என் காதலே – விமர்சனம்

நடிப்பு: லிங்கேஷ், லியா (லண்டன்), திவ்யா தாமஸ், காட்பாடி ராஜன், கஞ்சா கருப்பு, மாறன், தர்சன், மதுசூதனன் ராவ் மற்றும் பலர்

எழுத்து, இயக்கம்: ஜெயலட்சுமி

ஒளிப்பதிவு: டோனிசென் & வெங்கடேஷ்

படத்தொகுப்பு: கோபி கிருஷ்ணா – ரஞ்சித்

இசை: சாண்டி சாண்டல்லோ

தயாரிப்பு: ’ஸ்கை வாண்டர்ஸ் எண்டர்டைன்மெண்ட்’ ஜெயலட்சுமி

வெளியீடு: துரைசாமி

பத்திரிகை தொடர்பு: வேலு

இப்படம் எதைப் பற்றியது என்பதை தலைப்பே சொல்லிவிடுகிறது. ஆம், இது காதல் பற்றிய படம்.

காதலில் பள்ளிக்கூட காதல், கல்லூரி காதல், அலுவலக காதல், ஒருதலை காதல், காணாமலே காதல் என்றெல்லாம் பல வகைகள் உள்ளன. அவற்றில் இது முக்கோணக் காதல். முதல் நபர் இரண்டாம் நபரை காதலிப்பார்; அந்த இரண்டாம் நபரோ முதல் நபரை காதலிக்காமல் மூன்றாம் நபரை காதலிப்பார். இதனால் ஏற்படும் பிரச்சனையும், அதற்கான தீர்வும் தான் முக்கோண காதலின் கதை. அந்த ஜானரில் வெள்ளைக்காரப் பெண், நமது கலாச்சாரம் உள்ளிட்ட சில புதுமைகளைப் புகுத்தி, வித்தியாசப்படுத்தி, உள்ளத்தை உருக்கும் மென்மையான காதல் கதையாக இந்த ‘என் காதலே’ தயாராகி திரைக்கு வந்திருக்கிறது.

இப்படக்கதை கடற்கரையோர மீனவக் குப்பம் ஒன்றில் நடப்பதாக கட்டமைக்கப்பட்டுள்ளது. இக்குப்பத்தைச் சேர்ந்த நாயகன் தீனா (லிங்கேஷ்), சிறுவயதிலேயே பெற்றோர்களை சுனாமிக்குப் பறி கொடுத்து அநாதை ஆனவர். அதனால் அவரது தாய்மாமாவான குப்பத்துப் பெரிய மனிதரால் (மதுசூதனன் ராவ்) வளர்த்து ஆளாக்கப்பட்டவர். படித்து பட்டம் பெற்றவர். என்றாலும், தனிப்பட்ட ஈடுபாடு காரணமாக மீன்பிடி தொழில் செய்துவருபவர்.

தீனாவின் தாய்மாமாவின் மகள் தனம் (திவ்யா தாமஸ்). சிறுவயதிலிருந்தே தீனாவுடன் பழகி, விரும்பி, தனக்கு சகலமும் தீனா தான் என்றெண்ணி ஒருதலையாய் காதலித்துக் கொண்டிருக்கும் பெண். அவரது முறைப்பையன் தீனா என்பதால், தீனாவுக்கு தனம், தனத்துக்கு தீனா என்ற எண்ணத்தில் தனத்தின் பெற்றோரும் இருக்கையில்…

இளம்பெண் ஹெலன் (லியா) உள்ளிட்ட வெளிநாட்டினர் குழு ஒன்று தமிழ்நாட்டுக் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டை அறிந்துகொள்ள இங்கு வருகிறது. அவர்களுக்கு வேண்டிய வசதிகள் செய்து கொடுத்து உதவுமாறு தனத்தின் அப்பாவான குப்பத்துப் பெரியவரிடம் பாதிரியார் வேண்டிக்கொள்கிறார். அதை ஏற்கும் பெரியவர், அவர்களுக்கு உறுதுணையாக இருந்து உதவும் பொறுப்பை தனது மருமகனான தீனாவிடம் ஒப்படைக்கிறார்.

தங்களுக்கு கார் டிரைவராகவும், கைடாகவும் இருக்கும் தீனாவை ஆரம்பத்தில் தவறாகப் புரிந்துகொண்டு சற்று விலகியே இருக்கும் ஹெலன், நாட்கள் செல்லச் செல்ல தீனாவின் நல்ல குணங்கள் பிடித்துப்போக, அவர் மீது ஈர்ப்புக் கொள்கிறார். அதே ஈர்ப்பு தீனாவுக்கும் ஏற்பட, அவரும் ஹெலனும் காதலர்கள் ஆகி, ஈருடல் ஓருயிராகி இன்பவானில் சிறகடிக்கிறார்கள்.

