை கண்டுபிடிப்பதற்காகவும், வீடியோ கேமராக்கள் மூலம் ஆவணப்படுத்துவதற்காகவும் மெல்வின் (தேவராஜ் ஆறுமுகம்), ரிஷி (ரிச்சி கபூர்), அங்கிதா (சுகன்யா சண்முகம்), ஜெனிபர் (அரியா செல்வராஜ்) ஆகிய நான்கு யூடியூபர்கள் சென்னையிலிருந்து காத்தூருக்குச் செல்கிறார்கள். அங்கு இவர்களை அந்த காட்டுப்பகுதிக்கு அழைத்துச் செல்ல இருந்த உள்ளூர் வழிகாட்டி ஒருவர் எதிர்பாராத விதமாக பாம்பு கடிபட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால், அவரது மகள் காந்தா (யுவிகா ராஜேந்திரன்) பணத்துக்கு ஆசைப்பட்டு இவர்களுக்கு வழித்துணையாய் வர முன்வருகிறார்.

ஊர்மக்களின் எச்சரிக்கையை பொருட்படுத்தாமல், இந்த ஐந்து பேரும் காட்டுக்குள் சென்று, கூடாரம் அமைத்து இரவு தங்குகிறார்கள். ஆவிகளுடன் பேசுவதற்கு பயன்படுத்தப்படும் ஓய்ஜா போர்டை வைத்து ஆவிகளை அழைக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள். அப்போது திடீரென்று அமானுஷ்ய நிகழ்வுகள் ஆரம்பமாகின்றன. பிறகு என்னவெல்லாம் நடக்கிறது என்பதை ரத்தத்தை உறைய வைக்கும் திகிலுடன் விவரிக்கிறது ‘மர்மர்’ திரைப்படத்தின் மீதிக்கதை.

மெல்வினாக வரும் தேவராஜ் ஆறுமுகம், ரிஷியாக வரும் ரிச்சி கபூர், அங்கிதாவாக வரும் சுகன்யா சண்முகம், ஜெனிபராக வரும் அரியா செல்வராஜ், கிராமத்துப் பெண் காந்தாவாக வரும் யுவிகா ராஜேந்திரன் ஆகியோர் தத்தமது கதாபாத்திரத்துக்குத் தேவையான யதார்த்தமான நடிப்பைக் கொடுத்து கவனிக்க வைக்கிறார்கள். ரிச்சி கபூரின் நகைச்சுவை வசனங்களும், மேனரிசமும் கவர்கின்றன. சுகன்யா சண்முகம், அரியா செல்வராஜ் இருவரும் அழகும் கிளாமருமாய் வசீகரிக்கிறார்கள்.

இப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் ஹேமந்த் நாராயணன். படத்தின் துவக்கம் முதல் இறுதிக் காட்சி வரை, இருள் சூழ்ந்த திரையில், ”எந்த பக்கத்தில் இருந்து என்ன வருமோ…” என்ற அச்சத்தோடு பார்வையாளர்களை படத்துடன் பயணிக்க வைத்திருக்கிறார் இயக்குநர். போரடிக்காமல் விறுவிறுப்பாக படத்தை நகர்த்தி அமானுஷ்ய பிரியர்களுக்கு விருந்து படைத்துள்ளார்.

ஒளிப்பதிவாளர் ஜேசன் வில்லியம்ஸ், இரவு நேரத்தில் மிக குறைந்த வெளிச்சத்தில் படமாக்கியிருந்தாலும், காட்சிகளை மிக தரமாக கொடுத்திருக்கிறார். அதிலும் கேமராவில் பதிவு செய்யப்படும் காட்சிகளை கண்ணுக்கு உறுத்தாத வகையில் காட்சிப்படுத்தி திரைக்குள் இருக்கும் பயத்தை பார்வையாளர்களிடத்திலும் கடத்தியிருக்கிறார்.

பின்னணி இசையமைப்பாளர் இல்லை என்ற உணர்வே ஏற்படாத வகையில் ஒலி வடிவமைப்பாளர் கேவ்ய்ன் பிரெடெரிக் நேர்த்தியாக பணியாற்றியிருக்கிறார். ஆள் நடமாட்டம் இல்லாத காட்டுப் பகுதியின் பகல் மற்றும் இரவு நேரங்களில் கேட்கும் ஓசைகளை துல்லியமாக பதிவு செய்திருப்பவர், நடுநடுவே வரும் அமானுஷ்ய ஒலிகள் மூலம் நெஞ்சை பதற வைக்கிறார்.

வழக்கமான திகில் படங்கள் போல் இல்லாமல், ஒருவித பதட்டத்துடன் படத்தை பயணிக்க வைத்து, பயத்துடன் பார்க்கும்படி காட்சிகளை தொகுத்திருக்கும் படத்தொகுப்பாளர் ரோஹித், காட்சிகளின் நீளத்தை குறைத்து படத்தின் நீளத்தையும் குறைத்திருந்தால், இன்னும் கூடுதலாக ரசித்திருக்கலாம்.

‘மர்மர்’ – புதிய திகில் அனுபவம்; பார்க்கலாம்!

ரேட்டிங்: 2.5/5.