கர – விமர்சனம்
நடிப்பு: தனுஷ், மமிதா பைஜு. கே.எஸ்.ரவிக்குமார், கருணாஸ், ஜெயராம், சுராஜ் வெஞ்சரமூடு, பிருத்வி பாண்டியராஜன், எம்.எஸ்.பாஸ்கர், ஸ்ரீஜா ரவி மற்றும் பலர்
எழுத்து & இயக்கம்: விக்னேஷ் ராஜா
ஒளிப்பதிவு: தேனி ஈஸ்வர்
படத்தொகுப்பு: ஸ்ரீஜித் சாரங்
இசை: ஜி.வி.பிரகாஷ்குமார்
கலை: மாயபாண்டி
ஸ்டண்ட்: தினேஷ் காசி
இணை தயாரிப்பு: குஷ்மிதா கணேஷ்
தயாரிப்பு: டாக்டர் ஐசரி கே.கணேஷ்
வழங்கல்: ’ரெட் ஜெயண்ட் மூவிஸ்’ இன்பன் உதயநிதி
மக்கள் தொடர்பு: ரியாஸ் கே.அஹ்மத், பாரஸ் ரியாஸ், சதீஷ் (AIM)
‘கர’ என்ற தலைப்பு சிலருக்கு வினோதமாகத் தோன்றலாம்; சிலருக்கு குழப்பம் ஏற்படுத்தலாம். இதற்கான விளக்கம் என்னவென்றால், இப்பட நாயகனின் குலசாமி பெயர் கரசாமி. இதுவே நாயகனின் பெயரும் கூட. ஆதலால் அதன் சுருக்கமே ‘கர’.
இப்படக்கதை 1990களில், பெருமளவு ராமநாதபுரம் மாவட்டத்தில் நடப்பதாக கட்டமைக்கப்பட்டிருக்கிறது.
”இது தான் நான் செய்யும் கடைசித் திருட்டு. இதற்குப்பிறகு திருட மாட்டேன். திருந்தி வாழ்வேன்” என்று மனதில் உறுதி எடுத்திருக்கும்
நாயகன் கரசாமி என்ற கர (தனுஷ்), தனது கூட்டாளி முருகேசனுடன் (பிருத்வி பாண்டியராஜன்) சேர்ந்து, பூட்டியிருக்கும் திருவெறும்பூர் எம்.எல்.ஏ வீட்டின் பூட்டை நேக்காக உடைத்து, திருடுவதற்காக உள்ளே நுழைகிறார்கள். அந்த நேரம் பார்த்து எம்.எல்.ஏ தன் குடும்பத்துடன் வீடு திரும்ப, இதைப் பார்த்து கூட்டாளி முருகேசன் தப்பிச் சென்றுவிட, கர மட்டும் கையும், களவுமாக பிடிபடுகிறார். போலீசிடம் ஒப்படைக்கப்படும் அவரை விசாரிப்பதற்காக வருகிறார் டிஎஸ்பி வரதன் (சுராஜ் வெஞ்சரமூடு).
தன்னுடைய பணி ஓய்வுக்கு முன் பிரபலமான வழக்கு ஒன்றையாவது வெற்றிகரமாக முடித்ததாக பேர் வாங்க வேண்டும் என்ற அற்ப ஆசையில் இருக்கும் டிஎஸ்பி வரதன், கரவின் திருட்டு முயற்சியை கற்பனையாகப் புனைந்து பயங்கரமாக ஜோடித்து எழுதுகிறார். மேலும், கர செய்யாத நான்கைந்து திருட்டுகளையும் கர மீது பொய்யாய் சுமத்தி, கரவை மிகப் பெரிய திருடனாக ஊதிப்பெருக்கிக் காட்ட முயலுகிறார். இவற்றையெல்லாம் பார்த்து தனக்கு நேரவிருக்கும் பேராபத்தை உணரும் கர, டிஎஸ்பி வரதன் உள்ளிட்ட போலீசார் அனைவரையும் தாக்கிவிட்டு, போலீஸ் நிலையத்திலிருந்து தப்பிக்கிறார். இப்படி ஒரு குற்றவாளியைத் தப்ப விட்டதற்காக உயர் அதிகாரியிடம் நோஸ்கட் வாங்குகிறார் டிஎஸ்பி வரதன். எப்பாடுபட்டாவது கரவை பிடித்து சிறையில் அடைத்து தன் களங்கத்தைத் துடைக்க வேண்டும் என்று கறுவுகிறார் வரதன்.