இந்த விஷயம், தீனா தான் உலகம் என்ற எண்ணத்தில் இருக்கும் அவரது முறைப்பெண் தனத்துக்குத் தெரிய வர, அவர் அதிர்ச்சியாகிறார். அவரது பெற்றோர்களும் ஆவேசம் அடைகிறார்கள். அதன்பின் என்னவெல்லாம் நடக்கிறது? தீனா யாரை கரம் பிடிக்கிறார்? அவரால் விலக்கப்படும் பெண்ணின் கதி என்ன? என்பன போன்ற கேள்விகளுக்கு உணர்வுப்பூர்வமாக விடை அளிக்கிறது ‘என் காதலே’ திரைப்படத்தின் மீதிக்கதை.

கதையின் நாயகனாக, மீனவக் குப்பத்து இளைஞர் தீனாவாக லிங்கேஷ் நடித்திருக்கிறார். தனது கதாபாத்திரத்துக்குள் தன்னை கச்சிதமாகப் பொருத்திக்கொண்டு, சாதாரண மீனவக் குப்பத்து இளைஞராக யதார்த்தமாக நடித்துக் கவர்கிறார். ஆரம்பத்தில் முரட்டு ஆசாமி போல் தோன்றினாலும், காதலில் விழுந்தபின் மெல்லிய மலர் போல் மாறி, மெய்யான காதலருக்கு உரிய மகிழ்ச்சியை, வலியை, பார்வையாளர்களுக்குத் திறம்பட கடத்துவதில் வெற்றி பெற்றுள்ளார்.

நாயகனை ஒருதலையாகக் காதலிக்கும் முறைப்பெண் தனமாக திவ்யா தாமஸ் நடித்திருக்கிறார். நாயகன் நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் ‘மாமா… மாமா…’ என்று அவரையே சுற்றிச் சுற்றி வந்து காதலை வெளிப்படுத்துவது, இறுதியில் முக்கோணக் காதல் சிக்கலை மன உறுதியுடன் தீர்த்து வைப்பது என குறையேதுமின்றி நிறைவாக நடித்திருக்கிறார்.

நாயகனின் காதல் ஜோடியாக, வெளிநாட்டுப் பெண் ஹெலனாக, லண்டனைச் சேர்ந்த லியா நடித்திருக்கிறார். பார்வையாளர்களைச் சொக்க வைக்கும் அழகு மற்றும் இளமையுடன் திரையில் உலா வரும் அவர், அழகாகவும், சிறப்பாகவும் நடிக்கவும் செய்திருக்கிறார்.

கஞ்சா கருப்பும், மாறனும் பிரமாதமாக காமெடி பண்ணி, பார்வையாளர்களை வயிறு நோக சிரிக்க வைத்து, கைதட்டல் பெறுகிறார்கள்.

குப்பத்துப் பெரியவராக வரும் மதுசூதனன் ராவ், வெள்ளை ராஜனாக வரும் காட்பாடி ராஜன், மற்றும் தர்சன் உள்ளிட்ட ஏனைய நடிப்புக் கலைஞர்களும் தத்தமது கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பை அளவாக, பொருத்தமாக வழங்கியிருக்கிறார்கள்.

இப்படத்தை தயாரித்திருப்பதோடு எழுதி இயக்கியிருக்கிறார் ஜெயலட்சுமி. முக்கோணக் காதல் கதைக்கு எவ்வித குழப்பமும் இல்லாமல் சிறப்பாக திரைக்கதை அமைத்து, சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும், உள்ளத்தை உருக்கும் உணர்வுப்பூர்வமாகவும் படத்தை பிரமாதமாக நகர்த்திச் சென்றுள்ளார் இயக்குநர். பாராட்டுகள்.

சாண்டி சாண்டல்லோவின் இசை, டோனிசென் & வெங்கடேஷ் ஒளிப்பதிவு, கோபி கிருஷ்ணா – ரஞ்சித் படத்தொகுப்பு உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் இப்படத்தை நேர்த்தியாகவும், தரமாகவும் உருவாக்க உறுதுணையாக இருந்துள்ளன.

‘என் காதலே’ – ரசித்து மகிழத் தக்க காதல் காவியம்!

ரேட்டிங்: 3.5/5