“தெலுங்கு திரையுலகில் எழுத்தாளர்களுக்கு நல்ல சம்பளம் வழங்கப்படுகிறது!” – ஞானவேல் ராஜா

ராமலட்சுமி சினி கிரியேஷன்ஸ் சார்பில் நாகபாபு தயாரித்துள்ள படம் ‘என் பெயர் சூர்யா, என் வீடு இந்தியா’. அல்லு அர்ஜூன், அனு இம்மானுவேல், அர்ஜூன், சரத்குமார், நதியா, பொமன் இரானி நடித்திருக்கும் இந்த படம் வரும் மே 4ஆம் தேதி உலகமெங்கும் வெளியாக இருக்கிறது. தமிழ்நாடு முழுக்க சக்தி ஃபிலிம் பேக்டரி சார்பில் சக்திவேலன் வெளியிடுகிறார்.

தெலுங்கு, தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் ஒரே நாளில் வெளியாகும் இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

“ஆந்திராவில் ஞானவேல் ராஜா ஒரு பிராண்ட். அவர் வெளியிட்ட அனைத்து படங்களுமே வெற்றிப்படங்கள் தான். அல்லு அர்ஜூன் நடிக்கும் அடுத்த படத்தை ஞானவேல் தான் தயாரிக்கிறார். 10 ஆண்டுகளுக்கு முன்பு ராகவா லாரன்ஸ் நடித்த ‘லட்சியம்’ படத்துக்குp பிறகு இந்த படத்தை தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும்  எடுக்க ஆசைப்பட்டோம். சில காரணங்களால் டப் செய்து மட்டுமே வெளியிட முடிந்தது. போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகளை விஜய் பாலாஜி சிறப்பாக செய்து கொடுத்தார். அல்லு அர்ஜூன் கேரியரில் இது ஒரு சிறந்த படம். இந்த படத்தை பார்த்தவுடன் ‘என் பெயர் ஸ்ரீதர், என் வீடு இந்தியா’ என்று தான் சொல்லத் தோன்றியது. பாகுபலி, பாகமதி உட்பட தெலுங்கு படங்களை தமிழ்நாட்டில் முழுமனதோடு வரவேற்ற அனைத்து தமிழ் உள்ளங்களுக்கும் நன்றி. இந்த படத்துக்கும் உங்கள் ஆதரவு கிடைக்கும் என நம்புகிறோம்” என்றார் தயாரிப்பாளர் ஸ்ரீஷா ஸ்ரீதர் லகடபாடி.

“பாகுபலிக்கு பிறகு இந்திய மொழிகளில் ஒரே நாளில் வெளியாகும் இந்த படத்தில் நான் வேலை செய்ததில் மிகவும் பெருமைப்படுகிறேன். இந்தியாவுக்காக எது வேண்டுமானாலும் செய்யலாம் என்ற கதாபாத்திரம் தான் நாயகன் அல்லு அர்ஜூன் கதாபாத்திரம். தளபதி ரஜினி சார், நடிகர் சூர்யா என சூர்யாவுக்கும், தமிழ் சினிமாக்கும் மிகப்பெரிய தொடர்பு உள்ளது. ஏஆர்.ரகுமானுக்கு ஒரு வந்தே மாதரம் மாதிரி. விஷால் சேகருக்கு இந்த ஆல்பம் இருக்கும். படத்துக்கு தேவையான அனைத்தையும் தயாரிப்பாளர்கள் வழங்கி இருக்கிறார்கள். படத்தை பார்க்கும்போது அந்த பிரம்மாண்டத்தை  ரசிகர்கள் உணர்வார்கள்” என்றார் வசனகர்த்தா விஜய் பாலாஜி.

50 நாட்கள் கழித்து இந்த பிரஸ் மீட்டில் உங்களை சந்திப்பது மகிழ்ச்சி. ஸ்ட்ரைக்கிற்கு பிறகு விஷால் தலைமையில் நிறைய தீர்மானங்களை நிறைவேற்றியிருக்கிறோம். ஆந்திராவை பார்த்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது. அங்கு தயாரிப்பாளர்கள், நடிகர்களிடையே ஒற்றுமை இருக்கிறது. அதனால் தெலுங்கு திரைத்துறையே சுபிக்‌ஷமாக இருக்கிறது. மும்பையில் கூட தெலுங்கு சினிமா பற்றி தான் பேச்சு இருக்கிறது. தமிழ் சினிமாவில் நடிகர்கள் சம்பளம் நிர்ணயம் செய்ய வேண்டும். அல்லு அர்ஜூன் தனது 18வது படத்திலேயே மிகவும் அனுபவம் மிக்க  ஹீரோவாக இருக்கிறார். மிகப்பெரிய பட்ஜெட்டில் இந்த படம் உருவாகியிருக்கிறது. தெலுங்கு திரையுலகில் எழுத்தாளர்களுக்கு நல்ல சம்பளம் வழங்கப்படுகிறது. அப்படி எழுத்தாளராக இருந்த பல பேரும் இன்று முன்னணி இயக்குனர்கள். அப்படி எழுத்தாளராக இருந்த வம்சி தான் இந்த படத்தை இயக்கியிருக்கிறார். அனைத்து மொழிகளிலும் படம் நிச்சயம் வெற்றி பெறும்” என்றார் ஸ்டுடியோகிரீன் ஞானவேல்ராஜா.

“பருத்தி வீரன் படத்திலிருந்து என் வாழ்வில் ஒவ்வொரு கட்டத்திலும் ஞானவேல் ராஜாவின் பங்களிப்பு இருந்து வந்திருக்கிறது. பாகுபலிக்கு பிறகு பல மொழிகளில் எடுக்க நினைத்த படம். தமிழிலேயே எடுத்த படம், தமிழ்நாட்டில் ஸ்ட்ரைக் நடந்த காரணத்தால் டப்பிங் படமாக வெளியிட வேண்டியதாகி விட்டது. பல டப்பிங் படங்கள் நேரடி தமிழ் படங்களாக வெளிவரும். ஆனால் இந்த படமோ நேரடி படமாக வந்து இருக்க வேண்டியது. ஸ்ட்ரைக் மூலம் ஏற்பட்ட சிறிய வேலை தொய்வினால் டப்பிங் படமாகவே வெளிவருகிறது. கேப்டன் பிரபாகரன் படத்துக்குப் பிறகு சரத்குமார் வில்லனாக நடிக்கிறார். இது ஒரு ஆக்‌ஷன் படம் எனபதையும் தாண்டி குடும்ப உறவுகளையும் பிரதிபலிக்கும் படம். முதல் முறையாக இந்த படத்தை விலை கொடுத்து வாங்கியிருக்கிறேன். படத்தின் மீது அந்த அளவு நம்பிக்கை இருக்கிறது” என்றார் படத்தின் தமிழ்நாடு விநியோகஸ்தர் சக்திவேலன்.