இனி திருட்டே வேண்டாம் என்ற வைராக்கியத்துடன், போலீசிடம் மீண்டும் சிக்கிக்கொள்ளக் கூடாது என்ற எண்ணத்தில், மனைவி செல்லியுடன் (மமிதா பைஜு) சொந்த ஊரை விட்டு வெளியேறி, ஆந்திர மாநிலம் ரேணிகுண்டா செல்கிறார் கர. அங்குள்ள உணவகம் ஒன்றில் கணவனும் மனைவியும் கடினமாக உழைத்து, பிழைப்பை நடத்துகிறார்கள். எனினும், சொற்ப சம்பளம்; வறுமை வாட்டுகிறது. வாழ்க்கையில் கொஞ்சம் முன்னேறிச் செல்லலாம் என்ற ஆசையில், இருவரும் இணைந்து சொந்தமாக ஒரு சின்ன உணவகம் துவங்க முடிவெடுக்கிறார்கள். அதற்கு மூலதனம் வேண்டுமே! வங்கிக் கடனுக்காக அலைகிறார்கள். பலன் இல்லை. ஸ்யூரிட்டி இல்லாமல் கடன் கொடுக்க எந்த வங்கியும் முன்வரவில்லை.
ஆகவே, சொந்த ஊரில் அப்பா கந்தசாமி (கே.எஸ்.ரவிக்குமார்) வசம் இருக்கும் எட்டு ஏக்கர் பூர்விக விளைநிலத்தை விற்கச் செய்து பணம் வாங்கலாம் என்ற முடிவுக்கு வரும் கர, மனைவி செல்லியை அழைத்துக்கொண்டு, சொந்த ஊருக்கு வருகிறார். அங்கே அப்பா ஏற்கெனவே பூர்விக நிலத்தை வங்கியில் அடமானம் வைத்து டிராக்டர் வாங்கியிருக்கிறார் என்பதும், அதற்கு ஒழுங்காக வட்டியும், தவணையும் செலுத்த முடியாமல் திண்டாடிக் கொண்டிருக்கிறார் என்பதும் தெரிய வர, கர அதிர்ந்து போகிறார்.

மேலும், பரம்பரை பரம்பரையாக கட்டிக்காத்து வரும் பூர்விக நிலத்தை விற்க அப்பா சம்மதிக்க மறுப்பதால், அவருக்கும் மகனுக்கும் இடையே மனவருத்தம் ஏற்படுகிறது. மறுநாள் அப்பா இறந்துபோகிறார். தனது முன்னோர்கள் புதைக்கப்பட்ட பூர்விக நிலத்திலேயே அப்பாவைப் புதைக்க சடங்குகள் செய்யும்போது, வாங்கிய கடனுக்காக நிலத்தை ஜப்தி செய்ய வங்கி அதிகாரிகள் வருகிறார்கள். அப்பாவை அடக்கம் செய்ய விடாமல் மிரட்டுகிறார்கள்.
வங்கிக் கடனை அடைத்தால் தான், அப்பா விரும்பியபடி பூர்விக நிலத்தில் அவரது உடலை அடக்கம் செய்ய முடியும் என்ற நிலை. எனவே வங்கிக்கடனை அடைக்க அந்த வங்கியிலேயே கொள்ளையடிக்க அதிரடியாக முடிவு செய்கிறார் கர.
அதன்பிறகு என்ன நடந்தது? கர தீட்டிய வங்கிக் கொள்ளைத் திட்டம் வெற்றிகரமாக நிறைவேறியதா, இல்லையா? நிலத்தை மீட்டு, அதில் அப்பாவின் உடலை நல்லடக்கம் செய்தாரா, இல்லையா? எப்படியாவது கரவைப் பிடித்து சிறையில் தள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் பம்பரமாய் சுழலும் டிஎஸ்பி வரதனின் கடும் முயற்சிகளுக்கு பலன் கிடைத்ததா, இல்லையா? என்பன போன்ற கேள்விகளுக்கு பரபரப்பான அதிரடி ஆக்ஷனுடன் அட்டகாசமாக விடை அளிக்கிறது ‘கர’ திரைப்படத்தின் மீதிக்கதை.
கதையின் நாயகன் கரசாமி என்ற கரவாக தனுஷ் நடித்திருக்கிறார். இறுக்கமான முகத்துடன் முதலில் சிறு சிறு திருட்டுகளில் ஈடுபடுகிறவராகவும், பின்னர் வங்கிக்கொள்ளை வரை செல்பவராகவும் பிரமாதப்படுத்தியிருக்கிறார். தேர்ந்த திருடராக மட்டுமின்றி, வறுமையில் உழலும் மனைவியை நல்ல நிலையில் வைத்து பராமரிக்க வேண்டும் என்று ஏங்கும் நல்ல கணவராக, அப்பாவின் உடலை அடக்கம் செய்ய அலையும் பொறுப்புள்ள மகனாக, “அப்பா சாவுக்கு நான் தான் காரணம். என்னை மன்னித்துவிடு” என்று அம்மாவின் காலில் விழுந்து உருக்கமாகக் கதறும் நல்ல பிள்ளையாக, தேவைப்படும் இடங்களில் அதிரடி ஆக்ஷன் காட்டுபவராக, வங்கியின் வசூல் கொடுமையால் பாதிக்கப்பட்ட சாமானியர்களுக்கு உதவும் மாமனிதனாக… தன் முகபாவம் மற்றும் உடல்மொழியாலேயே சகல பரிமாணங்களையும் துல்லியமாகக் காட்டி, ஒற்றை ஆளாக படத்தைத் தோளில் சுமந்து ரசிக்க வைத்திருக்கிறார். பாராட்டுகள் தனுஷ்!
நாயகனின் காதல் மனைவி செல்லியாக மமிதா பைஜு நடித்திருக்கிறார். சில காட்சிகளே வந்தாலும் அசல் ராமநாதபுரம் மாவட்ட கிராமத்துப் பெண்ணாக திரையில் அசத்தியிருக்கிறார். திருட்டை கைவிட்ட தன் கணவர், மீண்டும் திருடத் தொடங்கியிருப்பது தெரிந்து உடைந்து அழும் காட்சியில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அவரது கதாபாத்திரத்தை இன்னும் கூடுதலாகப் பயன்படுத்தியிருக்கலாம்.
டிஎஸ்பி வரதனாக சுராஜ் வெஞ்சரமூடு நடித்திருக்கிறார். பிரபலமான ஒரு வழக்கைத் தீர்த்து புகழடைய வேண்டும் என்று ஏங்கும் காவல்துறை அதிகாரியை அப்படியே கண்முன் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறார். கண்ணாடியில் பார்த்து தனது சிரிப்பை உறுதி செய்வது, பிடிபட்ட சாதாரண குற்றவாளி மீது புகழுக்காக ஏகப்பட்ட பொய் வழக்குகளை ஜோடிப்பது, தன்னைத் தாக்கிவிட்டு தப்பிச் சென்ற குற்றவாளியைப் பிடிக்க வெறிகொண்டு அலைவது என சிறப்பான நடிப்பால் தனது கதாபாத்திரத்துக்கு நியாயம் செய்திருக்கிறார் சுராஜ் வெஞ்சரமூடு.
நாயகனின் அப்பா கந்தசாமியாக கே.எஸ்.ரவிக்குமார் நடித்திருக்கிறார். வங்கியில் கடன் வாங்கி அவதிப்படுகிற அதே வேளை, தனது முன்னோர்களின் பூர்விக நிலத்தை இழக்க மறுத்து பிடிவாதம் காட்டும் அருமையான கதாபாத்திரம். யதார்த்தமாகவும், எமோஷனலாகவும் நடித்து, பார்வையாளர்களைக் கலங்கடித்திருக்கிறார் ரவிக்குமார்.
நாயகனின் அம்மாவாக வரும் ஸ்ரீஜா ரவி, தாய்மாமன் காசி மாயனாக வரும் கருணாஸ், கூட்டாளி முருகேசனாக வரும் பிருத்வி பாண்டியராஜன், வங்கியின் பிராந்திய மானேஜர் முத்துச்செல்வனாக வரும் ஜெயராம், வயோதிக விவசாயியாக அடையாளம் காணமுடியாத அளவுக்கு நரைத்த தலைமுடியும் தாடியுமாக வரும் எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்டோர் தத்தமது கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பை குறைவின்றி நிறைவாக வழங்கியிருக்கிறார்கள்.
‘போர் தொழில்’ என்ற கிரைம் திரில்லர் வெற்றிப் படத்தைக் கொடுத்த இயக்குநர் விக்னேஷ் ராஜா, இந்த ‘கர’ படத்தை எழுதி இயக்கியிருக்கிறார். ’ஒரு திருடன் பற்றிய கதை’ என்ற சட்டகத்துக்குள், வங்கியில் ’லோன்’ வாங்கி ’லோல்’ படும் கிராமத்து விவசாயப் பெருங்குடி மக்களின் துயரத்தையும், வங்கிகளின் மனிதாபிமானமற்ற அணுகுமுறையையும் அப்பட்டமாக சித்தரித்து சபாஷ் வாங்குகிறார் இயக்குநர். ஆக்ஷனோடு எமோஷனையும் மிக்ஸ் பண்ணி, போரடிக்காமல் சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும் படத்தை நகர்த்திச் சென்றுள்ளார். பாராட்டுகள் விக்னேஷ் ராஜா.
தேனி ஈஸ்வரின் அருமையான ஒளிப்பதிவு, ஜி.வி.பிரகாஷின் மிரட்டலான பாடலிசை மற்றும் பின்னணி இசை, ஸ்ரீஜித் சாரங்கின் ஷார்ப்பான படத்தொகுப்பு, தினேஷ் காசியின் தரமான ஸ்டண்ட் அமைப்பு உள்ளிட்ட நேர்த்தியான தொழில்நுட்பங்கள் படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்துள்ளன.
’கர’ – தனுஷின் தனித்துவமான நடிப்புக்காகவும், இயக்குநரின் தனித்துவமான கதையமைப்புக்காகவும் திரும்பத் திரும்ப பார்த்து ரசிக்கலாம்!
ரேட்டிங்: 4/5
